|
ஜெனீவாவில் கடந்த 22 ஆம், 23 ஆம் நாட்களில் நடந்த சிறிலங்கா அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் இறுதியில் ஏப்ரல் மாதம் 19, 20, 21 ஆம் திகதிகளில்- சரியாக இரண்டு மாதங்களில்- அடுத்த கட்டப்பேச்சுவார்த்தைகளை நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்தமுறை (2002இல்) விடுதலைப் புலிகளுக்கும்- சிறிலங்கா அரசிற்கும்- ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம்-இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் பொதுவில் ஒருமாத கால இடைவெளியில் இடம்பெற்றன. ஆனால் தற்போதைய பேச்சுவார்த்தைகள் இரண்டு மாதங்களின் பின்னெனத் தீர்மானிக்கப்பட்டிருப்பது சற்று அதிக கால இடைவெளி எனக் கூறுவது தவறாக மாட்டாது. ஆனால், இக்கால இடைவெளியானது நிச்சயமாக அடுத்த கட்டப் பேச்சுக்களை நடத்துவதற்கான தயாரிப்பிற்கவோ, பேச்சுக்களை ஏற்பாடு செய்வதில் உள்ள வசதியீனங்கள் காரணமாகவே இருக்க வாய்;பில்லை. ஏனெனில் இனப்பிரச்சினைக்கு எவ்வளவு விரைவில் தீர்வு காணப்படுமோ அதற்கு உதவுவதற்குச் சர்வதேச சமூகம் தயாராகவே உள்ளது. இந்நிலையில் இரண்டுமாத காலம் என்பது ஜெனீவாவில் பேச்சுவார்த்தையில் காணப்பட்ட இணக்கப்பாட்டை அமுல் செய்வதற்கான கால அவகாசமாகவே கொள்ளத்தக்கதாகும். அதாவது ஜெனீவாப் பேச்சுவார்த்தையில் காணப்பட்ட முக்கிய இணக்கப்பாடான இராணுவத்துணை ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களைக் களையவும், அவர்களை வடக்கு-கிழக்கில் இருந்து வெளியில் கொண்டு செல்வதற்குமான கால அவகாசமாகவே எடுத்துக் கொள்ளத்தக்கதாகும். ஆனால், ஜெனீவாவில் பேச்சுவார்த்தை முடிவுற்றுச் சுமார் ஒரு வாரகாலம் கடந்துவிட்ட நிலையிலும் இது தொடர்பான எந்தவித நடவடிக்கையும் அரசாங்கத்தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்டதாக இல்லை. அரசாங்கத்தரப்பு நடவடிக்கைகளைப் பார்த்தால் ஏதோ முதலாம் கட்டப்; பேச்சுவார்த்தை முடிந்;துவிட்டது இனி அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்குத் தயாரானால் போதும் என்பது போன்றுள்ளது. அதாவது வழமை போலவே பேச்சுவார்த்தை மேசையில் அரசாங்கத்தரப்பு வெற்றிபெற்றுவிட்டது போன்றும்- இன்னும் சில வாரத்தின் பின்னர் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் ஏனையவற்றையும் சாதித்து விடலாம் என்பது போன்றும் அதன் செயற் பாடுள்ளது. மேலும் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையை எங்கு நடத்துவது? என்பது குறித்தும் அரசாங்கத்தரப்பு பிரஸ்தாபிக்கத் தொடங்கியுள்ளது. இதன் பிரகாரம் அடுத்த கட்டப்பேச்சுவார்த்தை யப்பானில் நடத்துவது? குறித்து அது ஆர்வம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், விடுதலைப் புலிகளைப் பொறுத்து அவர்களின் நிலைப்பாடு அவ்வறானதாக இல்லை. அவர்கள் இவ் இரண்டு மாத காலத்தை ஜெனீவாவில் இணக்கம் காணப்பட்ட விடயங்களை அமுலாக்கம் செய்யும் காலப் பகுதியாகவே பார்கின்றனர். இக்காலப்பகுதிக்குள் ஜெனீவா இணக்கப்பாடுகள் குறித்து அரசாங்கம் முன்னேற்றம் காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாது இருப்பின் அடுத்த கட்டப்பேச்சுக்களின் விடுதலைப் புலிகள பங்கேற்பது இலகுவான தொன்றாக இருக்கமாட்டாது. யுத்த நிறுத்த உடன்பாட்டின் அமுலாக்கத்திற்கு விடுதலைப் புலிகள் ஏற்கனவே நீண்டகால அவகாசத்தைக் கொடுத்துவிட்டனர். அதாவது நான்கு ஆண்டுகால அவகாசம் கொடுக்கப் பட்டிருந்தது. ஆனால் அக்காலப்பகுதிக்குள் நிறைவேற்றாதவற்றில் ஒரு சிலவற்றை- அதிலும் முக்கியமான ஓரிரண்டை நிறைவேற்றுவதற்கான கால அவகாசமாகவே ஏப்ரல் வரையிலான கால இடை வெளிகொள்ளத்தக்கது. ஆகையினால் இவ் இரண்டு மாதகால அவகாசமானது இணக்கம் காணப்பட்ட உடன்பாட்டு விதிகளை அமுலாக்கம் செய்வது பேச்சுவார்த்தையை முன்னேற்றுவதற்கான சூழலை உருவாக்குவதற்கான ஒரு காலப்பகுதியாகவே கொள்ளத்தக்கதாகும். ஆனால் வடக்கு-கிழக்கில் நடைபெறும் சம்பவங்கள் அரசு ஜெனீவா இணக்கப்பாட்டிற்கு ஏற்ப நடந்து கொள்ளத்தாயாராக இல்லை என்பதை வெளிப்படுத்துமாப் போன்றதாகவே உள்ளது. அதாவது வடக்கு-கிழக்கில் ஆயுதக்குழுக்களின் செயற்பாடு முடக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. இவ் ஆயுதக் குழுக்கள் வழமை போலவே செயற்பட்டு வருவதாகத் தெரிகின்றது. அதாவது ஆயுதக்குழுக்களின் அடாவடிகள் தொடர்வதோடு, அவற்றை கட்டுப்படுத்தவோ, குழுக்களை வெளியேற்றவோ அரசு முன்வருவதாகவும்; தெரியவில்லை. இந்நிலை தொடருமானால், அரசாங்கம் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகளை எங்கு நடத்துவது? என்பதை ஆராய்வதில் பயன் ஏதும் ஏற்பட்டு விடப்போவதில்லை. ஏனெனில் ஜெனீவாப் பேச்சுவார்த்தையின் அமுலாக்கமே அடுத்த கட்டப்பேச்சுவார்த்தையைத் தீர்மானிக்கும் திறவு கோலாக இருக்க முடியும். இது விடுதலைப் புலிகளால்; ஏற்கனவே கூறப்பட்ட விடயமே ஆகும். eelanatham
|