|
கருணா குழுவைச் சேர்ந்த மற்றொரு இளைஞர் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரண் அடைந்துள்ளதாகவும் அவர் விரைவில் திடுக்கிடும் தகவல்களை ஊடகவியலாளர்களிடம் தெரிவிப்பார் என்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் தெரிவித்துள்ளார்.
கனடாவில் ஒலிபரப்பாகும் தமிழ்ச்சோலை வானொலிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தயாமோகன் கூறியுள்ளதாவது: மட்டக்களப்பு நகரை அண்மித்த பகுதியில் இராணுவத் துணை ஆயுதக்குழுக்கள், இராணுவப் புலனாய்வுத்துறையினரின் மக்கள் மீதான கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. கடந்த சில நாட்களாக படைத்துணைக் குழுக்கள் மக்கள் மத்தியில் ஆயுதங்களுடன் நடமாடி மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் கச்சேரிக்கு முன்பாக உள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டடத்தில் சிறிலங்கா இராணுவத் துணைக்குழு ஒரு அலுவலகத்தைத் திறந்து தமது செயற்பாட்டை தொடங்க சிறிலங்கா இராணுவத்தினர் துணைபுரிந்துள்ளனர். ஜெனீவா பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இராணுவத் துணைக்குழுவினர் அலுவலகங்களை அமைத்து ஆயுதங்களுடன் மக்கள் மத்தியில் நடமாடி ஆயுதங்களை அலுவலகங்களுக்குள் வைத்திருக்கும் அளவிற்கு மட்டக்களப்பு நகரப்பகுதி தற்போது மாறியுள்ளது. சிறிலங்கா அரசாங்கமும் அரச படைகளும் இப்படித்தான் செயற்படுகின்றனவே தவிர ஜெனீவாப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதையே பார்க்கமுடிகின்றது. அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த கருணா குழு உறுப்பினர், ஜெனீவாப் பேச்சுக்களைக் குழப்பும் நோக்கில் தாக்குதலை நடத்துமாறு இராணுவப் படை அதிகாரி ஒருவர் தனது உறுப்பினர் ஒருவருக்கு பணித்து அனுப்பியதாக தெரிவித்திருந்தார். பேச்சுவார்த்தையைக் குழப்பி மீண்டும் போரை தொடங்க வேண்டும் என்ற எண்ணமே சிறிலங்கா படை உயர் அதிகாரிகளுக்கும், அரச தலைமைகளுக்கும் உள்ளன என்பதையே இது வெளிப்படுத்துகிறது. ஜெனீவாப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இராணுவத் துணை ஆயுதக்குழுக்களிடம் இருந்து களையப்படும் என்பதை சிறிலங்கா இராணுவமோ, சிறிலங்கா அரசோ ஏற்பதாக இல்லை என்பதையே இது காட்டுக்கிறது கருணா குழுவில் தற்போது 40 முதல் 60 வரையானோர் உள்ளதாக சரணடைந்த இளைஞர் தெரிவித்தார். அவர்களில் சிலர் இந்தியாவில் இருந்து வந்துள்ளனர். அவர்களில் முன்னாள் ஈ.என்.டி.எல்.எஃப் உறுப்பினர்கள். அவர்களை இந்தியாவில் இருந்து சிலர் தயார் செய்து அனுப்புகின்றனர். ஆயுதங்களுடன் அவர்களுக்கு சிறிலங்கா அரசினால் ஆயுதங்கள் வழங்கப்பட்டன என்றும் அந்த இளைஞர் கூறினார். இந்நிலையில் மற்றொரு கருணாகுழு உறுப்பினர் ஒருவர் எம்மிடம் சரணடைந்துள்ளார். அவர் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். அது குறித்த ஊடகவியலாளர் சந்திப்பை மிக விரைவில் நடத்த உள்ளோம் என்றார் தயாமோகன். நெருடல் இணையம்
|