|
தமிழீழம் என்றும் பணியாது! |
|
|
|
Tuesday, 11 April 2006 |
|
கனடா விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்துள்ளது. இதையடுத்து கனடாவில் விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரித்தல் போன்ற நடவடிக்கைகள் சட்டப்படி குற்றங்கள் ஆகின்றன. ஆனால் இந்த தடையில் ஆச்சரியப்படுவதற்கும் அதிர்ச்சி அடைவதற்கும் எதுவும் இல்லை. ஐரோப்பாவிலும் சில காலங்கள் கழித்து தடைகள் வந்துதான் தீரும். இதற்கான காரணங்கள் "ஐரோப்பிய ஒன்றியத்தை எழுப்பாத எழுக தமிழ்" மற்றும் "ஈழம் - ஈரான் - அமெரிக்கா - ஜெயதேவன்" ஆகிய கட்டுரைகளில் ஓரளவு குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழீழத்தின் நலன்களும் மேற்குலக நாடுகளின் நலன்களும் வேறு வேறானவை. மூன்றாம் உலகின் ஒடுக்கப்படும் மக்களின் புரட்சிக்கு வழிகாட்டியாக விளங்கும் விடுதலைப்புலிகளும் ஏகாதிபத்தியமும் நீண்ட காலத்திற்கு கை குலுக்க முடியாது. திரு. அன்ரன் பாலசிங்கம், திரு பாலகுமார் போன்றவர்களை கொள்கை வகுப்பாளர்களாக கொண்ட தமிழீழத்தின் வெளியுறவுக் கொள்கையானது தென் அமெரிக்க, கியூபா சார்பு கொண்டது. இன்று வரை "சோசலிச" தமிழீழத்தை அமைப்போம் என்பதே விடுதலைப்புலிகள் எடுக்கும் உறுதிமொழியாக இருக்கின்றது. இவ்வாறான கொள்கைகளோடு அடங்க மறுக்கின்ற ஒரு வல்லமை மிக்க இனத்தை பலவீனப்படுத்தவே மேற்குலகம் விரும்புகிறது. பேச்சுவார்த்தைகளுக்குள் தள்ளி நீண்ட காலம் இழுத்தடித்து, தமிழினத்தின் விடுதலை உணர்வையும், இராணுவ வல்லமையையும் மழுங்கடிப்பதே இந்த நாடுகளின் நோக்கம். விடுதலைப்புலிகள் போரின் பக்கம் திரும்புவது போல் தெரிந்தால், எதாவது ஒரு வகையில் அவர்களை மிரட்டி வழிக்கு கொண்டு வர இந்த மேற்குலகம் முனையும். அதன் ஒரு வெளிப்பாடாகவே கனடாவில் தடை என்கின்ற செய்தியையும் இணைத் தலைமை நாடுகளின் வன்னிப் பயணத்தையும் பார்க்க வேண்டும்.
துணைப்படைகளின் அதிகரித்த தாக்குதல்களாலும், மாமனிதர் திரு விக்னேஸ்வரனின் படுகொலையாலும் சீற்றமுற்றிருக்கும் விடுதலைப்புலிகள் யுத்தத்தை ஆரம்பித்து விடுவார்களோ என்று மேற்குலகம் அஞ்சுகிறது. இதனால் விடுதலைப்புலிகளை அச்சுறுத்தும் நோக்கில் கனடாவில் தடை செய்துள்ளார்கள். அது மட்டுமன்றி வன்னிக்கு நேரடியாகச் சென்று, பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும்படி அழுத்தமும் கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள். அத்தோடு டோரா படகின் மீதான தாக்குதலுக்கு கண்டனமும் தெரிவித்து "பெரியண்ணன்" போன்று வெளிப்படையாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள். சிறிலங்கா அரசும் தன்னுடைய பங்கிற்கு மட்டக்களப்பில் கருணா குழுவிற்கு அரசியல் அலுவலகம் திறந்து கொடுத்துள்ளது. இன்று நடந்த அனைத்து விடயமும், விடுதலைப்புலிகள் மீது இராஜதந்திர ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் அழுத்தம் கொடுக்கின்ற நடவடிக்கைகளே.
வன்னிப் பயணமும், கருணா குழுவின் அரசியல் அலுவலக திறப்பு முடிந்த பின்பு இரண்டு தாக்குதல்கள் நடைபெற்றன. யாழ் குடாவில் மிருசுவில் பகுதியில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 5 படையினர் பலியாகினர். மட்டக்களிப்பில் கருணா குழுவில் அரசியல் அலுவலகத்திற்கு அருகில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல்களை பொங்கியெழும் மக்கள் படையே நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல்கள் பலருக்கு பல செய்திகளை சொல்கிறது. தமிழீழ தேசம் எவ்விதமான அழுத்தங்களுக்கும் அடி பணிந்து தன்னுடைய உரிமைகளை விட்டுக் கொடுக்காது என்பதும் இந்தச் செய்திகளில் ஒன்றாக இருக்கலாம். webeelam.
|