|
சர்வதேச ரீதியில் புலிகளுக்கு எதிரான தடைகளை விதிக்கச் செய்யும் தென்னிலங்கையின் முயற்சி, "பிள்ளையார் பிடிக்க குரங்கான கதை' போலாகப் போகின்றது போலும். முதல் சுற்றுஜெனிவாப் பேச்சில் எட்டப்பட்ட முடிவை நடைமுறைப்படுத்தாமல்-அதற்கு முரணாகச் செயற்பட்டதன் மூலம்-அடுத்த சுற்று அமைதிப் பேச்சுகளுக்கான வாய்ப்பை சிதறடித்திருக்கும் தென்னிலங்கை அரசு, பேச்சுத் தடைப்பட்டிருப்பதற்கான குற்றச்சாட்டை மட்டும் புலிகள் மீது சுமத்தித் தான் தப்பப் பார்க்கின்றது. ஒரு நாட்டின் அரசு என்ற தகைமை, ஒரு தனிநாட்டுக்கான பிரசார பலம் ஆகியவற்றை வைத்துக் கொண்டு, அமைதி முயற்சிகள் தடைப்பட்டுத் தேங்கியிருப்பதற்கான குற்றச்சாட்டை புலிகள் மீது "வெற்றிகரமாகச்' சுமத்திய தென்னிலங்கை அரசு, அதன் மூலம் "ஒரு கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்த' எத்தனித்தது.
ஒரு புறம் "பேச்சுக்குத் தடைபோட்டு இடைஞ்சல் பண்ணுபவர்கள் புலிகளே' என்று சர்வதேச சமூகத்துக்குக் காட்டிக் கொண்டு, மறுபுறம் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சர்வதேச சமூக அங்கத்தவர்கள் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிப்பதன் மூலமே புலிகளைப் பேச்சு மேசைக்குக் கொண்டு வர முடியும் என்றும் பிரசாரம் செய்தது தென்னிலங்கை. பௌத்த, சிங்களப் பேரினவாதத் தரப்பின் இந்த "கோயபல்ஸ் பிரசாரம்' ஓரளவு எடுபட்டிருக்கின்றது என்பது வாஸ்தவம்தான். இருபத்தியைந்து ஐரோப்பிய நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் புலிகளைத் தடை செய்யத் தயாராகி வருகின்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சரி. ஐரோப்பிய ஒன்றியம் புலிகளுக்குத் தடை விதிக்குமானால்-அந்த நடவடிக்கை, தென்னிலங்கை அரசும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற "சர்வதேசப் பொலிஸ்காரர்களும்' எதிர்பார்ப்பதுபோல-நம்புவதுபோல-தமிழீழ விடுதலைப் புலிகளைப் பேச்சு மேசைக்கு இழுத்து வருமா என்பதுதான் கேள்வி. எதற்காக-எந்த நோக்கத்திற்காக-இந்தத் தடை முயற்சியில் ஐரோப்பிய ஒன்றியம் இறங்குகின்றதோ, அதற்கு எதிர்மாறான விளைவுகளையே அது உருவாக்கப் போகின்றது என்பதை ஐரோப்பிய ஒன்றியம் உட்பட இந்தத் தடை விதிப்புக்கு பின்புலத்தில் நின்ற சகல தரப்புகளும் உணரும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதுதான் யதார்த்தமாகும். தமது நியாயமான உரிமைகளுக்காக-கௌரவமான வாழ்வுக்காக-இனத்தின் இருப்புக்காக-கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் போராடி வருபவர்கள் ஈழத் தமிழர்கள். சிங்கள, பௌத்த பேரினவாத அடக்குமுறைக்கு எதிராக மூன்று தசாப்த காலம் அஹிம்சை வழியில்-சாத்வீக நெறியில்-போராடிய தமிழர்கள் அந்தப் போராட் டங்களும் ஆயுத முனையில் பலவந்தமாக அடக்கி ஒடுக்கப்பட்ட நிலையில் ஆயுத வழியிலேயே பதிலளிக்க முற்பட்டனர். அதன் விளைவே கடந்த இரண்டு தசாப்த காலக் கொடூர யுத்தம். இந்த இரண்டு தசாப்த காலக் கொடூர யுத்தத்துக்கு இடையிலும் கூட அமைதித் தீர்வுக்குப் பல தடவைகள் முயற்சிகள் எடுக்கப்பட்டன. எனினும், ஒவ்வொரு முறையும் பௌத்த, சிங்களப் பேரினவாதத் தலைமைகளினால் தமிழர் தரப்பு ஏமாற்றப்பட யுத்தம் மோசமானதே தவிர, அமைதி முயற்சிகள் முன்நகரவேயில்லை. பெரும் போரழிவுகளுக்கும், பேரழிவுகளுக்கும் பின்னர், ஒரு தனியரசுக்கான நிர்வாக, கட்டுமான அடிப்படைகளைக் கட்டியெழுப்பி, தமிழர் தாயகத்தில் கணிசமான பிரதேசத்தைத் தமது ஆட்சிய திகாரக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, ஓர் இறைமையுள்ள தேசத்திற்குரிய அடிப்படைகளை எட்டிய நிலையில்-இன்று யுத்த நிறுத்தம் செய்து-அமைதி வழியில் மாற்றுத் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு மீண்டும் வாய்ப்பளித்து நிற்கின்றனர் அவர்கள். தனித் தேசத்தை ஸ்தாபிக்கும் நகர்வில் கணிசமாக முன்னேறிய பின்னரும்-அதற்கான விடுதலைப் போரில் குறிப்பிடத்தக்க இராணுவ சாதனைகளையும், இமாலய வெற்றிகளையும் எட்டிய பின்னரும், மீண்டும் இந்த அமைதி முயற்சிகளுக்குத் தமிழர் தரப்பு இணங்கி வந்திருக்கின்றது என்றால் அதற்கு ஒரு காரணம் உண்டு. இந்த அமைதி முயற்சிகள், சர்வதேசப் பங்களிப்பில்-சர்வதேசத்தின் கண் முன்- சர்வதேசப் பிரதிநிதிகளாக மூன்றாம் தரப்பு அனுசரணையாளர்களின் பிரசன்னத்தில்- நடைபெறுவதால் இந்த முயற்சிகள் மூலம் தங்களின் நியாயமான அபிலாஷைகளுக்கு நீதியான தீர்வு ஒன்று கிட்டும் என அவர்கள் எதிர்பார்த்தமைதான். ஆனால், ஐரோப்பிய ஒன்றிய உத்தேசத் தடை போன்ற நடவடிக்கை மூலம் இருபத்தியைந்து சர்வதேச நாடுகளில் இருந்து ஒரே சமயத்தில், ஒரேயடியாக தமிழர் தரப்பு-அமைதி முயற்சிகளில் தமிழர்களின் ஏக, அதிகாரபூர்வ பிரதிநிதிகளான புலிகள் அமைப்பு-ஒதுக்கப்படும் அல்லது தனிமைப்படுத்தப்படும் சூழ்நிலை உருவாகுமானால், இந்த அமைதி முயற்சிகள் மீது முற்றாக நம்பிக்கையை இழக்கும் நிலைமையே தமிழர்களுக்கு ஏற்படும். அது மீண்டும் யுத்த வழியை நாடுவதற்குத் தமிழர்களை நெட்டித் தள்ளும்; தூண்டும். இந்த அடிப்படையைப் புரியாமல், தென்னிலங்கை விரிக்கும் வலைக்குள் சிக்கி, புலிகளைத் தடை செய்ய எத்தனிக்கிறது ஐரோப்பிய ஒன்றியம். அதுதான் விசனத்துக்குரியது uthayan
|