|
இலங்கை அகதிகளின் வருகை குறித்து விசாரணை |
|
|
|
Friday, 26 May 2006 |
|
இலங்கை அகதிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து நேரில் விசாரணை நடத்துவதற்கென புதுடில்லியிலிருந்து எல்லைப் பாதுகாப்புப்படை பொலிஸ் அதிகாரி அலெக்ஸாண்டர் தமிழகம் வந்துள்ளார்.டில்லியிலிருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் நண்பகல் மதுரை வந்த அவர் அங்கிருந்து மண்டப அகதி முகாமுக்கு சென்றார். அங்கு தங்கியிருந்து அவர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
இவர் அதிகாரியிடம் நேரில் விசாரணை நடத்துவார். சில தினங்களுக்கு முன் ஒரே நாளில் மட்டும் இலங்கையில் இருந்து தனுஷ்கோடி கடற்கரைக்கு 234 பேர் வந்தனர். பொலிஸார் விசாரணைக்கு பின்னர், அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இந்தாண்டு இதுவரை ஆயிரத்து 750 க்கும் மேற்பட்டோர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். மேலும், பல ஆயிரம் பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகதிகளுக்குத் தேவையான குடிநீர், உணவு, தங்குமிடம் உடைகள் ஆகிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அதிகாரிகள் முயற்சி எடுத்து வருகின்றனர். மேலும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் முகாம்களை விரிவுபடுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அகதிகள் போர்வையில் தமிழகத்தில் விடுதலைப் புலிகள் ஊடுருவி விடக்கூடாது என்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவே அகதிகளாக வருவோர் பல்வேறு சோதனைகள், விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். விசாரணையில் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே அகதிப்பட்டியலில் சம்பந்தப்பட்டவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
நெருடல் இணையம்
|