|
மண்டபம் அகதிகள் முகாம் நிரம்பி வழிவதால் மாநிலத்தில் உள்ள பல்வேறு முகாம் களு க்கும் அகதிகள் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றனர். இலங்கையிலிருந்து வரும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாம் நிரம்பிவிட்டது.
இதற்கு மேலும் அதிக அளவிலான அகதிகளை அங்கே இருப்பு வைக்க முடியாது என்று அதிகாரிகள் தமிழக அரசுக்குத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு தங்கியுள்ள அகதிகளை பிற முகாம்களுக்கு அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மண்டபம் முகாமில் தஙக வைக்கப்பட்டுள்ள 73 அகதிகள் திருச்சி அருகே உள்ள கொட்டப்பட்டு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 18 பேர் குழந்தைகள், 23 பேர் பெண்கள். அரசுப் பேருந்தில் பலத்த பாதுகாப்புடன் இவர்கள் திருச்சி முகாமுக்குக் கொண்டு வரப்பட்டனர். மேலும் பல அகதிகள் இந்த முகாமுக்குக் கொண்டு வரப்படவுள்ளதாகத் தெரிகிறது. 97 அகதிகள் தமிழகம் வருகை: இந் நிலையில் இன்று இலங்கையிலிருந்து இன்று 97 அகதிகள் தமிழகம் வந்துள்ளனர். பேசாலை, திரிகோணமலை, வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 97 அகதிகள் அரிச்சமுனை, ஓலைக்குடா உள்ளிட்ட பகுதிகளுக்கு படகுகள் மூலம் வந்தனர். சோதனை மற்றும் விசாரணைக்குப் பின்னர் அனைவரும் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புதிய தமிழகம் பேரணி: இந் நிலையில் ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும், கச்சத் தீவை மீட்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் ஜூலை 1ம் தேதி பேரணி நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி பேசுகையில், இலஙகைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்சினையைத் தீர்க்க சர்வதேச அமைப்புகள் மூலம் இலங்கையை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும். தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. அவர்களுக்கும் தேசிய அடையாள அட்டையை வழங்கி சுனாமி நிவாரண¬ம் கிடைக்க இந்தியா உதவ வேண்டும். கச்சத்தீவுகள் பகுதியை இந்தியா மீண்டும் பெற வேண்டும். அப்போதுதான் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 1ம் தேதி மதுரையில் புதிய தமிழகம் சார்பில் பேரணி நடத்தப்படவுள்ளது. இதில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும் என்றார் கிருஷ்ணசாமி நெருடல் இணையம்
|