|
|
|
பலாலி படைத்தளம் மீதான தாக்குதல்: பேரெழுச்சியில் தமிழ்நாடு |
|
|
|
Saturday, 12 August 2006 |
யாழ். பலாலி படைத்தளம் மீதான விமானத்தாக்குதல் செய்திகள் வெளியான உடனேயே தமிழ்நாட்டில் பேரெழுச்சியான அலை ஏற்பட்டுள்ளது.
சேலத்தில் உலகத் தமிழர்கள் குவிந்திருக்கும் உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டு வளாகத்திலிருந்து எமது செய்தியாளருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரும் தமிழர் தேசிய இயக்கத் தலைவருமான பழ.நெடுமாறன் அளித்த உற்சாக நேர்காணல்:
பல்வேறு தடைகளைத் தாண்டி உலகத் தமிழர் பேரமைப்பு மாநாடு சேலத்தில் இன்று
சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் வந்து
குவிந்து கொண்டிருக்கிற தமிழர்கள், புலிகளின் வான்படை முதன்முதலாக
செயற்பட்டு இறங்கிய செய்திகள் கேட்டு மகிழ்ச்சியை கொண்டாடி மகிழ்கின்றனர்.
மாநாட்டில் பங்கேற்றிருக்கும் தமிழர்கள் மட்டுமல்லாது உலகமெங்கும் வாழும்
தமிழர்களும் உற்சாகமடைந்துள்ளனர். 5 ஆயிரம் ஆண்டுகால தமிழர் வரலாற்றில்
முதன்முறையாக தமிழர்களுக்கே சொந்தமான வான்புலிகள் படையை செயலில் இறக்கி
எதிரிகளை மட்டுமல்ல எதிரிகளுக்கு உதவுகின்ற நாடுகளைக் கூட கலக்கியிருக்கிற
இந்த சாதனை புரிந்த தமிழீழ வான்படையினருக்கும் தமிழீழத் தேசியத் தலைவர்
பிரபாகரன் அவர்களுக்கும் உலகத் தமிழர் பேரமைப்பு தனது வாழ்த்துகளையும்
பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது என்றார் நெடுமாறன்.
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி தெரிவித்துள்ளதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் மீதான விமானத் தாக்குதலையும் பொறுத்துக்
கொண்டு நீண்ட பொறுமையை உடைத்துக் கொண்டு சர்வதேசம் மற்றும் நோர்வேத்
தரப்பினரை மதித்து மாவிலாறு நீர்த்தேக்கத்தை திறந்துவிட முன்வந்தும்
இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காணுவோம் என்று திமிர்த்தனம் பேசிய
சிறிலங்கா இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதலை
நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதல் மூலம் சிங்கள இராணுவத்துக்கு ராடார் கருவிகளைக்
கொடுத்திருந்தவர்களுக்கும் பயிற்சி அளித்திருந்த இந்தியாவுக்கும் பாடம்
கற்பிக்கப்பட்டுள்ளது. ஒரு சம்பளம் பெறுகிற இராணுவத்தினருக்கும் ஒரு
நாட்டினது விடுதலைக்குப் போராடுகிற போராளிக்குமான வித்தியாசத்தை உணர்ந்து
இந்திய அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ளவேண்டும்.
இலங்கைப் பிரச்சனையில் தலையிடமாட்டோம் என்ற போலித்தனமான நிலைப்பாட்டைக்
கைவிட்டுவிட்டு இந்திய அரசின் கொள்கைதான் தமிழ்நாடு அரசின் கொள்கை என்ற
நிலைப்பாட்டையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.
ஒரு தமிழன் என்கிற வகையில்- தமிழ் இன உணர்வாளன் என்கிற வகையில் தமிழீழ
விடுதலைப் புலிகளின் முதலாவது வான்படை தாக்குதல் செய்தி கேட்டு என்
நெஞ்சமெல்லாம் பூரித்து நிற்கிறது என்றார் கொளத்தூர் தா.செ. மணி.
இதனிடையே தமிழ்நாட்டின் பரமக்குடியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சாதி ஒழிப்பு முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஈழத் தமிழர் பாதுகாப்பு தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, தமிழ் தமிழர்
இயக்கப் பொதுச்செயலாளர் தியாகு, ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க நிர்வாகி
பொழிலன், இமானுவேல் பேரவையின் சந்திரபோஸ், புரட்சி வேங்கைகள் அமைப்பின்
குருவிஜயன், சாதி ஒழிப்பு முன்னணியின் வழக்கறிஞர் இன்குலாப், ஆதித்தமிழர்
பேரவையின் கோவை இரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் இரவு 10 மணியளவில் ஈழத் தமிழர் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்
தமிழர் இயக்கப் பொதுச்செயலாளர் தியாகு உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரது
பேச்சின் முடிவில் வான்படை தாக்குதல் குறித்த செய்தியை கொளத்தூர் மணி,
தியாகுவிடம் தெரிவிக்க அவர் பொதுக்கூட்டத்தில் இச்செய்தியை அறிவித்த போது
கூடியிருந்த தமிழர் பெருங்கூட்டம் கைதட்டி ஆராவரம் எழுப்பி தனது
மகிழ்ச்சியைத் தெரிவித்தது.
சிறிலங்கா இராணுவம் மீது நடத்தப்பட்டிருக்கும் வான்படை தாக்குதலானது
தமிழ்நாட்டில் பாரிய எழுச்சி அலையை நேற்று இரவு முதல் உருவாக்கி உள்ளது
என்பது மிகையல்ல என்பதை வெளிப்படுத்தும் விதமாக பரமக்குடி கூட்டம்
இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நெருடல் இணையம்
|
|