|
இன்று கொழும்பு நகரின் பாதுகாப்பு யாருடைய கைகளில் உள்ளது. சிறிலங்கா முப்படைகள் மற்றும் பொலிசாரிடமா? அன்றி கடத்தல் கும்பல்களின் கைகளிலா? அரசாங்கம் கூறுகின்றது கொழும்பு அரச படைகளின் உயர்பாதுகாப்பிற்குள் உள்ளதென்று.
ஆனால் கொழும்பில் ஆட்கடத்தல், கப்பம் பெறுதலும், படுகொலை புரிதலும் சாதாரண நிகழ்வாகவுள்ளது.
இன்று உலகிலுள்ள பெரும் நகர்களில் (மெட்ரோ பொலிட்டன்) உச்சப்பாதுகாப்புக்
கொண்ட நகர்களில் கொழும்பும் ஒன்று. விடுதலைப் புலிகளின் தாக்குதலைத்
தடுக்கவெனக் கூறி அனைத்து முன்னுரிமையும் பாதுகாப்பிற்கு என்ற ரீதியில்
சிறிலங்கா ஆயுதப் படையினருக்கு சர்வ அதிகாரங்களுடன் வளங்களும்
ஒதுக்கப்பட்டுள்ளன.
இப்பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துச் சிறிலங்கா சனாதிபதி உட்பட படை உயர்
மட்டத்திலும் திருப்தியும், மகிழ்ச்சியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது
தற்போதைய அரசாங்கத்தின் சாதனை எனவும் பெருமை கூடப் பேசப்பட்டு வருகின்றது.
இப்பாதுகாப்பு ஏற்பாடுகள் நிமித்தம் வீதிக்கு வீதி சோதனைச் சாவடிகளும்
காவலரண்களும் அமைக்கப்பட்டுள்ளதோடு முக்கிய தெருக்களுக்கு விசேட
பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு நகருக்குள் நுழையும்
அனைத்து வாகனங்களும் பிரதான நுழைவாயில்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு;
சோதனைக்குட்படுத்தப்பட்டவை என்ற அடையாளத்துடனேயே உள்நுழைகின்றன.
இதேவேளை நகர் புலனாய்வாளர்களால் நிரம்பி வழிவதோடு மாணவர்களில் இருந்து
ஆட்டோ சாரதிகள் வரையில் புலனாய்வுச் சேவையில் பயன்படுத்தப்படுகின்றனர்.
இதற்கான பயிற்சியும் செயற்பாட்டிற்கான ஒழுங்கு வசதிகளும் அவர்களுக்கு
வழங்கப்பட்டும் உள்ளது.
ஆனால் இத்தகைய நிலையிலும் கொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்படுவதும்,
அவர்கள் கொழும்பு நகருக்கு உள்ளேயோ, அன்றி வெளியேயோ பல நாட்கள்
கடத்தியவர்கள் கப்பப்பணம் பெறப்படும் வரையில் தடுத்து
வைக்கப்பட்டிருப்பதும் புதிராகவே உள்ளது.
இதனால் சிறிலங்கா
ஆயுதப்படைத்தரப்பும் அரச தரப்பும் இதில் கொண்டுள்ள பாத்திரம் குறித்து
கேள்வி எழும்பு கின்றது.
கொழும்பில் இது வரையில் பல தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு கோடிக்கணக்கான
பணம் கப்பமாகப் பெறப்பட்டுள்ளது. இதில் சில கடத்தல் சம்பவங்கள் மட்டுமே
வெளிவந்துள்ளன. பல சம்பவங்கள் வெளிவரவில்லை. அவை இரகசியமாகவே
முடிக்கப்பட்டு விட்டன.
இவ்வாறு முடிக்கப்படுவதற்கு கடத்தல்கள், கப்பம் பெறுதல் தொடர்பாக
சிறிலங்காக் காவல்துறையில் முறைப்பாடு செய்தலோ அன்றி விசாரணை நடத்துமாறு
கோருவதோ பயன் ஏதும் ஏற்பட்டு விடப்போவதில்லை. மாறாக, மேலும் ஆபத்தை
விளைவிப்பவையாக இருக்கலாம் என்ற காரணத்தினாலேயே இவை வெளி வராமலே
முடக்கப்பட்டு விடுகின்றன.
ஆகையினால் இதிலுள்ள முக்கிய விடயங்கள் என்னவெனில் உயர் பாதுகாப்புக் கொண்ட
நகரில் நிகழும் இக் கடத்தல், பணம் பறிப்பு என்பன தொடர்பாகச் சிறிலங்காப்
பாதுகாப்புத்துறையோ அன்றி அரசாங்கமோ பொறுப்பேற்கத் தயாராக இல்லாது
இருப்பதோடு, அது குறித்துத் தாம் கவலை எதுவும் கொள்ளத் தேவையில்லை என்பது
போல் நடந்து கொள்வதும் தான்.
ஆனால் இக் கடத்தல்கள் குறித்து சிறிலங்கா ஆட்சியாளர்களும், ஆயுதப்
படையினரும் தம்மால் எதனையும் செய்ய முடியாதெனக் கையை விரிப்பதானது
இவற்றின் பின்னணியில் ஆட்சியாளர்களினதும், ஆயுதப் படையினதும் கைகளில்
உள்ளன என்பதை உறுதி செய்வதாகிறது. அவ்வாறு இல்லாது விடினும் கூட இதற்கான
பொறுப்பு தனக்கில்லையென அரசாங்கம் எந்த வகையிலும், புறந்தள்ளி விட
முடியாது.
இன்று மேற்கொள்ளப்படும் கடத்தல்கள், பணம் பறிப்பு, படுகொலைகள்
என்பனவற்றின் பின்னணியில் டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்ற ஒட்டுக்குழுக்கள்
உள்ளதாகப் பரவலான அபிப்பிராயம் உண்டு.
ஆனால் இது அரசாங்கத்தின் அங்கீகாரமோ
அன்றி ஆயுதப் படையினரின் ஒத்துழைப்பு இன்றியோ மேற்கொள்ளப்படுபவையல்ல.
அவ்வாறு அது சாத்தியமானதுமல்ல. அவ்வாறு அது சாத்தியமானால் சிறிலங்கா அரசு
பெருமைப்பட்டுக் கொள்ளும் பாதுகாப்பு ஏற்பாட்டில் அர்த்தம் இருக்க
முடியாது.
ஆகையினால் கடத்தல், கப்பம் பெறுதல், படுகொலை செய்தல் என்பவை அரசாங்கத்தின்
ஆசீர்வாதத்துடன் அன்றி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன என்பதே
நிதர்சனமானதாகும்.
ஆனால் இதில் பெரும்பாலும் அரசாங்கமும் சில ஒட்டுக்குழுக்களும்
பங்குதாரர்களாகச் செயற்படுவதாகவே கொள்ளமுடியும். அதாவது ஆட்சியாளரின்
அரசியல் இலக்கும் ஒட்டுக்குழுக்களின் பணத் தேவையும், இவற்றின் மூலம் நிறை
வேற்றப்படலாம். ஆனால் எது எவ்வாறு இருப்பினும் இதற்கான பொறுப்பை மகிந்த
ராஜபக்ச அரசாங்கமே ஏற்றல் வேண்டும்.
நன்றி: ஈழநாதம்
நெருடல் இணையம்
|