|
தேசத் துரோகியாக எரிக் சொல்ஹெய்மை பிரகடனம் செய்ய வேண்டும்: ஜே.வி.பி. |
|
|
|
Tuesday, 19 September 2006 |
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அளித்த நள்ளிரவு யோசனையை ஏற்று நோர்வே மற்றும் இணைத் தலைமை நாடுகளுக்கு எதிராக ஜே.வி.பி. களமிறங்கியுள்ளது.
கொழும்பு ஊடகவியலாளர்களிடம் ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச கூறியதாவது:
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம்
இங்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.அவர் சிறிலங்காவின் ஆளுநர் போன்று
செயற்படுகிறார். சிறிலங்காவின் எதிரியாக எரிக் சொல்ஹெய்மை பிரகடனப்படுத்த
வேண்டும்.
எரிக் சொல்ஹெய்ம் இங்கு வந்தாலும் கிளிநொச்சி செல்ல அனுமதிக்கக்கூடாது.
இணைத் தலைமை நாடுகளின் அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் மறுப்பு கூறியும்
இணைத் தலைமை நாடுகள் ஏன் பதில் தரவில்லை? தனது நிலைப்பாட்டில் உறுதியாக
இருக்க வேண்டும் அல்லது சிறிலங்கா அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்க
வேண்டும்.
இலங்கையில் மனித உரிமைகள் அதிகமாக மீறப்படுகின்றன என்ற யோசனை ஜெனீவா
மாநாட்டில் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் சிறிலங்காவை ஒரு
தோல்வியடைந்த நாடாக பிரகடனப்படுத்த முயற்சி நடக்கிறது.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறிய வேண்டும். அந்த ஒப்பந்தத்தால்
அரசாங்கத்துக்கு புலிகள் நிபந்தனை விதிக்கின்றனர். யுத்த நிறுத்த
ஒப்பந்தம் செத்துவிட்டது. அது அடக்கம் செய்யப்படவில்லை.
எனவே அதனை
முழுமையாக இரத்துச் செய்ய சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றார் அவர்.
நெருடல் இணையம்
|