|
சம்பூர் ஆக்கிரமிப்பு ஒரு மோசமான செயற்பாடு: கண்காணிப்புக்குழு |
|
|
|
Tuesday, 19 September 2006 |
 போர் நிறுத்த காலத்திலும் தமிழர் தாயகப் பிரதேசத்தை ஆக்கிரமித்திருப்பது சிறிலங்கா அரசாங்கத்தின் ஒரு மோசமான செயற்பாடு என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை மாவட்ட அரசியல்துறை செயலகத்தில் விடுதலைப் புலிகளுக்கும்
இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினருக்கும் இன்று செவ்வாய்க்கிழமை
சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்பில் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன்,
மாவட்ட கண்காணிப்புக்குழுத் தலைவர் சிகி, மட்டக்களப்பு மாவட்ட
கண்காணிப்புக்குழுத் தலைவர் சிகுட்சன் ஆகியோர் பங்கேற்றனர்.
இச்சந்திப்பின் போது கண்காணிப்புக் குழுவினரிடம் சி.எழிலன் கூறியதாவது:
போர் நெருக்கடியான காலங்களில் மக்கள் தமது வாழ்விடங்களில் நிம்மதியான வாழ்க்கையினை வாழ்ந்து வந்தனர்.
ஆனால் தற்போது போர்நிறுத்தம் நடைமுறையில் உள்ளதாக கூறப்படுகின்ற நிலையில்
சிறிலங்கா இராணுவத்தினர் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட ஈவிரக்கமற்ற
ஆக்கிரமிப்பு நடவடிக்கை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து மரங்களின் கீழும்,
கொட்டில்களின் கீழும் அவல வாழ்வு வாழ்கின்றனர்.
இந்நிலையில் தற்போதும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளதா?
இடம்பெயர்ந்து அவல வாழ்வினை வாழ்ந்து வருகின்ற மக்கள் தமது பகுதிகளில் சுதந்திரமாக இயல்பு வாழ்வு வாழ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
திருக்கோணமலையில் தமிழின அழிப்பு நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக சிறிலங்கா
இராணுவத்தினர் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரை
பயன்படுத்துகின்றனர்.
அன்புவழிபுரத்தில் சிறுமி உட்பட நால்வரை சிறிலங்கா இராணுவத்தினர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இதற்கு உதாரணமாகும்.
துணை இராணுவக் குழுவினரது செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாங்கேணி சிறிலங்கா இராணுவ சோதனைச் சாவடியூடாக தமிழீழ விடுதலைப் புலிகளின்
கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கு பாரிய
கெடுபிடிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தடை செய்யப்படாத பொருட்களைக்கூட மக்கள் கொண்டு செல்லமுடியாத அவலநிலையினை சிறிலங்கா இராணுவத்தினர் உருவாக்கியுள்ளனர்.
இச்செயற்பாடுகளை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் சி.எழிலன்.
இதற்குப் பதிலளித்த போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினர், தற்போதைய
சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையானது மோசமான செயற்பாடு என்பதை
தாம் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்ததுடன் போர்நிறுத்தம் நடைமுறையில் இல்லை
என்று இரண்டு தரப்பினரும் தெரிவிக்கும் பட்சத்திலேயே தாம் போர்நிறுத்தக்
கண்காணிப்புப் பணியில் இருந்து விலகுவதா இல்லையா என்ற நிலைப்பாட்டினை
வெளிப்படுத்தமுடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
|