பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow இலங்கை அரசாங்கம் புலிகளுடனான நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளை நிராகரிக்கின்றது
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

இலங்கை அரசாங்கம் புலிகளுடனான நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளை நிராகரிக்கின்றது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 26 September 2006

இலங்கைக்கு நிதி வழங்கும் குழுக்களின் இணைத் தலைமை நாடுகள், சமாதானப் பேச்சுக்களுக்கு அழைப்புவிடுத்து செவ்வாய்க் கிழமை விடுத்த அறிவிப்புக்கு கொழும்பு அரசாங்கம் அளித்துள்ள பதிலானது, அது தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வம் காட்டாத அதே வேளை, யுத்தத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது என்பதை தெளிவாக்கியுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் இலங்கை சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதை மேற்பார்வை செய்யும் நோர்வே ஆகிய இணைத் தலைமை நாடுகள் உத்தியோகபூர்வமாக விடுத்த அறிக்கையில், இரு தரப்பும் நிபந்தனையற்ற பேச்சுக்களில் பங்குபற்ற விரும்புவதை வரவேற்றதோடு உடனடியாக வன்முறைகளுக்கு முடிவுகட்டுமாறும் அக்டோபர் தொடக்கத்தில் ஒஸ்லோவில் அவசர பேச்சுவார்த்தைகளை நடத்தவும் அழைப்புவிடுத்தன. 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை "வேண்டுமென்றே மீறியது" சம்பந்தமாக ஆழமான அச்சத்தை வெளிப்படுத்திய இந்த அறிக்கை, ஆகஸ்ட்டில் பாடசாலை மீது விமானப்படை குண்டுத் தாக்குதல் நடத்தியமை உட்பட பல அட்டூழியங்களையும் வெளிச்சம்போட்டுக் காட்டியது. இந்த விமானத் தாக்குதலில் பெருந்தொகையான பாடசாலை மாணவிகள் உயிரிழந்தனர்.

புலிகளை கீழறுப்பதையும் மற்றும் ஆத்திரமூட்டுவதையும் இலக்காகக் கொண்ட வன்முறைகள் மற்றும் படுகொலைகளில் இராணுவமும் அதன் துணைப்படை பங்காளிகளும் ஈடுபட்டு வந்த போதிலும் கூட, இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ கடந்த நவம்பரில் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து தன்னை ஒரு "சமாதான மனிதனாக" காட்டிக்கொள்ள முயற்சித்து வந்துள்ளார். அவர் "மனிதாபிமான காரணங்களுக்காக" ஜூலையில் புலிகளின் பகுதியில் உள்ள மாவிலாறு தண்ணீர் அணைக்கட்டின் மதகைக் கைப்பற்றுவதற்காக ஒரு பரந்த இராணுவத் தாக்குதலை முன்னெடுத்தார். துருப்புகள் சம்பூர் மற்றும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் புலிகளின் நிலைகளைக் கைப்பற்றுவதற்காக மேலும் தாக்குதல்களை முன்னெடுத்த நிலையில், அரசாங்கம் அதை வெறும் "தற்காப்பு" நடவடிக்கையே என வலியுறுத்தியதோடு இராஜபக்ஷ சமாதானப் பேச்சுக்களை நடத்துவதற்கான தனது தயாரிப்புக்களை வற்புறுத்திக் கூறிக்கொண்டிருந்தார்.

எவ்வாறெனினும், இப்போது அந்தப் பேச்சுக்கள் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டு வந்துள்ள போதிலும், இராஜபக்ஷ அரசாங்கம் சந்திப்புகள் நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உருவாக்கிக் கொள்ளப்பட்ட ஒரு தொகை எதிர்ப்புக்கள், எச்சரிக்கைகள் மற்றும் இறுதி நிபந்தனைகளையும் எழுப்பியுள்ளது. செவ்வாய்க் கிழமை நடந்த ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில், பாதுகாப்பு பேச்சாளர் கேஹேலியே ரம்புக்வெல்ல, உடனடியாக எந்தவொரு "நிபந்தனையற்ற பேச்சுக்களையும்" நிராகரித்ததோடு சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்துவதாக நோர்வே அனுசரணையாளர்கள் மீதும் குற்றஞ்சாட்டினார்.

அரசாங்கம் "நிபந்தனையற்ற" பேச்சுக்களுக்குத் தயாராக உள்ள போதிலும், பலாலி இராணுவ முகாம் மற்றும் விமானத் தளத்திற்கு புலிகளின் பீரங்கிகளால் உருவாக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலை "மட்டுப்படுத்த" இராணுவம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கும் என இராஜபக்ஷ, தூதுவர் எரிக் சொல்ஹெயிமிடம் குறிப்பிட்டதாக ரம்புக்வெல்ல தெரிவித்தார். "இலங்கை ஒரு இறைமை கொண்ட நாடு" என்ற காரணத்தால், இடத்தையும் திகதியையும் தீர்மானிக்கும் உரிமை சொல்ஹெயிமிற்கு கிடையாது என பிரகடனம் செய்த அவர், கூட்டத்தைத் தீர்மானித்ததையும் எதிர்த்தார்.

புதன் கிழமை, அரசாங்கத்தின் சமாதான செயலகம் மேலும் தடங்கல்களை சேர்த்து ஒரு உத்தியோகபூர்வ பிரதிபலிப்பை வெளியிட்டது. அரசாங்கம் இராணுவ நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உரிமையைக் கொண்டுள்ளது என்பதை ஏற்கனவே வலியுறுத்தியுள்ள நிலையில், இந்த அறிக்கையானது "ஏற்றுக்கொள்ளக் கூடிய மற்றும் உறுதியான மோதல் நிறுத்தத்திற்கு புலிகளின் தலைவரின் தெளிவான விருப்பத்தைக்" கோருகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், இராணுவம் தனது "தற்காப்பு" நடவடிக்கைகளில் தொடரவுள்ள அதேவேளை, அதற்குப் பிரதிபலிக்க மாட்டோம் என்ற புலிகளின் எழுத்து மூலமான உத்தரவாதத்திற்கு அவர்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டும்" என்பதாகும்.

 

தவறாகப் பெயரிடப்பட்டுள்ள சமாதான செயலகமும் எந்தவொரு பேச்சும் சம அந்தஸ்த்து அடிப்படையில் நடக்கக் கூடாது என்பதை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. "இலங்கையில் சமாதான முன்னெடுப்பானது இறைமை உரிய அரசின் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் மற்றும் பயங்கரவாதத்தை பயன்படுத்தும் ஒரு ஆயுதக் குழுவுக்கும் இடையிலேயே நடக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவது முக்கியமானது" என அது பிரகடனம் செய்துள்ளது. இந்த எச்சரிக்கை, 2002ல் யுத்த நிறுத்தம் கைச்சாதிடப்பட்ட பின்னர் உடன்பட்ட சமாதான முன்னெடுப்புகளின் அடிப்படைகளை விளைபயனுள்ள வகையில் கீழறுக்கும்.

புலிகள் சட்ட விரோதமாக ஆயுதங்களைப் பெறுவதை தவிர்க்கவும் மற்றும் விதிக்குட்பட்டு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக விளைபயனுள்ள ஒரு தடையை விதிக்கவும் நடைமுறை சாத்தியமான ஒரு இயக்கத்தை சர்வதேச சமூகம் திணிக்க வேண்டும்" என இந்த அறிக்கை அழைப்பு விடுக்கின்றது. நிச்சயமாக, அரசாங்கம் அதனது ஆயுதக் கொள்வனவையும் மற்றும் இராணுவ மேம்படுத்தலையும் நிறுத்த கேட்டுக்கொள்ளப்பட மாட்டாது.

சமாதான செயலகம், "தெளிவாக தவறான எண்ணத்தைத் தோற்றுவிக்கும் முல்லைத்தீவு பாடசாலை மீதான குண்டுத் தாக்குதல் போன்ற" இணைத் தலைமை நாடுகளின் அறிக்கையில் உள்ள "ஆதாரத் தவறுகள்" சம்பந்தமாகவும் "ஆழமான கவலை" கொண்டிருந்தது. ஆகஸ்ட் 14 நடந்த குண்டுத் தாக்குதலை அடுத்து அந்தப் பிரதேசத்திற்கு சென்ற யுனிசெப் மற்றும் இலங்கை கண்காணிப்புக் குழுவும் பாதிக்கப்பட்டவர்கள் பாடசாலை மாணவர்களே அன்றி அரசாங்கம் குற்றஞ்சாட்டுவது போல் "சிறுவர் போராளிகள்" அல்ல என்பதை உறுதிப்படுத்தியிருந்தனர்.

இத்தகைய நிபந்தனைகளுடனான உடன்படிக்கை புலிகள் தரப்பில் பெரும் நெருக்கடியை தொடர்ந்தும் ஏற்படுத்தும் என்பதிலேயே அரசாங்கம் அக்கறை செலுத்துகிறது. புலிகள் கடந்த இரு மாதங்களில் அரசாங்கம் கைப்பற்றிய பிரதேசங்களில் இருந்து வெளியேறி 2002 யுத்த நிறுத்தத்தின் விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளனர். சமாதன செயலகத்தின் போர் தொணி, கொழும்பு ஆளும் வட்டாரத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் யுத்த ஆரவாரத்தையே பிரதிபலிக்கின்றது.

சமாதான செயலகம் அறிக்கை விடுத்த அதே தினம், குறிப்பாக ஜனாதிபதி இராஜபக்ஷ தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான "உத்தியோகப்பூர்வமற்ற பேச்சுக்களை" நடத்த சிங்களத் தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர்களை சந்தித்தார். இராஜபக்ஷ சிரித்துக்கொண்டே ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்கவை அணைத்துக்கொள்ளும் நிழற்படம் ஒன்று கொழும்பு ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது. இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் (ஸ்ரீ.ல.சு.க) ஒரு உத்தியோகபூர்வ கூட்டணியை அமைப்பது சம்பந்தமாக தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில், ஜே.வி.பி. 2002 யுத்த நிறுத்தத்தை உடனடியாக தூக்கியெறிவது உட்பட யுத்தப் பிரகடனத்திற்கு சமமான ஒரு தொகை கோரிக்கைகளை ஜே.வி.பி. முன்வைத்தது.

புதன் கிழமை இணைத் தலைமை நாடுகளின் அறிக்கைக்கு எதிரான ஒரு பகிரங்க வசைமாரியில், ஜே.வி.பி. பாராளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச, அரசாங்கத்தின் பிரதிபலிப்புக்களின் உண்மையான உள்ளடக்கத்தை உளறித் தள்ளிவிட்டார். "புலிகள் மீதான தற்போதைய இராணுவத் தாக்குதலை நிறுத்த வேண்டாம்" என்றும் "புலிகள் தமது ஆயுதங்களை கீழே வைக்கும் வரை அவர்களுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் நடத்த வேண்டாம்" எனவும் அரசாங்கத்தை நெருக்கினார். வேறு வார்த்தைகளில் சொன்னால், புலிகளின் முழுமையான சரணடைவுக்கு குறைந்த எதையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதாகும்.

புலிகளை காக்க செயற்படுவதாக இணைத் தலைமை நாடுகளை வீரவன்ச கண்டனம் செய்தார். "புலிகள் பிரச்சினையில் இருக்கும் போதெல்லாம் சர்வதேச சமூகம் என சொல்லிக்கொள்ளும் இவர்கள் புலிகளைப் பாதுகாக்க வந்துவிடுகிறார்கள்" என பிரகடனம் செய்த வீரவன்ச, கூட்டத்திற்கு நேரம் மற்றும் இடத்தை ஒதுக்குவதற்கு அரசாங்கத்தை தொடர்பு கொள்ளத் தவறியதாக இணைத் தலைமை நாடுகளை விமர்சித்தார்.

வீரவன்சவின் கருத்துக்கள் இராணுவ வட்டாரத்திலும் அரசாங்கத்தினுள்ளும் உள்ள எண்ணங்களை சுட்டிக்காட்டுகின்றன. புலிகளின் பிரசேதம் ஒன்றைக் கைப்பற்றுவதில் இராணுவம் கண்ட சிறிய ஆரம்ப வெற்றியானது, நாட்டின் நீண்டகால இரத்தக்களரி உள்நாட்டு யுத்தத்தை இராணுவ வழியில் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்ற மாயையை மீண்டும் தூண்டிவிட்டுள்ளது. அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் இருந்து எதிர்பார்ப்பது சமாதானப் பேச்சுக்களை அல்ல. மாறாக புலிகளின் இராணுவ இயலுமைகளை அழிக்கவும் மற்றும் தீவின் வடக்கு கிழக்கு பூராவும் தமிழ் சிறுபான்மையினர் மீது வெளிப்படையான அரசாங்க ஆளுமையை திணிப்பதற்கும் அவர்களின் உதவியை எதிர்பார்க்கின்றது.

இராஜபக்ஷ இரண்டு காரணங்களுக்காக ஜே.வி.பி. யின் உணர்வுகளுக்கு வெளிப்படையாக உடன்படவில்லை. முதலாவது, ஏற்கனவே கடந்த இரு தசாப்தங்களில் குறைந்தபட்சம் 65,000 உயிர்களைப் பலிகொண்ட ஒரு யுத்தத்திற்கு மீண்டும் திரும்புவதை எதிர்க்கும் வெகுஜன எதிர்ப்பு. இரண்டாவது, பக்கச் சார்பாக நடந்துகொள்வதாக இணைத் தலைமைகளை வெளியில் விமர்சித்தாலும், பெரும் வல்லரசுகளின், குறிப்பாக அமெரிக்காவின் அரசியல் ஆதரவு அரசாங்கத்திற்குத் தேவை என்பது இராஜபக்ஷவிற்குத் நன்றாகத் தெரியும்.

இராஜபக்ஷ வெளிப்படையாக அதிகளவில் யுத்தத்தை நாடுகின்ற போதிலும், இணைத் தலைமை நாடுகள் தம்மைப் பாரபட்சமற்றவர்களாகக் காட்டிக்கொள்ள முயலும் அதே வேளை கடந்த பத்து மாதங்களாக இராஜபக்ஷவின் பின் சுழல்கின்றனர். பெரும் வல்லரசுகள் வன்முறைகளுக்காக புலிகளைக் கண்டனம் செய்யும் அதே வேளை, "கட்டுப்பாட்டை வெளிக்காட்டுவதற்காக" அரசாங்கத்தைப் பாராட்டுகின்றன. குறிப்பாக உலகம் பூராவும் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் இருந்து புலிகளுக்கு கிடைக்கும் நிதி மூலங்களையும் மற்றும் அரசியல் ஆதரவையும் தடுப்பதற்காக ஒரு இராஜதந்திர பிரச்சாரத்தை முன்னெடுத்த புஷ் நிர்வாகம், புலிகளை "பயங்கரவாத அமைப்பாகத்" தடை செய்ய கனடாவையும் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தையும் நெருக்கியது.

செவ்வாய்க் கிழமை வெளியான இணைத் தலைமைகளின் அறிக்கை இன்னொரு தடவை புலிகள் மீது சுமையைத் திணித்தது. "பயங்கரவாதத்தையும் வன்முறைகளையும் கைவிட்டு" "ஐக்கிய இலங்கைக்கு ஒரு அரசியல் தீர்வின் தேவைக்காக சமரசத்தை ஏற்படுத்திக்கொள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும்" என அது கோரிக்கை விடுத்துள்ளது. மாவிலாறு, சம்பூர் போன்ற புலிகளின் பிராந்தியத்தைக் கைப்பற்றியதிலும் மற்றும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் முகமாலையில் புலிகளின் முன்னரங்குகளிலும் இராஜபக்ஷ யுத்த நிறுத்தத்தை பகிரங்கமாக மீறியதைப் பற்றி இணைத் தலைமைகளுக்கு சொல்வதற்கு எதுவும் இருக்கவில்லை. இராணுவம் மீண்டும் ஆனையிறவைக் கைப்பற்ற இலக்கு வைத்திருப்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. யாழ்ப்பாணத்திற்கான மூலோபாய நுழைவாயிலான ஆனையிறவை அரசாங்கம் 2000 ஆண்டில் முதற் தடவையாக இழந்தது.

அமெரிக்காவை அடித்தளமாகக் கொண்ட சிந்தனைக் களமான ஸ்டாட்போர் (ஷிtக்ஷீணீtயீஷீக்ஷீ), அரசாங்கத்தின் மூலோபாயம் பற்றி சந்தேகமின்றி உள்ளது. கிழக்கில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைப் பற்றிக் குறிப்பிட்ட பின்னர், "இலங்கையில் காலத்திற்கு செயலாற்றுதல்" என்ற தலைப்பிலான கட்டுரை குறிப்பிட்டதாவது: "இலங்கை அரசாங்கத்தில் இரத்த நாற்றம் வீசுவதோடு, இப்போது ஆனையிறவு மற்றும் முகமாலை நகரம் போன்று தற்போது புலிகளின் கைகளில் உள்ள பிரதேசங்களைக் கைப்பற்றி, எதிரிகளை வட இலங்கையில் உள்ள அவர்களது பாரம்பரிய தளத்திற்கு மேலும் விரட்டுவதன் மூலம், யாழ்ப்பாணத்திற்கான அனைத்துப் போக்குவரத்து இணைப்புக்களையும் கைப்பற்ற வழிவகுக்கும் நிலைகளை கைப்பற்ற முயற்சிக்கின்றது."

புலிகளின் இதற்கான பிரதிபலிப்பு, மீண்டும் ஒரு முறை அவர்களின் அரசியல் வலுவின்மையையும் மற்றும் வங்குரோத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது. புலிகளின் அரசியல் தலைவர் சு.ப. தமிழ்செல்வன், யுத்த ஆபத்துப் பற்றி எச்சரித்ததோடு "பிரதேச எல்லைகளுக்கும், யுத்த நிறுத்த உடன்படிக்கையின் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் இராஜபக்ஷ அரசாங்கம் கட்டுப்படுவதை உறுதிப்படுத்தவும், அதன் மூலம் பேச்சுக்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கவும் சர்வதேச சமூகத்திற்கு" அழைப்பு விடுத்தார். சமாதானப் பேச்சுக்களில், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக தீவின் வடக்கு மற்றும் கிழக்கை ஒரு மலிவு உழைப்புக் களமாக மாற்றுவதன் பேரில் சிங்களத் தமிழ் ஆளும் கும்பல்களுக்கிடையில் ஒரு அதிகாரப் பகிர்வு ஒழுங்கை ஏற்படுத்துவதே அதன் முன்நோக்காக இருந்து வந்துள்ளது.

எவ்வறெனினும், இராஜபக்ஷ அரசாங்கமானது பெரும் வல்லரசுகளின் மௌன ஆதரவுடன், சமாதான முன்னெடுப்புகளை விளைபயனுள்ள வகையில் கிழித்தெறிந்துள்ளதோடு இலங்கை அரசின் மீது சிங்கள முதலாளித்துவத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக தீவை மீண்டும் ஒரு இனவாத யுத்தத்திற்குள் தள்ள முயற்சிக்கின்றது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..