|
ஈழத் தமிழர் பிரச்சினையில் கடந்த 16 ஆண்டுகாலமாக இந்திய அரசு கடைப்பிடித்து வந்த இறுக்கமான கொள்கையில் மாற்றமும் தளர்வும் ஏற்படுவதற்கான அறிகுறி சில மாதங்களாகவே தென்பட்டது கண்டு தமிழக மக்களும் உலகத் தமிழர்களும் மகிழ்ந்தனர்.
இலங்கை அரசின் சார்பில் அந்நாட்டின் குடியரசுத் தலைவர்,
பிரதமர், வெளியுறவு அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள், சிங்கள அரசியல்
கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கடந்த 16 ஆண்டுகாலமாக டெல்லிக்கு
அடிக்கடி வருகை தந்து இந்தியப் பிரதமர் மற்றும் உயர் மட்டத்தில்
உள்ளவர்களுடன் தங்கள் நிலையை விளக்கிச் செல்லும் வாய்ப்புப்
பெற்றிருந்தனர்.
இன்னமும் பெற்று வருகிறார்கள். சமரசத் தூதராகச்
செயற்பட்டுவரும் நார்வே நாட்டின் பிரதிநிதிகளும் டெல்லிக்கு அடிக்கடி
வந்து தாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து இந்திய அரசுக்குத்
தெரியப்படுத்தியே வந்துள்ளனர்.
ஆனால் கடந்த 16 ஆண்டுகாலமாக ஈழத் தமிழர்கள்
சார்பில் யாரையும் வரவேற்கவோ பேசவோ டெல்லி பிடிவாதமாக மறுத்து ஒரு
சார்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது.
இலங்கையில் போர்நிறுத்தம்
முறிவடைந்து மீண்டும் மோதல்கள் தொடங்கி ஏராளமான தமிழர்கள் இந்தியாவிற்கு
அகதிகளாக ஓடிவரும் சூழ்நிலை உருவானபோது தமிழ்நாட்டில் கொந்தளிப்பான
சூழ்நிலை உருவாயிற்று.
பல்வேறு அரசியல் கட்சியினரும் தமிழர் அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்களையும்
போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தினார்கள்.
சிங்கள விமானக் குண்டு
வீச்சின் விளைவாக 63 செஞ்சோலைச் சிறுமிகள் படுகொலை செய்யப்பட்ட
நிகழ்ச்சி தமிழ்நாட்டைத் துயரத்தில் ஆழ்த்திற்று.
கடந்த ஜூன் 16ம் தேதியன்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் தமிழகம்
எங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இவற்றில் ம.தி.மு.க.,
விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய அமைப்புகளும் பங்குகொண்டன. பா.ம.க. சார்பில்
அதனுடைய நிறுவனர் மருத்துவர் இராமதாசு கண்டன அறிக்கையை வெளியிட்டு ஆதரவு
தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது இலங்கை நாடாளுமன்றத் தமிழ்
உறுப்பினர்களை இந்தியப் பிரதமர் அழைத்துப் பேசவேண்டும் என்ற கோரிக்கை
முக்கியமாக வலியுறுத்தப்பட்டது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு
ஆகிய இருவரும் அடிக்கடி பிரதமரையும் டெல்லியில் உள்ள மற்றவர்களையும்
சந்தித்து ஈழத்தமிழர்கள் அடைந்துவரும் துன்பங்கள் குறித்து
எடுத்துக்கூறியதைத் தவிர வேறு யாரும் ஈழத்தமிழர்கள் சார்பில் டில்லிக்கு
நிலைமைகளை எடுத்துத் தெரிவிக்கவில்லை.
எனவே ஈழத்தமிழர் பிரதிநிதிகளை
டில்லி அழைத்துப் பேசவேண்டுமென்ற கோரிக்கை தமிழ்நாட்டில் இருந்து ஓங்கி
ஒலித்தது.
இதன் விளைவாக ஆகஸ்ட் மாத இறுதியில் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துப் பேசியபோது 'இலங்கையின்
நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச பிரதமர் இசைவு
தெரிவித்தார்.
உடனடியாக இச்செய்தி இலங்கைக்குத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்
தேசிய கூட்டணி சார்பில் பிரதமரைச் சந்திக்க விரும்பும் வேண்டுகோள் கடிதம்
ஒன்றினைத் தமிழக முதல்வரைச் சந்தித்த பிறகு அனுப்ப அவர்கள் முடிவு
செய்தார்கள்.
தமிழ்த் தேசிய கூட்டணியைச் சேர்ந்த சம்பந்தம், சேனாதிராஜா, சிவாஜிலிங்கம்,
கஜேந்திரன் பொன்னம்பலம், பத்மினி ஆகியோர் செப்டம்பர் முதல் வாரத்தில்
தமிழகம் வந்து சேர்ந்தனர்.
வந்ததும் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.
கருணாநிதி அவர்களைச் சந்தித்துப் பேசியபிறகே டில்லி செல்லவேண்டும்
என்பதில் உறுதியாக இருந்தனர். தமிழக முதலமைச்சருக்கும் வேண்டுகோள் கடிதம்
அனுப்பினார்கள். அத்துடன் நிற்காமல் தமிழக அரசியல் தலைவர்கள் சிலர்
மூலமும் முதலமைச்சரைச் சந்தித்துப் பேச பெருமுயற்சி செய்தனர்.
முதலமைச்சரின் அலுவலகத்திலும் தி.மு.க. அலுவலகமான அறிவாலயத்திலும் அவர்கள்
காத்துக்கிடந்தனர். ஆனால் முதலமைச்சரோ அவரது உதவியாளர்களோ எவ்விதப்
பதிலும் தராமல் காலம் கடத்தினார்கள் என்பதுதான் உண்மையாகும்.
ஆனால்
மதிப்பிற்குரிய முதலமைச்சர் 26-09-06 அன்று செய்தியாளர்களுக்கு அளித்த
நேர்காணலில் 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாரும் என்னைச் சந்திக்கவும்
இல்லை. அதுபற்றி முயற்சிக்கவும் இல்லை. அந்தத் தரப்பில் முயற்சி
மேற்கொண்டதாகக் கூறப்படுவதன் பெயர்தான் சால்சாப்பு ஆகும். என்னை யாரும்
சந்திக்கத் தொடர்புகொள்ளவில்லை என்று உண்மைக்கு மாறாக கூறியிருப்பது
மிகவும் வருந்தத்தக்கதாகும்.
முதலமைச்சர் பொறுப்பு வகிக்கும் மூத்த
தலைவரான அவர் இவ்வாறு கூறியிருப்பது அவர் வகிக்கும் பதவிப்பொறுப்புக்கு
ஏற்றதல்ல.
இந்தியப் பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகக் கடந்த இரண்டாண்டு
காலத்திற்கு மேலாக தமிழ்த் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற
உறுப்பினர்கள் தீவிரமுயற்சி செய்து வந்திருக்கிறார்கள். அவர்களின் அந்த
விருப்பத்தை பத்திரிகைகளின் வாயிலாகவும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளும்
குரல் கொடுத்துள்ளன.
இவை அனைத்தையும் தமிழக முதலமைச்சர் அறியாமலிருக்க
முடியாது. செப்டம்பர் முதல் வாரத்தின் ஆரம்ப நாட்களிலேயே தமிழ் தேசியக்
கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்னைக்கு வந்துசேர்ந்த
விவரமும் முதலமைச்சரைச் சந்திப்பதற்கு அவர்கள் தொடர்ந்து
முயற்சிசெய்கிறார்கள் என்ற விவரமும் முதலமைச்சர் அலுவலகத்தின் மூலம்
அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
உளவுத் துறையும் இதை அவருக்கு
உறுதியாகத் தெரிவித்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. பத்திரிகைகளிலும்
அவர்களின் வருகைபற்றியும் வந்துள்ள நோக்கம் குறித்தும் செய்திகள்
வெளியாகியுள்ளன.
இவை எதுவுமே தனக்குத் தெரியாது என முதலமைச்சர்
சொல்வாரானால் அது உண்மை என்று வைத்துக்கொண்டால் அவரது அலுவலகத் தில்
உள்ள உதவியாளர்களும் உளவுத் துறை அதிகாரிகளும் இதற்கான பொறுப்பை
ஏற்கவேண்டும். அவர்கள் மீது முதலமைச் சர் நடவடிக்கை எடுத்தால்தான் அவர்
கூறியதற்கு அர்த்தம் இருக்க முடியும்.
முதலமைச்சரைச் சந்தித்துவிட்டு அதன்பிறகு டில்லி செல்லவேண்டும் என்ற
திட்டத்துடன் இருந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செப்டம்பர் 7ம்
தேதியன்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து திடீரென அழைப்பு வந்தவுடன்
டில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். பிரதமர் மன்மோகன்சிங் வெளிநாடு
புறப்படுவதற்கு முன்னாள் சந்தித்துப்பேச நேரம் ஒதுக்கப்படும் என
அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் டில்லி சென்ற அவர்களை
ஏமாற்றம் வரவேற்றது.
வெளிநாடு செல்வதற்கான ஆயத்தப்பணிகளில்
ஈடுபட்டிருப்பதால் சென்றுவந்த பிறகு அவர்களைச் சந்திப்பார் என்று
கூறப்பட்டது.. அவர்களும் வேறுவழியில்லாமல் டில்லியில் காத்திருந்தார்கள்.
பிரதமர் அலுவலகத்திலிருந்து உடனே புறப்பட்டு வரும்படி கிடைத்த தகவலின்
படியே அவர்கள் டில்லி சென்றார்கள். ஆனால் இடையில் என்ன நடந்தது. இந்தச்
சந்திப்பை தடுத்து நிறுத்திய சக்திகள் எவை?
தமிழக முதல்வர் சந்திக்க மறுத்துவிட்ட நிலையில் தான் சந்திப்பதில்
பிரதமருக்கு தயக்கம் ஏற்பட்டதா? அல்லது வேறு சில சக்திகள் இடையில்
குறுக்கிட்டு இந்தச் சந்திப்பு நடைபெறாமல் தடுத்துவிட்டார்களா? என்ற
கேள்விகள் தமிழ் மக்களின் உள்ளங்களைக் குடைந்துகொண்டிருக்கின்றன.
பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவுத் துறை இணை
அமைச்சர் அகமது மற்றும் வெளியுறவுத் துறைச் செயலாளர் பதவி ஏற்க இருக்கும்
சிவசங்கர மேனன் ஆகியோரையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய
மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் களையும் தமிழ்நாடாளுமன்றக் குழுவினர்
சந்தித்துப் பேசினார்கள். மேலும் இலங்கை இனப் பிரச்சினை குறித்து
டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் ஒன்றிலும் அவர்கள் கலந்து
கொண்டார்கள். இதெல்லாம் வெளிநாட்டுத் துறையின் ஏற்பாட்டின் பேரில்தான்
நடந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவிற்குத் திரும்பியதும் தங்களைச்
சந்திப்பார் என்று ஆவலுடன் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
பிரதமர் சந்திக்க மறுத்ததற்கான காரணம் எதுவும் அவர்களுக்குத் தெரிவிக்கப்
படவில்லை. வேறுவழியின்றி அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பிச்
சென்றுவிட்டார்கள்.
கியூபா சென்றிருந்த பிரதமர் மன்மோகன்சிங் அங்கு இலங்கை குடியரசுத் தலைவர்
மகிந்த ராஜ பக்சேயை சந்தித்துப் பேசியுள்ளார். மகிந்த ராஜபச்சேயுடன்
சென்றிருந்த துரோகக் குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவையும் பிரதமர்
சந்தித்துக் கரம் குலுக்கி யுள்ளார். ஈழத் தமிழர்களால் வெறுத்து
ஒதுக்கப்பட்டு செல்லாக் காசாய்ப் போன டக்ளஸ் தேவானாந் தாவைச் சந்திக்கச்
சம்மதம் தெரிவித்த பிரதமர் மன்மோகன்சிங் கிற்கு ஈழத்தமிழ் மக்களின்
உண்மையான பிரதிநிதிகளைச் சந்திக்க நேரம் இல்லை என்று கூறுவது
ஈழத்தமிழர்களை மட்டு மல்ல, இந்தியாவில் உள்ள ஆறு கோடித் தமிழ்மக்களையும்
அவமதிப்பதாகும்.
வெந்த புண்ணில் வேலைச் சொருகுவதுபோன்ற காரியமும் டில்லியில்
நடைபெறுகிறது. செல்லாக்காசாய்ப்போன ஆனந்த சங்கரி, த. சித்தார்த்தன்,
சிறிதரன் ஆகியோர் டில்லிக்கு அழைக்கப் பட்டுள்ளனர். எதற்காக துரோகி களை
டில்லிக்கு அழைத்து இந்திய அரசு பேசுகிறது? இந்தப் பட்டியலில்
வரதராஜப்பெருமாளும் இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
இலங்கை இனப்பிரச் சினையில் கடந்த 16 ஆண்டு காலமாக இந்திய அரசு கடைப்
பிடித்துவந்த அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும் என நம்பியவர்கள் பெருத்த
ஏமாற்றத்திற்கு ஆளாகி யுள்ளனர். இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள்
கொஞ்சமும் மாறவில்லை என்பதும் இன்னமும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும்
சிங்களருக்கு ஆதரவாக வும் உள்ள சிந்தனையோட்டத் துடனேயே செயல்பட்டு
வருகிறார்கள் என்பதும் வெளிப் படையாகத் தெரியவந்துள்ளது.
இலங்கைக்கான முன்னால் இந்தியத் தூதுவர் என்.என். ஜா. ஓய்வுபெற்ற ராணுவத்
தளபதி லெப். ஜெனரல் வி.கே. சிங், பார்ப்பனப் பத்திரிகையாளர்களான இந்து
என். ராம்இ நாராயணசுவாமி போன்ற வர்களும் அரசியல் தரகரான சுப்பிரமணிய
சுவாமி போன்றவர் களும்தான் இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்களாக
உள்ளனர். இவர்களுடன் பிரதமரின் ஆலோசகர் எம்.கே. நாராயணன்
கைகோர்த்துக்கொண்டுள்ளார். இவர்கள் செய்த சதியின் விளைவாகவே இந்திய
அரசின் தமிழர் விரோதக் கொள்கை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது.
ஈழத்தமிழர்களின் உண்மை யான பிரதிநிதிகளை சந்தித்துப்பேச இந்தியப் பிரதமர்
மறுத்துவிட்டதின் விளைவாக இந்திய அரசுதான் குற்றவாளிக்கூண்டில்
ஏறியுள்ளது. இந்தியாவை மதித்து நட்பு நாடாகக் கருதி முறையிட வந்தவர்கள்
அதிர்ச்சியுடனும் அளவில்லாத ஏமாற்றத்துடனும் தங்கள் நாடு
திரும்பியுள்ளார்கள். தமிழ்நாட்டு மக்கள் உள்ளங்களிலும் இந்த நிகழ்ச்சி
என்றும் ஆறாத ரணத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெருடல் இணையம்
|