|
முகமாலையில் கடந்த 11 ஆம் திகதி சிறிலங்கா இராணுவம் சந்தித்த தோல்விக்கு இராணுவ விமர்சகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை முன்வைக்கின்றனர்;. இவை முழுமையானவையாகவும் இல்லை. தவறான வையாகவும் இல்லை.
இது குறித்து சிறிலங்கா முன்னாள் விமானப்படைத் தளபதி ஹரி குணதிலக்க தனது அபிப்பிராயத்தைத் தெரிவிக்கையில்:- 'சிறிலங்கா இராணுவம் தன் சொந்தப் பரப்புரைக்கே பலியாகி விட்டதென்று தான் சொல்ல வேண்டும்" என்கிறார் அண்மைய மாதங்களில் புலிகளுக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி விட்டோம். விடுதலைப் புலிகள் தோற்று ஓடுகின்றார்கள் என்றெல்லாம் ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தன என்றார்.
மற்றொருவர் இத்தோல்வி பற்றி அபிப்பிராயம் கூறுகையில்;, சிறிலங்கா இராணுவத்திற்கு கடும் இழப்பு ஏற்பட்டு அதன் மூக்கில் இரத்தம் தோய்ந்திருக்கின்றது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. முகமாலைச் சமர் பாரிய தவறு. சரியாகத் திட்டமிட்டிருக்க வேண்டும் என்கிறார்.
இன்னொரு இராணுவ ஆய்வாளர் இராணுவத்தினர் பாரிய இழப்பைச் சந்தித்துள்ளனர் என்பதை ஒப்புக்கொள்ளும் அதேவேளை வலிந்து தாக்குதலில் ஈடுபடும் துருப்புக்கள் அதிக இழப்புக்களைச் சந்திப்பது பொதுவில் எதிர்பார்க்கத்தக்கதுதான் என இராணுவத்தின் இழப்பிற்கு ஒரு வகையில் நியாயம் கற்பிக்க முற்படுகின்றார்.
இராணுவ விமர்சகர்களும், ஆய்வாளர்களும், எத்தகைய அபிப்பிராயத்தை வெளியிடினும் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள விடயம் சிறிலங்கா இராணுவம் முகமாலையில் பாரிய இழப்பைச் சந்தித்துள்ளது என்பதேயாகும். அத்தோடு இதனை அவர்கள் எவரும் ஒரு பின்னடைவு எனக் கூறவில்லை. தோல்வி என்றே கூறுகின்றனர்.
முகமாலையில் கடந்த 11 ஆம் திகதி காலை 6.30 மணியளவில் சிறிலங்காப் படைத்தரப்பு பாரிய வலிந்து தாக்குதலை ஆரம்பித்தது இராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி கொழும்பிலுள்ள பிரபல இராணுவ ஆய்வாளர் ஒருவர் கூறுகையில்;, காலை 8.30 மணி வரையும், நிலைமை இராணுவத் தரப்பிற்குச் சாதகமாக இருந்ததாகத் தெரிவிக்கின்றார். அதாவது புலிகளின் எதிர்த்தாக்குதல் வலுவானதாக இருக்கவில்லை. ஆனால் அடுத்து வந்த இரண்டரை மணிநேரமானது சிறிலங்கா இராணுவத்திற்குப் பேரிழப்பை ஏற்படுத்தியது என்கின்றார்.
சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, புலிகளின் முன்னணி நிலையை நோக்கி முன்னேறிச் சென்ற ஒரு கொம்பனி துருப்புக்களைக் காணவில்லை என்கிறார். அப்படையணி புலிகளினால் சுற்றி வளைக்கப்பட்டுத் தாக்கப்பட்டதாக அவர் கூறினாலும் அது எவ்வாறு நடந்தது என்பது ஊர்ஜிதம் செய்யாததாகவேயுள்ளது. எனினும் அக்கொம்பனித் துருப்புக்கள் திரும்பவில்லையென்பதே நிதர்சனமாகும்.
கொழும்பிலுள்ள இராணுவ ஆய்வாளர்களின் தகவலின்படி வியாழக்கிழமை தொடங்கிய கணக்கெடுப்பு- அதாவது காணாமற் போனோர், கொல்லப்பட்டோர், காயமடைந்தோர் தொடர்பானது- சனிக்கிழமை மாலை வரையும் நீடித்ததாகத் தெரியவருகிறது.
இம் மோதலில் சிறிலங்காப் படைத்தரப்பில் இருநூறிற்கும் மேற்பட்;ட துருப்புக்கள் கொல்லப்பட்டதோடு ஐந்நூறிற்கும் மேற்பட்ட துருப்புக்கள் காயங்களுக்கும் உள்ளாகினர். காயமடைந்த துருப்புக்களில் 280 இற்கும் மேற்பட்டோர் மிக மோசமான, காயங்களிற்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இது இம்மோதல் தொடர்பான முன்னைய மதிப்பீடு ஆயினும் பின்னைய மதிப்பீடுகளின் படி கொல்லப்பட்டும், காணாமற் போயும், காயமடைந்தும் போன துருப்புக்களின் மொத்த எண்ணிக்கை 1,000 வரையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ் இழப்பானது ஒரு நாள் சமரில்- அதிலும் குறிப்பாக 12 மணிநேரச் சமரொன்றில் சிறிலங்கா இராணுவம் சந்தித்த உயர்ந்தபட்ச இழப்புக்களில் ஒன்றாகும். இதனை ஒத்த இழப்புக்கள் பல கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளினால் ஏற்படுத்தப்பட்டிருப்பினும் இது சுமார் நான்கரை ஆண்டு காலச் சமாதான முயற்சிகளுக்குப் பின்னர் இராணுவம் சந்தித்த பேரிழப்பாகவே கொள்ளத்தக்கது.
இராணுவ ஆளணி இழப்புக்கள் ஒரு புறமிருக்க சிறிலங்கா இராணுவத்தின் கவசப் படையணி இம் மோதலில் சந்தித்த இழப்பானது கவசப் படையணி மீது சிறிலங்கா இராணுவத் தரப்புக் கொண்டிருந்த நம்பிக்கையைச் சிதறடிக்கும் வண்ணமாய் அமைந்தது.
ஏனெனில் இதுவரை சிறிலங்கா இராணுவத்திற்கும், புலிகளுக்குமிடையில் நடந்த மோதல்களில் கவசப் படையணி இத்தகையதொரு இழப்பைச் சந்தித்ததாக இல்லை. அது மட்டுமன்றி இத்தகையதொரு இழப்பைச் சந்திக்கும் என சிறிலங்கா இராணுவத்தரப்பு எதிர்பார்த்திருக்கவில்லை.
கொழும்பு இராணுவ ஆய்வாளர்கள் வெளியிடும் தகவலின் படி, ரி-55 ரக யுத்த டாங்கி ஒன்று கண்ணிவெடியில் சிக்கி அழிந்ததாகவும், இன்னொரு டாங்கி சதுப்புப் புதை நிலக்குழிக்குள் விழுந்ததாகவும், அதையடுத்து மற்றொன்று செயலிழந்ததாகவும் மூன்று டாங்கிகள் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளால் இயங்க முடியாதவாறு சேதமடைந்ததாகவும், மூன்று துருப்புக்காவிகள் தாக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
சிறிலங்கா இராணுவத்தின் கவசப் படைப்பிரிவு பாரிய இழப்புக்களைச் சந்தித்தது என்பதற்கும் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது தப்பியோடின என்பதற்கும் களத்தில் காயமடைந்தும் கொல்லப்பட்டும் கிடந்த சிறிலங்காத் துருப்பினர் மீது தப்பியோடிய டாங்கிகள் ஏறிச் சென்றதிலிருந்தே புரிந்து கொள்ள முடியும்.
சுருக்கமாகக் கூறுவதானால் தீச்சுவாலையில் (2001) சிறிலங்காப் படைத்தரப்புச் சந்தித்த எதிர்ப்பை, இழப்பை மீண்டும் ஒரு தடவை சந்தித்ததெனலாம். ஆனால் ஒப்பீட்டு ரீதியில் முன்னைய 'தீச்சுவாலை" நடவடிக்கையை விட குறுகிய நேரத்தில் வலுவான எதிர்த் தாக்குதலையும் இழப்பையும் சிறிலங்காப் படைத்தரப்பிற்குக் கொடுத்ததெனில் மிகையாகாது.
சிறிலங்காப் படைத்தரப்பு இப்பாரிய வலிந்து தாக்குதலில் தோல்வியடைய நேர்ந்தமைக்கு நோக்கம்-இலக்குத்தெளிவற்றிருந்ததும் தயாரிப்புத் திறம்பட மேற்கொள்ளப்படாமையும் காரணமெனச் சிலரால் அபிப்பிராயம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் உச்சக் கட்டமாகச் சிறிலங்கா அரசின் உயர்பீடம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்டம் என்பவற்றிற்கும் இப்படை நடவடிக்கை பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை என்றும் தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளன ஆனால் இவையாவும் நடைமுறைக்கு மாறானவையாகும். வேறொரு விதத்தில் கூறுவதானால் தோல்விக்குக் கூறும் நொண்டிச் சாட்டுக்கள் ஆகும். ஏனெனில் இப்படை நடவடிக்கையின் நோக்கம், அதாவது இலக்குத் தெளிவானதாகும்.
ஆனையிறவை மீளக் கைப்பற்றுதலே இப்படை நடவடிக்கையின் நோக்கம் என்பது ஏற்கனவே அறியப்பட்டதொன்று. இத்தகவல் சிறிலங்காப் படைத்தரப்பாலும் அரசியல் தரப்பாலும் கசியவிடப்பட்டதொன்றாகவே இருந்தது எனின் தவறாக மாட்டாது.
ஆனையிறவை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டெடுத்தல் என்பது சிறிலங்கா இராணுவத் தலைமையினதும் அரசியல் தலைமையினதும் அபிலாசைகளில் முதன்மையானதாகும்.- அதாவது ஆனையிறவின் கேந்திர முக்கியத்துவம் இராணுவ அனுகூலங்கள் என்பனவற்றை விட ஆனையிறவை மீட்டல் என்பது அவர்களின் பெருமைக்கும் கௌரவத் திற்கானதொன்றாகவே கொள்ளப்படுகின்றது.
இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா சிறிலங்கா இராணுவத்தின் கறைபடிந்த அத்தியாயமாக மாறி விட்ட ஆனையிறவுத் தோல்வியை ஆனையிறவை மீட்டெடுப்பதன் மூலம் பெருவெற்றியாகவும், அதன் வரலாற்று கதாநாயகனாக தான் பதியப்படுவதிலும் பெரும் ஆர்வம் கொண்டுள்ளார். அதாவது 'ரிவிரச" நடவடிக்கைக்குப் பின்னரான பெருவெற்றியாக இவ்வெற்றியைக் கொண்டாட முடியும் என்பது அவரது எதிர்பார்ப்பாகும்.
இதேவேளை சிறிலங்கா அரசியல் தலைமை ஆனையிறவை வெற்றி கொள்வதன் மூலம் அரசியல் ரீதியில் அனுகூலங்களைத் தேடிக்கொள்ள முற்படுகின்றது அதாவது பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் தலைமைத்துவத்திற்கு தாமே தகுதியானவர்கள் என்பதை நிரூபணம் செய்யத்தக்கதாக இவ்வெற்றியைப் பயன்படுத்தும் நோக்கில் அதன் எதிர்பார்ப்புள்ளது.
அதிலும் குறிப்பாக இவ்விடயத்தில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்காவிற்குத் தனிப்பட்ட ரீதியிலான அபிலாசைகள் கொண்டவராகவுள்ளார். ஏனெனில் அவர் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்வை முழு அளவில் விரும்புபவர் என்பது மட்டுமல்ல ஆனையிறவை வெற்றி கொள்வதை அவர் தனது அரசியல் குறிக்கோளாகக் கொண்டவராகவும் உள்ளார். இதற்கு ஆனையிறவு விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டபோது ரட்ணசிறி விக்கிரமநாயக்கா பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தமை மட்டுமல்ல. ஆனையிறவை மீட்போம் என 2002 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்கு முன்பு அவர் சூளுரைத்து வந்ததனையும் சுட்டிக்காட்ட முடியும்.
இந்தவகையில் ஆனையிறவு நோக்கிய வலிந்து தாக்குதல் சிறிலங்கா இராணுவத் தரப்பிற்கும் அரசியல் தரப்பிற்கும் அதன் கேந்திர முக்கியத்துவம் என்பதற்கும் அப்பால் அவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான ஒன்றாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர்களின் நோக்கம், இலக்கு ஆனையிறவு என்பதில் சந்தேகம் கொள்ள எதுவுமில்லை. அவர்களினால் ஐயப்பாடு எதுவும் இன்றி ஆனையிறவு நோக்கியதாகவே படை நடவடிக்கை திட்டமிடப்பட்டது.
இதேவேளை வலிந்து தாக்குதலுக்கான தயாரிப்பும் பெரியளவிலானதாகவே இருந்தது. பலவகை கனரக ஆயுதங்கள் படை நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே களமுனைக்கு நகர்த்தப்பட்டிருந்தன. அதற்கேற்ப ஆட்லறி, பீரங்கிகளும் நிலை கொள்ள வைக்கப்பட்டன. அதிலும் குறிப்பாகப் போரிடும் ஆற்றல் பெற்ற 53, 55 டிவிசன் துருப்புக்களின் கொம்பனிகளும் களமுனைக்கு அனுப்பப்பட்டன.
அதேசமயம் படை நடவடிக்கைகளுக்கு பல நாட்களுக்கு முன்பிருந்தே ஆட்லறி, பல்குழல் எறிகணை செலுத்திகள் மற்றும் விமானப்;படை குண்டுவீச்சுக்களும் முன்னோடித் தாக்குதல் நடவடிக்கைகளாக இரவு பகல் வேறுபாடு இன்றித் தொடர்ச்சியாகத் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தன. விடுதலைப் புலிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதல்கள் மூலம் புலிகளுக்கு இழப்பையும் அவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையூறும் கொடுக்கப்பட்டும் வந்தது.
இதேசமயம் யாழ். குருநகர்ப்பகுதியில் சிறிய மீன்பிடிப்படகுகளை கைவசப்படுத்திய சிறிலங்;கா கடற்படையினர் சில பயிற்சி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். இதன் நோக்கம் குறித்து ஊடகங்களைத் தவிர வேறு தகவல் ஏதும் இல்லையாயினும் படைத்தரப்பு தயாரிப்பு ஒன்றில் அதாவது முகமாலை நடவடிக்கையுடன் தொடர்ந்ததாகவோ அன்றி வேறொரு நடவடிக்கை ஒன்றைப் புதிதாக ஆரம்பிக்கவோ திட்டமிட்டிருந்தன என்பது உறுதிப்படுத்தப்பட்டதாய் இருந்தது.
இந்தவகையில் சிறிலங்கா இராணுவம் முகமாலையில்- பாரிய தாக்குதல் ஒன்றிற்குத் திட்டமிட்டு- பல நாட்கள் முன்னேற்பாடுகளுடன் செயற்பட்டு வந்த நிலையில் இப்படை நடவடிக்கையானது அரசியல் உயர் தலைமைப்பீடத்திற்கோ பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்டத்திற்கோ அறிவிக்கப்படாமல் அனுமதி பெறப்படாமல் மேற்கொள்ளப்பட்டமை எனக் கூறுவது சிறுபிள்ளத்தனமானது. குளிர் காயவென மூட்டிய நெருப்பு கையைச் சுட்டுவிட்டது என்பதற்காக நெருப்பு இருந்ததே தமக்குத் தெரியாது எனக் கூறுவது கேலிக்குரியதொன்றாகும்.
இதேவேளை நோக்கம், தயாரிப்பு என்பன முழு அளவில் இருந்தும் இராணுவ நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்திருப்பது ஏன் என்பதும் இராணுவம் பேரிழப்பைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டது எவ்வாறு என்பதுமான கேள்விகள் தவிர்க்க முடியாதவை ஆகின்றன.
இதற்குச் சுருக்கமாகப்பதில் அளிப்பதானால் நோக்கமும் தயாரிப்பும் உறுதியாக இருந்த போதும் எதிரி பற்றிய மதிப்பீடும், அதனை எதிர்கொள்வதற்கான திட்டமிடலும் சரியானதாக இல்லாமல் போனமையே காரணமாகும். அதாவது முன்னாள் விமானப்படைத்தளபதி ஹரி குணதிலக்க கூறியது போன்று சிறிலங்கா இராணுவம் தனது சொந்தப் பரப்புரைகளுக்கே பலியாகிவிட்டது என்பதாகும்.
குறிப்பிட்டுக் கூறுவதானால் சம்பூரை ஆக்கிரமித்ததும் மாவிலாற்றில் வெற்றி பெற்றுவிட்டதான சிறிலங்கா இராணுவத்தினதும் அரசியல் தலைவர்களதும் நம்பிக்கை மற்றும் கடந்த மாதத்தில் முகமாலைப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் புலிகள் தோல்வி அடைந்ததான அவர்களின் அனுமானமும் சிறிலங்காப் படைத்தரப்பை விடுதலைப் புலிகள் குறித்த தவறானதொரு மதிப்பீட்டிற்குச் செல்லவைத்ததெனலாம்.
இத்தகையதொரு முடிவிற்குச் சிங்கள அரசியல்வாதிகளும் ஊடகங்களும் படைத்துறையினரை உசுப்பேற்றி விட்டமையும் காரணமாகும். அதாவது இலகுவில் வெற்றி கொள்ளப்படத்தக்கதானதொரு யுத்தத்தை படைத்தரப்பு ஏன் தாமதம் செய்கின்றது? என்பது போன்ற வினாக்கள் படைத்தரப்பைத் தூண்டிவிட்டன எனலாம்.
இதேசமயம் படைத்தரப்பிலும் சமாதான காலத்தில் கொள்வனவு செய்யப்பட்ட பெருமளவிலான நவீன ஆயுத தளவாடங்கள் அதிகரித்த சூட்டுவலு என்பன இலகுவில் வெற்றியைத் தேடித்தருபவையாக இருக்கும் என்ற நம்பிக்கை வலுத்திருந்தது. இவை சிறிலங்கா இராணுவத்தை புலிகள் குறித்த சரியான மதிப்பீடு ஒன்றிற்கும் வலிந்து தாக்குதல் குறித்த சரியான திட்டமிடல் ஒன்றிற்கும் செல்லவிடவில்லை என்றே கூறலாம்.
ஆனால் இவற்றிற்கும் அப்பால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவியல் குறித்து இன்னமும் சிறிலங்கா இராணுவத்தரப்பு சரியான புரிந்துணர்வைக் கொண்டிருக்கவில்லை என்பதையே அதன் நடவடிக்கைகள் வெளிப்படுத்து பவையாக உள்ளன.
ஓமந்தைக்கு அப்பால் ஆரம்பிக்கப்பட்ட ஜயசிக்குறு அதனைத்தொடர்ந்து 'ரணகோஷ", 'வோர்டர்செட்" இராணுவ நடவடிக்கைகள் மூலம் மாங்குளம், மடு, ஒட்டுசுட்டான் பள்ளமடு வரையில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பு விஸ்தரிக்கப்படும் வரையில் தற்காப்புத் தாக்குதலை நடத்திய விடுதலைப் புலிகள்- அதன் பின்னரே பாரிய வலிந்து தாக்குதல் ஒன்றை நடத்தி 'ஜயசிக்குறு" நடவடிக்கையுடன் கூடியதான அனைத்து நடவடிக்கைகளையும் முறியடித்தனர் என்பதையும், அதன் தொடராக ஆனையிறவையும் மீட்டெடுத்தனர் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர்.
அதாவது விடுதலைப் புலிகள் இயக்கம் யுத்தத்தை தனது திட்டமிடலுக்கு ஏற்றவிதத்தில் நடத்தும் அமைப்பே ஒழிய சிறிலங்கா இராணுவத்தலைமையின் திட்டமிடலுக்கும் எதிர்பார்ப்பிற்கும் ஏற்ப நடாத்தும் அமைப்பல்ல. ஆகையினால் பின்வாங்குதலும், முன்னேறுதலும், விலகிக் கொள்வதும் அதிரடி நடத்துவதும் புலிகளின் திட்டமிடலுக்கு ஏற்ப நடக்குமே ஒழிய சிறிலங்கா ஆயுதப்படையினரின் விருப்பு வெறுப்பிற்கும் எதிர்பார்க்கைக்கும் ஏற்ப நடைபெறுவதில்லை. இதன் காரணமாகவே புலிகள் களமுனையைத் தீர்மானிப்பவர்களாக உள்ளனர். சிறிலங்கா அரசால் வெற்றி கொள்ள முடியாதவர்களாகவுள்ளனர்.
ஜெயராஜ்
|