|
சர்வதேச சமூகம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் யதார்த்தத்தினை தமிழ் மக்களின் உணர்வுகளை ஆழமாகப் புரிந்து கொண்டு தமிழ்த் Nதுசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும். மறுபுறம் இவ்வாறு தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் பால் சர்வதேச சமூகம் அக்கறை செலுத்தக் கூடாது என்பதற்கான துரோகத்தனங்கள் சிங்கள இனவாத அரசுகளினால் பரப்புரை செய்யப்படுகின்றது.
இவ்வாறான பரப்புரைகளுக்குள் தமிழ் மக்களின் தேசிய எழுச்சியும் உணர்வுகளும் மழுங்கடிக்கப்பட்டு விடும் ஆபத்து நிலை ஏற்படக்கூடாது தமிழின விடுதலைப் போராட்டம் ஆரம்பமான காலகட்டத்தில் இந்திய - ஈழத் தமிழ் மக்களது உறவு நெருக்கமிக்கதாக இருந்தது. இந்த உறவினை சிங்கள ஆட்சியாளர்கள் ஆபத்து மிக்கதாகவே கருதினர். போராளிகளை இந்தியா உருவாக்குகின்றது என்ற கருத்தும் எழுந்தது. இந்திய இலங்கை உடன்படிக்கை இருநாட்டு அரசுகளும் சுயலாபம் கருதி கையொப்பமிட்ட பின்னர் கூட இனவாத சக்திகள் இந்தியாவை வெறுத்தனர். இந்திய பருப்பு, பம்பாய் வெங்காயம் போன்ற இந்திய பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என வாதம் செய்தனர். அமைதிப் படை என வந்த இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாக மாறி தமிழ் மக்கள் மீது தமது கொடுரத்தனத்தை மேற்கொண்ட போது தான் இந்த சக்திகள் மகிழ்ந்தன. போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் அனுசரணைப் பணியினை மேற்கொண்டு வரும் நோர்வே மீது சிறிலங்காவின் சிங்கள அரசியல் தலைமைகள், பேரினவாத சக்திகள் என்பன கடுமையாகச் சாடியிருந்தனர். நோர்வேத் தூதரகம் வரை பிக்குகள் சென்று நோர்வேக் கொடியை எரித்து கோபாவேசம் காட்டியிருந்தமை அனைவரும் அறிந்த விடயம். எப்போது உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதோ அன்றிலிருந்து இற்றைவரை நோர்வேக்கு எதிராக தென்னிலங்கையில் சக்திகள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். வெள்ளைப் புலி என்று வர்ணிப்பதுடன் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் எனவும் கோசமெழுப்பி வருகின்றனர். சர்வதேச சமூகம் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தின் உண்மையைப் புரிந்து கொண்டு அது தொடர்பான சாதகமான கருத்துக்கள் வெளிவருவது சிறிலங்கா அரசுக்கு பாதகமான விடயமாகக் கருதுகின்றது. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட பிற்பாடு அதன் கொலைப் பழியை விடுதலைப்புலிகள் மீது சுமர்த்தி சர்வதேச நாடுகளில் பிரசாரம் செய்வதன் மூலம் சிறிலங்கா அரசு மீது சர்வதேச சமூகம் கொண்டிருக்கும் தவறான அபிப்பிராயத்தை சீர் செய்து கொள்ளலாமெனக் கருதுகின்றனர். இதன் அடிப்படையில் தான் சர்வதேச நாடுகள் விடுதலைப்புலிகளைத் தடைசெய்ய வேண்டும் என அரசு அழுத்தம் கொடுத்து வருகின்றது. விடுதலைப்புலிகள் சிறுவர்களைப் படைக்குத் திரட்டுகிறார்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டுக்களையும் சுமர்த்தி உலக நாடுகளில் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சியிலேயே அரசு ஈடுபட்டு வருகின்றது. இதேவேளை இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளில் தமது பரப்புரை மூலம் பலன் கிடைக்குமிடத்து விடுதலைப்புலிகளை பயங்கரவாத இயக்கமாக பிரகடனப்படுத்தி அவர்களைத் தடை செய்வதன் மூலம் சமாதானத் தீர்வு விடயங்களை இன்னும் பல வருடங்களுக்கு இழுத்தடிக்க முடியுமென்றே கருதுகின்றனர். இதில் ஐரோப்பிய நாடுகள் தமிழ் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக கொண்டிருக்கும் அபிப்பிராயத்தைத் தகர்த்தெறிந்து அந்த நாடுகள் விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஒரு போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். எனவே தற்போதைய நிலமைகளை அவதானிக்குமிடத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச சமூகத்திற்கு தமிழ் மக்களின் உணர்வினையும் எதிர்பார்ப்பினையும் மேலும் தெளிவுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவைப்பாடாகவுள்ளது. அதே வேளை சிறிலங்கா அரசின் உண்மைக்குப் புறம்பான பரப்புரைகளை சர்வதேச சமூகம் ஒரு போதும் நியாயப்படுத்த முனையக் கூடாது.
Batti eelanatham
|