|
தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாக ஐரோப்பிய யூனியன் விடுத்துள்ள அறிக்கை தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவது தொடர்பாக ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள் உண்மையான ஆர்வம் கொண்டுள்ளனவா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தமிழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து நாட்டில் பாரிய சம்பவங்கள் எதுவும் இடம் பெறவில்லை என்பதும், ஆத்திரமூட்டல்களுக்கு மத்தியிலும் புலிகள் அதனை பேணி வருகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்øமயாகும். இது ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளுக்கு தெரியாமலிருக்க நியாயமில்லை. இந்நிலையில், இலங்கையில் தமிழ் மக்கள் எந்தளவு தூரம் அடக்கி ஒடுக்கப்படுகின்றார்கள், கைது செய்யப்படுகிறார்கள், திடீர் திடீரென கடத்தப்படுகிறார்கள் என்று அறியாதது போன்று ஐரோப்பிய யூனியன் நடந்து கொள்வதும், தமிழ் மக்களை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதுபோன்று அறிக்கை வெளியிடுவதும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது தமிழ் மக்களுக்கிருந்த நம்பிக்கையையும் இழக்கச் செய்வதாகவே அமைந்துள்ளது. சமாதான பேச்சுக்களின் பொருட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிநாடுகளுக்கு சென்று வருவதும், அங்கு பேச்சுக்களில் ஈடுபடுவதும் புதிய விடயமல்ல இந்நிலையில் மறு அறிவித்தல்வரை ஐரோப்பிய யூனியனின் அங்கத்துவ நாடுகளில் விடுதலைப்புலிகளை அனுமதிப்பதில்லையென்று அதன் தீர்மானம் அமைந்திருப்பது சமாதான முயற்சிகளை குழப்பியடிக்கும் நடவடிக்கையாகவே இருக்கும் என தமிழ் பேசும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பேச்சுவார்த்தைகளின் பொருட்டு கொழும் புக்கு வருவதற்கு புலிகள் தயாரில்லை என்பதும், தற்போதைய சூழ்நிலையில் பேச்சுவார்த்தைகளை கொழும்பில் நடத்த ஏற்ற பாதுகாப்பு இல்லை என்பதும் சகல தரப்பினரும் நியாயபூர்வமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். இந்த நாட்டின் மீது அக்கறை கொண்ட அனைத்து வெளிநாட்டு சக்திகளுக்கும் அப்பால், நாட்டில் அமைதி நிலவவேண்டும். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்பதில் தமிழ் பேசும் மக்ளுக்கே அதிக ஆர்வமும்,அவசியமும் உள்ளது. எந்தக் கட்டத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் பழைய நிலைக்குச் சென்று விடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக உள்ளனர். ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களும், பாதிக்கப்படுவோரும் தமிழ் பேசும் மக்களேயாவர். இவற்றை நன்கு உணராத வகையில் வெளிநாட்டு சக்திகளின் அநாவசிய தலையீடும், அழுத்தங்களும் வெறுமனே இந்த நாட்டின் சிறுபான்மை மக்களை மேலும் மோசமான நிலைமைக்கு கொண்டு செல்வதாகவே இருக்கும். இந்த நாட்டில், தமிழர் என்றாலே புலிகள் என்ற ரீதியிலே அரசும், படையினரும் பேரினவாதிகளும் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர். அவை எதனையும் உணராத வகையில் ஐரோப்பிய யூனியனின் எடுத்துள்ள முடிவுகள் , தொடர்ந்தும் தமிழ் மக்களை, சட்டியிலிருந்து நெருப்பில் போடும், நடவடிக்கையாகவே இருக்கும் என்பது பொதுவான அபிப்பிராயமாகும். ஒரு புறம் கதவடைப்பு செய்யும் ஐரோப்பிய யூனியன், மறுபுறம் பேச்சுவார்த்தை குறித்து வலியுறுத்துவதும், அழுத்தங்களைப் பிரயோகிப்பதும் எந்த வகையில் நியாயமாகும் என்றும் தமிழ் மக்கள் குரல் எழுப்புகின்றனர். அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளேயே அன்றாடம் தமிழர்கள் பலர் படுகொலை செய்யப்படுவது சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றது. அங்கு மரணிப்போரும்அப்பாவி உயிர்கள் தான் என்பது ஐரோப்பிய யூனியனுக்கு எவ்வாறு தெரியாமல் போனது என்றும் தமிழ் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஒருவர் எந்த அமைப்பைச் சேர்ந்தவராக இருப்பினும் சரி எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் சரி, வெறுமனே கண்மூடித் தனமாகச் சுட்டுக் கொல்லப்படுவாரேயானால் அது கண்டிக்கப்படவேண்டியதும், நியாயப்படுத்த முடியாததுமாகும். அந்த வகையில் தமிழ் மக்கள் வகை தொகையின்றி சுட்டுக் கொல்லப்படுவது குறித்து ஐரோப்பிய யூனியன் மௌனம் சாதிப்பது, அதன் நடு நிலைத்தன்மையை சந்தேகிக்க வைப்பதாகப் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்படப் போவது தமிழ், முஸ்லிம் சமூகமே தவிர வெளிநாட்டு சக்திகளோ அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளோ அல்ல. எனவே தமிழ் பேசும் மக்களுக்கு உருப்படியாக எதனையும் செய்ய முடியாவிடினும் அவர்கள் சற்று நிம்மதியாக இருக்கும் அமைதிச் சூழலுக்குப் பங்கம் ஏற்படுத்திவிடாமல் இருப்பது சகல தரப்பினரதும் கடப்பாடாகும். ஐரோப்பிய யூனியனின் கதவடைப்பு, சமாதானத்துக்கான பாதையை இருளாக்கியுள்ளதுடன் பேரினவாதிகளுக்கு கிடைத்த வெகுமதியாகவே இருக்கும் என்பது தமிழ் பேசும் மக்களின் அபிப்பிராயமாகும். virakesari
|