|
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஜெனீவா கண்டனப் பேரணி |
|
|
|
Thursday, 16 November 2006 |
|
[நிழற்படங்கள்]
தமிழ் மக்கள் மீதான சிங்கள அரசின் படுகொலைகளை நிறுத்தக் கோரியும், வாகரை படுகொலையைக் கண்டித்தும், நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் படுகொலையைக் கண்டித்தும் சுவிஸ் ஜெனீவா நகரில் நேற்று புதன்கிழமை மாபெரும் கண்டன ஆர்பாட்டப் பேரணி நடைபெற்றது.
அனைத்துலக சமூகத்திடம் நீதி கேட்டு நடைபெற்ற இந்தப் பேரணி, ஜெனீவா
தொடரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமாகி ஜெனீவா மனித உரிமை மன்ற,
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற காரியாலயம் வரை சென்றது.
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுவிஸ் வாழ் தமிழர்கள் இப்பேரணியில் பங்கேற்றனர்.
கடுமையான குளிரின் மத்தியிலும் சிறுவர்களும், குழந்தைகளுடன் தாய்மாரும்
தீப்பந்தங்களைச் சுமந்தபடி பங்கேற்றிருந்த இக்கண்டன ஆர்பாட்டப் பேரணி,
மிகவும் உணர்ச்சிகரமாகவும் சுவிஸ் மக்களின் கவனத்தையும் ஈர்த்தது.
சுவிஸ் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பேரணியியின் நிறைவில்
ஐரோப்பிய ஒன்றியத்திடம் புலம்பெயர் தமிழ் மக்கள் சார்பாக மனு
வழங்கப்பட்டது.
பேரவையின் சார்பாக சோதிநாதன், தம்பிப்பிள்ளை நமசிவாயம், காசிலிங்கம்
இராமகிருஸ்ணன், தமிழ் இளையோர் அமைப்பு சார்பாக சுபாஸ்கரன் மற்றும் தமிழ்ப்
பெண்கள் அமைப்பின் சார்பாக நிர்மலா பரராஜசிங்கம் ஆகியோர் ஐரோப்பிய ஒன்றிய
நாடாளுமன்றப் பிரதிநிதியைச் சந்தித்து மனுவைக் கையளித்தனர்.
மனுவில் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன:
- யாழ். குடாநாட்டிற்கான ஏ-9 பாதையை திறக்க சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுங்கள்!
- தமிழர் பிரதேசங்களில் உள்ள மருந்து மற்றும் உணவுப் பற்றாக்குறையை நீக்க வழிசெய்யுங்கள்!
- தமிழர் பிரதேசங்களில் இருந்து சிறிலங்கா இராணுவம் உடனடியாக விலக சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுங்கள்
- சிறிலங்கா அரசின் வன்முறைகளை நிறுத்த அதற்கு பொருளாதார தடையை விதியுங்கள்!
- சிறிலங்கா அரசின் இராணுவ தளபாட கொள்வனவிற்கு தடை விதியுங்கள்!
- தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரியுங்கள்!
- தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை அறிய சர்வஐன வாக்கெடுப்பை நடத்துங்கள்!
- தமிழர் தரப்பையும் சிங்களவர் தரப்பையம் சமமாக அணுகுங்கள்!
- தமிழர் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் தடைகளை அகற்றுங்கள்!
- தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற உதவுங்கள்!
கடந்த ஒரு வாரமாக சுவிசின் பல மாநிலங்களில் சுவிஸ் வாழ் தமிழர்களினால்
பரவலாக முன்னெடுக்கப்பட்டு வந்த கண்டன கவனயீர்ப்பு நிகழ்வுகளின் நிறைவாக
இன்றைய இக்கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.
சுவிஸ் சுக் மாநிலம், ஜெனீவா மாநிலம், லுட்சர்ன் மாநிலம், லவுசான்
மாநிலம், சூரிச் மாநிலம் மற்றும் பேர்ண தமிழர் இல்லம் ஆகிய இடங்கள் உட்பட
பல்வேறு இடங்களிலும் தமிழ் இளையோர் அமைப்பினர் மற்றும் சுவிஸ் தமிழர்
பேரவையினரால் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.
|