|
'நடக்க முடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, தொடர்ந்தும் அதே பழைய பாதையில் நடைபோட இனியும் நாம் தயாராக இல்லை, எம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளவும் நாம் விரும்பவில்லை"
'சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு தனியரசு என்ற ஒரேயொரு
பாதையைத்தான் இன்று தமிழருக்குத் திறந்து வைத்திருக்கிறது எனவே அந்த
விடுதலைப் பாதையில் சென்று சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதென இன்றைய
நாளில் நாம் தீர்க்கமாக முடிவு செய்திருக்கின்றோம்" - தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன்.
சமாதான வழிமுறைகளில் விடுதலைப் புலிகள் வைத்திருந்த நம்பிக்கையைக்
கைவிட்டு இனப்பிரச்சினைத் தீர்விற்கு மற்றொரு வழியைத் தேடுவதற்குத்
தீர்மானித்துவிட்டதன் அறிவிப்பாகவே இது அனைத்துத் தரப்பினாலும் அர்த்தம்
கொள்ளப்படுகின்றது. இத்தகையதொரு நிலையில் விடுதலைப் புலிகளின்
இந்நிலைப்பாடு குறித்து அரசியல் இராஜதந்திர வட்டாரங்களில்
வாதப்பிரதிவாதங்கள், அபிப்பிராயங்கள் எழுவதும், முன்வைக்கப்படுவதும்
தவிர்க்கப்பட முடியாததாகவே இருக்கும்.
விடுதலைப் புலிகள் சமாதான வழிமுறையிலிருந்து வேறொரு வழிமுறைக்குச்
செல்லவுள்ளதாக அறிவித்துள்ளமை குறித்து ஆராய்பவர்கள், விமர்சிப்பவர்கள்
தமக்கு விடை தெரியாத புதிர் போன்று இரண்டு வினாக்களை எழுப்புவதோடு அவற்றை
வாதத்திற்குரியவையாக முன்வைக்கவும் முனைகின்றனர்.
1. விடுதலைப் புலிகள் இதயசுத்தியுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்;களா?
2. விடுதலைப் புலிகள் தேர்ந்தெடுக்கும் வழி மூலம் தமிழ் மக்கள் தற்பொழுது
அனுபவிக்கும் இன்னல்கள் நெருக்கடிகள் என்பனவற்றிக்குத் தீர்வு கிட்டுமா?
என்பவையே இவையாகும்.
விடுதலைப் புலிகள் அமைதி வழிமுறையில் நம்பிக்கை கொண்டு செயற்பட்டார்களா
இல்லையா? என்ற கேள்வி எழுப்புபவர்கள் முதலில் கடந்த கால நிகழ்வுகளை
மீட்டுப்பார்த்தல் வேண்டும்.
விடுதலைப் புலிகள் பாரிய ஐயசிக்குறு நடவடிக்கையை முறியடித்து ஆனையிறவுப்
பெரும் தளத்தையும் துடைத்தழித்து, தீச்சுவாலை நடவடிக்கையையும் முறியடித்து
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்தை தகர்த்;தழித்து நின்ற வேளையிலேயே ஒரு
தலைப்பட்சமான யுத்த நிறுத்தத்திற்கும் இனப்பிரச்சினைக்கு அமைதி வழியிலான
தீர்விற்கும் உடன்பட்டார்கள்.
சில நோக்கர்களும் ஆய்வாளர்களும் விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்த
உடன்பாட்டிற்குக் கூட இணக்கம் தெரிவித்ததும், சமாதானப் பேச்சுவார்த்தை
மேசைக்கு வரச் சம்மதித்ததும் சர்வதேசத்தின் அழுத்தத்தின் காரணமாகவெனக்
கூறிக் கொள்வதுண்டு, ஆனால் இது யதார்த்தத்திற்கு மாறானது.
ஆனால் அவர்களின் இந்நம்பிக்கை அன்றி அபிப்பிராயம் ஏற்றுக்கொள்ளப்படுவதாக
இருப்பினும் கூட விடுதலைப் புலிகள் யுத்தநிறுத்த உடன்பாட்டிற்கும்,
சமாதானப் பேச்சுவார்த்தைக்கும் உடன்பட்டார்கள் என்பதையும், சிறிலங்கா
அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்கள் என்பதனையும்
யாரும் நிராகரிக்க முடியுமா?
அது மட்டுமன்றி விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கான மேசையில்
விதண்டாவாதம் செய்தார்கள்; நடைமுறைச் சாத்தியமற்றவற்றைக் கோரினார்கள்;;
தமது நிலையில் இருந்து விட்டுக்கொடுக்க மறுத்தார்கள் என்ற
குற்றச்சாட்டுகள் அனுசரணையாளர்கள் உட்பட எவராலும் முன்வைக்கப்பட்டனவா?
யுத்த நிறுத்த உடன்பாடு, பேச்சுவார்த்தை மேசையில் இணக்கம் காணப்பட்ட
விடயங்கள் என்பனவற்றை அமுல் செய்யாமலும், அவற்றிற்கு முரண்பட்ட வகையிலும்
நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் யார்? அதாவது யுத்த நிறுத்தமும் சமாதானப்
பேச்சுவார்த்தையும் ஐந்து ஆண்டுகள் நீடித்து நிலைத்தமைக்கு விடுதலைப்
புலிகள் வழங்கிய ஒத்துழைப்பே காரணம் என்பதை எவராலும் நிராகரிக்க முடியுமா?
இதனையும் தவிர இதயசுத்தியுடனும், நம்பகத்தன்மையுடனும் விடுதலைப் புலிகள்
சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்களா? என்ற கேள்வி அரசியல் ரீதியில்
அர்த்தமற்றதொன்று. இதயசுத்தியும், நம்பகத்தன்மையும் தனி மனித
நடத்தைக்குரியதே ஒழிய அரசியலுக்குரியவையல்ல.
பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறையையும் அராஜகத்தையும்
கட்டவிழ்த்துவிட்டுள்ள, தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில்
முழுவீச்சில் செயற்படுகின்ற, இன அழிப்பில் தீவிரம் காட்டுகின்ற அரசுடன்
அம் மக்களின் விடுதலைக்காகப் போரிடும் ஒரு அமைப்பு இதயசுத்தியுடனும், அதன்
மீதான நம்பகத்தன்மையுடனும் செயற்பட வேண்டும் எனக் கோருவது அவ்வினம்
மீண்டும் ஏமாளித்தனமாகச் செயற்படுதல் வேண்டும் எனக் கூறுவதற்கு ஒப்பானதே.
பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்தின் மீது வன்முறையைக்கட்ட விழ்த்து
விட்டுள்ளது எனச் சிறுபான்மை இனம் உறுதியாகவும், ஆணித்தரமாகவும்,
ஆதாராபூர்வமாகவும் நம்பும் பட்சத்தில் சிறுபான்மை இனத்திற்கு நம்பிக்கையை
ஏற்படுத்தும் வகையிலும் சமாதான முயற்சிகளில் நம்பிக்கை வைக்கும் வகையிலும்
நடந்து கொள்ள வேண்டியது ஆட்சியிலுள்ளவர்கள் மேற்கொள்ளவேண்டியதான
நடவடிக்கையே ஒழிய சிறுபான்மை மக்களோ போராடும் அமைப்போ மேற்கொள்ளவேண்டியவை
அல்ல.
ஆனால் அவ்வாறு இருந்தும் விடுதலைப் புலிகள் இயக்கம் சமாதானப் பேச்சு வார்த்தைகளில் நம்பிக்கையூட்டும் விதமாக நடந்து கொண்டது.
பல விட்டுக் கொடுப்புக்களுக்கு முன்வந்தது. சர்வதேச நாடுகளின்
கோரிக்கைக்கு மதிப்பளித்து நடந்துகொண்டது. ஆனால் சிறிலங்காவில் மாறி மாறி
ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கம் இவ்விடயத்தில் அக்கறை காட்டவில்லை.
மாறாக யுத்த நிறுத்த உடன்பாட்டைப் பலவீனப்படுத்தும் வகையிலேயே செயற்பட்டது.
யுத்த நிறுத்த உடன்பாட்டைச் செய்து கொண்ட ஆட்சியாளர்கள் உடன்பாட்டை
ஏற்றுக்கொண்டாலும் உடன்பாட்டுச் சரத்துக்களை அமுல்படுத்தாது
இழுத்தடித்தனர். உயர் பாதுகாப்பு வலயம் என்ற ரீதியில் உடன்பாட்டின்
பெரும்பாலான சரத்துக்கள் அமுலாவதற்கு முட்டுக்கட்டை போட்டனர். அத்தோடு
பேச்சுவார்த்தை மேசையில் தீர்மானிக்கப்பட்ட விடயங்களையும் அரசியல்
யாப்புப் போன்றவற்றைக் காரணம் காட்டி அமுல் செய்யாது கைவிட்டனர்.
இதேசமயம், விடுதலைப் புலிகள் அமைப்;பைப் பலவீனப்படுத்தும் வகையிலான
நடவடிக்கையில் முனைப்புக் காட்டினர். வன்முறையில் புலிகள் ஈடுபட்டதாகவும்
யுத்த நிறுத்தத்தை மீறியதாகவும் உண்மைக்கு மாறாகக் குற்றம்சாட்டிய அரச
தரப்பினர் ஒட்டுக்குழுக்களை உருவாக்கியும், அவற்றிற்குப் புத்துயிர்
அளித்தும் வடக்கு, கிழக்கை வன்முறைக் களமாக்கினார்.
போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினர் ஒட்டுக்குழுக்கள் சிறிலங்கா
ஆயுதப்படையின் ஒத்துழைப்புடன் இயங்குவதை உறுதி செய்த போதும், விடுதலைப்
புலிகள் ஒட்டுக்குழுக்கள் இராணுவத்தின் புலனாய்வுத்துறையுடன் இணைந்து
செயற்படுவதை ஆதாரபூர்வமாக நிரூபித்தபோதும் அரசதரப்பு அவ்விடயத்தில் அக்கறை
காட்டவில்லை. ஒட்டுக்குழுக்களின் மூலம் ஆட்கடத்தல், படுகொலை உட்பட்ட
வன்முறைகளுக்கு ஒத்தாசையாகவே செயற்பட்டது. ஒட்டுக்குழுவினரின்
நடவடிக்கைகள் யுத்த நிறுத்த உடன்பாட்டைச் சிதைக்கும் அளவிற்கு இருந்த
போதும் அரசு தடுத்த நிறுத்த முயலவில்லை.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவிற்குப் பின்னரான மகிந்த ராஜபக்சவின்
அரசாங்கமோ மேலும் ஒருபடி சென்று யுத்த நிறுத்த உடன்;பாட்டையே ஏற்றுக்கொள்ள
மறுத்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்திற்கு உடன்பாட்டில் மேலாண்மை வேண்டும்
என்ற நிலைப்பாட்டை மேற்கொண்டது.
இரு தரப்பினர் இடையே செய்து கொள்ளப்பட்ட மோதல் தவிர்ப்பு ஒப்பந்தத்தில்
ஒரு தரப்பிற்கு வலிந்து தாக்குதலுக்கான அனுமதியும் ஆக்கிரமிப்பிற்கான
அங்கீகாரமும் வேண்டும் எனவும் மகிந்த அரசாங்கம் வாதிட முனைகின்றது.
இவை மட்டுமன்றி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டின்படி
பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதென்றாலோ, அமைதி முயற்சிக்கு ஒத்துழைப்பது
என்றாலோ பல முக்கிய தீர்மானங்களை விடுதலைப் புலிகளும், தமிழ் மக்களும்
ஏற்றுக்கொள்ள வேண்டியவையாக இருக்கும்.
1. யுத்த நிறுத்த உடன்பாடு பற்றியோ அன்றி அதன் அமுலாக்கம் பற்றியோ பேசுவதைக் கைவிடல் வேண்டும்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்பாடு அமுலில் உள்ளதா?
இல்லையா? என்பது குறித்து உத்தியோகபூர்வமான அதாவது எழுத்து மூலமான
அறிவிப்பு எதையும் வெளியிடவில்லையாயினும், ஜெனீவாப் பேச்சுவார்த்தை 2 இல்
யுத்த நிறுத்த உடன்பாட்டைப் பற்றிப் பேசுவதை நிராகரித்துவிட்டது. இதனை
நோர்வே சமாதான ஏற்பாட்டாளர்கள் முன்பாகவே சிறிலங்கா அரசின் பேச்சுக்குழுத்
தலைவர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்திருந்தார்.
இதற்கு ஏற்றாற்போல் யுத்த நிறுத்த உடன்பாட்டுச் சரத்துக்கள் எவற்றையும்
அரசாங்கம் அமுல் செய்யத்தயாராக இல்லாதது மட்டுமல்ல அவற்றை மீறும்
வகையிலும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. யுத்த நிறுத்தக்
கண்காணிப்புக்குழு பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே யுத்த நிறுத்த
உடன்பாட்டுச் சரத்துக்கள் யாவும் கைவிடப்பட்டவை ஆகியுள்ளன.
2. யுத்த நிறுத்த உடன்பாட்டிற்குள் உட்பட்டதாகவும் மனிதாபிமான
நெருக்கடியும் சேர்ந்ததான ஏ-9 பாதையைத் திறந்துவிட அரசாங்கம் தயாராக
இல்லை. ஜெனீவாப் பேச்சுவார்த்தை 2 இல் அரச தரப்பு இக்கோரிக்கையை
நிராகரித்திருந்தது. ஆகையினால் பாதை திறப்புப்பற்றி எதுவும் பேசுவதற்கு
இல்லை.
3. அரசதரப்பு அரசியல் தீர்வு எனக் கூறிக்கொண்டிருப்பினும் சிறிலங்கா
அரசாங்கமானது இனப்பிரச்சினைக்குத்தீர்வாக பலராலும் எதிர்பார்க்கப்பட்டதும்
சிபார்சு செய்யப்படுவதுமான சமஷ்டி முறையிலான தீர்வு என்பதில் இருந்து
பின்வாங்கி ஒற்றையாட்சி முறைக்குள் தீர்வு என்ற நிலைக்குச் சென்றுள்ளது.
ஆகையினால் அவை இனிப்; பரிசீலிக்க முடியாதவை ஆகியுள்ளன. இந்தியாவின்
பஞ்சாயத்து இராச்சிய முறை பற்றியே பேசிக்கொள்ளமுடியும். அதாவது அரசியல்
பேச்சுவார்த்தைக்கான தளத்தில் இருந்து முற்றாகக் கீழிறங்கிச் சென்றுள்ளது.
அது மட்டுமன்றி இணைக்கப்பட்டிருந்த வடக்கு- கிழக்கு மாகாணங்களை இரண்டாகப்
பிரித்து இனப்பிரச்சினைத்தீர்விற்கான அடிப்படையாக முன்வைக்கப்படக்
கூடியதொரு விடயத்தையும் சிதைவடையச் செய்துள்ளது. இந்த வகையில் யுத்த
நிறுத்த உடன்பாடு, மனிதாபிமானப் பிரச்சினைகள் அரசியற்தீர்வு விடயங்கள்
என்பனவற்றில் தெளிவான பின்வாங்கலை மகிந்த அரசு செய்துள்ளது.
அது மட்டுமன்றி அரச தரப்பினர் சிலரது அறிவிப்பின் பிரகாரம் விடுதலைப்
புலிகள் சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதானால் ஆயுதங்களைக்
கையளித்துவிட்டு சிறிலங்கா அரசியல் யாப்பான ஒற்றையாட்சி முறைக்குள்
உட்பட்டு இந்திய பஞ்சாயத்துப் பற்றியோ அன்றி கிராம மட்டத்தில் அதிகாரப்
பகிர்வு பற்றி மட்டுமே பேசமுடியும்.
இத்தகையதொரு நிலையில் விடுதலைப் புலிகள் பழைய பாதையில்- கடந்த ஐந்து
ஆண்டுகள் நடந்து வந்த பழைய பாதையில் இருந்து வேறொரு பாதையில் செல்வதற்குத்
தீர்மானிப்பதை தவறு என யாராயினும் எவ்வாறு கூற முடியும்? யுத்த நிறுத்த
உடன்பாட்டின் பின்னரான வன்முறைகளினால் அரசின் நிலைப்பாடு மாறியதாக யாரும்
வாதிடத்தான் முடியுமா? ஒட்டுக்குழுக்களின் பிரசன்னமின்றி வன்முறைதான்
ஆரம்பித்ததா?
அடுத்ததாக, சிலர் பேச்சுவார்த்தை வழியிலிருந்து மாற்று வழியொன்றிற்குச்
செல்வதானால் தமிழ் மக்களின் நெருக்கடிகளுக்குத் தீர்வு காணப்படுமா? அதாவது
இன்றுள்ள நெருக்கடியை விட நெருக்கடி அதிகரிக்கமாட்டாதா? என்ற கேள்வி
எழுப்புபவர்களும் உண்டு.
இவர்களின் இவ்வாதம் அரசியல் அடிப்படை அற்றது. விடுதலை வேண்டிப் போராடும்
ஒரு இனம் நெருக்கடிகளுக்காக தமது போராட்டத்தை இடைநிறுத்திவிடவும் மாட்டாது
நிறுத்திவிடவும் முடியாது நெருக்கடிகள் துன்பங்கள் துயரங்களின் பின்னர்
சிறிது காலம் தாமதம் ஆயினும், பிரகாசமானதும் பாதுகாப்பான எதிர்கால
வாழ்வொன்றிற்காகவுமே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
சுதந்திரத்திற்கான போராட்ட காலகட்டத்தில் துன்பங்கள், துயரங்கள்,
இழப்புக்கள் ஏற்படும் என யாராவது அஞ்சியிருந்தால் உலகில் பல போராட்டங்கள்
நடந்திருக்கமாட்டாது. சுதந்திர தேசங்கள் உருவாகி இருக்கவும் மாட்டாது.
சிலவேளைகளில் மேற்கூறிய கருத்துக் கொண்டவர்கள் அதாவது நெருக்கடிகள்
தீருமா- என்ற கேள்வி எழுப்புபவர்கள் தமிழ் மக்களின் போராட்டத்திற்கான
அங்கீகாரம் கிடைக்கப் பெறுமா? என்ற சந்தேகம் கொண்டவர்களாக இருக்கலாம்.
ஆனால் விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கான சூழல் ஏற்படுகையில்
அங்கீகாரங்களும் தானாகவே கிட்டிவிடவும் முடியும்.
சர்வதேச சூழல் கனிந்து வருகையில் இவை அனைத்தும் சாத்தியமானவையே உலகில்
பயங்கரவாத அமைப்புக்களாகப் பட்டியலிடப்பட்ட விடுதலை இயக்கங்கள் சர்வதேச
அங்கீகாரங்களைப் பெற்றமையும், ஒடுக்கு முறையாளராகச் செயற்பட்டவர்கள்,
ஒடுக்கு முறையாளர்களுக்கு பேருதவி புரிந்தவர்கள் ஒரு கட்டத்தில் விடுதலை
அமைப்புக்களையும், அவர்களின் போராட்டங்களையும் அங்கீகரித்;தமை உலகில் பல
வேளைகளில் நிகழ்ந்ததுண்டு. இவை வரலாற்றின் நிர்ப்பந்தங்களாகும்.
நன்றி: ஈழநாதம் 29.11.06
-ஜெயராஜ்-
|