|
பாக்தாத்: ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை பாக்தாத் அப்பீல் கோர்ட் உறுதி செய்தது. தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. அடுத்த 30 நாட்களுக்குள் அவருக்கு துõக்கு தண்டனை நிறைவேற்றப்படும்.
கடந்த 1982ம் ஆண்டு ஈராக் அதிபராக இருந்த நேரத்தில், துஜெய்ல் பகுதியில்
148 ஷியா பிரிவு முஸ்லிம்களை கொன்றதாக சதாம் உசேன் மீது பாக்தாத் சிறப்பு
கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வக்கீல்கள் படுகொலை மற்றும் நீதிபதிகள்
மாற்றம் என பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி, கடந்த நவம்பர் 5ம் தேதி
இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட
சதாம் உசேன், சதாமின் சகோதரர் பர்சான் அல் திக்ரிதி மற்றும் ஈராக்
முன்னாள் நீதிபதி அவாத் அல் பன்தர் ஆகிய மூவருக்கும் துாக்கு தண்டனை
விதித்து பாக்தாத் சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.
அமெரிக்காவால் ஈராக் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், அமெரிக்க ஆதரவாளர்களால்
தீர்மானிக்கப்பட்ட இந்த கோர்ட்டின் விசாரணை ஒரு தலைப்பட்சமாகவும்,
நேர்மையற்றதாகவும் நடந்ததாக சதாம் உட்பட சர்வதேச மனித உரிமை போராளிகள்
தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இதற்கிடையே, சதாம் உட்பட மூவரும் தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட துாக்கு
தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அனுமதிக்கப்பட்டது.
இந்த மேல்
முறையீட்டு மனுவால் எந்த பலனும் இல்லை என அப்போதே சதாம் தரப்பில்
அதிருப்தி வெளியிடப்பட்டது.
எனினும், சதாம் தரப்பில் மேல் முறையீட்டு மனு
தாக்கல் செய்யப்பட்டது.
சதாமின் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு நேற்று வெளியிடப்பட்டது.
"சதாமுக்கு எதிராக கடந்த நவம்பரில் பாக்தாத் சிறப்பு கோர்ட் வழங்கிய
தண்டனை உறுதி செய்யப்படுகிறது.
ஈராக்கின் உயர் மட்ட தீர்ப்பாயத்தை
வழிநடத்தும் சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் சதாமுக்கு வழங்கப்பட்டுள்ள
துாக்கு தண்டனை உறுதி செய்யப்படுகிறது' என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஈராக்கின் அப்பீல் கோர்ட் செய்தித் தொடர்பாளர் நேற்று இதை தெரிவித்தார்.
சதாமுடன் அவரின் சகோதரர் மற்றும் முன்னாள் நீதிபதிக்கும் துாக்கு தண்டனை
உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈராக் சட்ட விதிகளின் படி, அப்பீல் கோர்ட் தீர்ப்பளித்த பின்னர், அடுத்த
முப்பது நாட்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். அதனால், அடுத்த 30
நாட்களுக்குள் சதாம் உசேனும் மற்றவர்களும் துாக்கிலிடப்படுவர்.
தினமலர்
|