|
'சிறார் படைச்சேர்ப்பை சிறிலங்கா தடுக்காது போனால் அனைத்துலக ஆதரவை இழக்க நேரிடும்': ஹிம் ஹாவல் |
|
|
|
Saturday, 17 February 2007 |
|
"சிறார் படைச்சேர்ப்பை சிறிலங்கா அரசு தடுக்காது போனால் அனைத்துலக ஆதரவை சிறிலங்கா அரசு இழக்க நேரிடும்" என்று பிரித்தானிய வெளிவிவகாரத்துறை மற்றும் கொமன்வெல்த் நாடுகளுக்கான அமைச்சர் கலாநிதி கிம் ஹாவெல் தெரிவித்துள்ளார்.
ஆழிப்பேரலை பேரனர்த்த நிவாரணத்திற்கு என பிரித்தானியாவினால் வழங்கப்பட்ட
நிதிமூலம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பார்வையிட்ட ஹிம்
ஹாவெல், சிறிலங்காவில் இரு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் போர் தொடர்பாக
அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார். சிறார்களை படையில் சேர்ப்பது
தொடர்பான குற்றச்சாட்டு அரசின் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் ஹிம்
ஹாவலுடனான நேர்காணல் பயனுள்ளதாகும்.
முழுமையான நேர்காணல்:
ஊடகவியலாளர்: ஆழிப்பேரலை பேரனர்த்த புனரமைப்புப் பணிகள் எவ்வாறு உள்ளன?
ஹிம் ஹாவல்: அதிகளாவான புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடற்கரையில் இருந்து 250 மீற்றர் தூரத்திலேயே வீடுகள் கட்டப்பட வேண்டும்
என்ற நிபந்தனையை அரசு தளர்த்தியுள்ளது. மக்கள் கடற்கரையில் இருந்து 100
மீற்றர் தூரத்தில் வீடுகளை அமைத்து வருகின்றனர். மக்கள் மகிழ்ச்சியுடன்
வாழ்வதாக நான் நினைக்கிறேன். அவர்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்பட்டு
வருவதால் அவர்களிடம் புதிய நம்பிக்கைகள் பிறந்துள்ளன.
ஆனால் இடம்பெயர்ந்த மக்கள் தற்போதும் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
எங்கு வாழப்போகின்றோம் என்ற ஏக்கம் அவர்களிடம் உள்ளது. நம்பிக்கை இழந்த
நிலையில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
ஊடகவியலாளர்: முன்னர், ஆழிப்பேரலை பேரனர்த்தங்கள் இங்கு இடம்பெற்றதில்லை.
எனவே அதனை ஒப்பிட முடியாது. ஆனால் இது உங்களின் இரண்டாவது பயணம். அதாவது
புனர்நிர்மானப் பணிகள் திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றனவா?
ஹிம் ஹாவல்: எல்லோரும் இதில் ஈடுபாட்டுடன் இருப்பதாக நான்
நினைக்கின்றேன். நல்ல முகாமையாளர்கள், நல்ல கட்டடக் கலைஞர்கள் உள்ளனர்.
நிதிப்பற்றாக்குறை உள்ளதாக நான் நினைக்கவில்லை. விடுதலைப் புலிகளுக்கும்
அரசுக்கும் இடையில் இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரே இந்தப் பணிகளை
முடங்கச் செய்துள்ளன. இங்கு பாதுகாப்பு ஒழுங்குகள் செயலிழந்துள்ளன. மக்கள்
அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். நாங்கள் சென்ற இடங்களில் கடந்த இரவு
நான்கு பேர் கொல்லப்பட்டதாக பின்னர் அறிந்தோம். மிகவும் கடினமான சூழ்நிலை
நிலவுகின்றது.
ஊடகவியலாளர்: பிரித்தானியா, சிறிலங்காவின் நண்பன் என்றும், வட அயர்லாந்து
பிரச்சினையில் நீங்கள் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் சிறிலங்காவிற்கு
உதவ முடியும் எனவும் நீங்கள் சிறிலங்காவிற்கு செல்வதற்கு முன்னர் எழுதிய
கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தீர்கள்.
இந்த அணுகுமுறை எவ்வளவு தூரம் சரியானது என நீங்கள் நினைக்கின்றீர்கள்? எவ்வளவுக்கு இது தேவையானது?
ஹிம் ஹாவல்: இது தொடர்பாக முன்னாள் வட அயர்லாந்து பொதுச் செயலாளர் போல்
மோர்பி மற்றும் பிரித்தானியாவின் பிரதமர் ரொனி பிளேயர் ஆகியோருடன்
கலந்துரையாடினேன். சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகளையும், அங்கு மீண்டும்
பேச்சுக்களை ஆரம்பிக்கக்கூடிய சூழ்நிலைகள் குறித்தும் ரொனி பிளேயர்
மோர்பியிடம் வினவியுள்ளார். இந்த நிலைமைகளை மேம்படுத்துவதற்கு பல வழிகள்
உள்ளதாக நான் நினைக்கின்றேன்.
உண்மை என்னவெனில், என்னால் சிறிலங்கா அரசிற்கு ஒன்றை கூறிக்
கொள்ளமுடியும். இராணுவ வெற்றிகளின் மூலம் பிரச்சினையை தீர்க்கமுடியாது.
அரசு விடுதலைப் புலிகளை ஒரு பிரதேசத்தில் இருந்து வெளியேற்றலாம். ஆனால்
மறுநாள் அவர்கள் ஒன்றுதிரண்டு மீண்டும் வருவார்கள்.
படுகொலைகள் ஆரம்பமாகும், பயங்கரவாத நடவடிக்கைகளும் மீண்டும் தலைதூக்கும்.
இரு தரப்புக்களும் இணைந்து பணியாற்ற வேண்டும். போர் நிறுத்த உடன்பாட்டை
பலப்படுத்துவதன் மூலம் அமைதி முயற்சிகளை கட்டியெழுப்ப வேண்டும். இது தான்
இந்த தீவில் அமைதியை ஏற்படுத்துவதற்கு ஒரே வழியாகும்.
ஊடகவியலாளர்: கிழக்கு மாகாணத்தில் சிறார்களை படையில் சேர்ப்பதை சிறிலங்கா
அரசு ஆதரித்து வருகின்றது அல்லது அதில் அரசு ஈடுபட்டு வருகின்றது என்று
ஹியூமன் றைட் வோட்ச் எனப்படும் மனித உரிமைகள் கண்காணிப்பக அமைப்பின்
கூற்றை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?
ஹிம் ஹாவல்: சிறிலங்காவின் கிழக்கு மாகாணத்தில் எத்தனை சிறார்கள்
கடத்தப்பட்டுள்ளனர் என்பதை அறியும் பணியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின்
சிறப்புப் பிரதிநிதியுடன் நான் கலந்துரையாடினேன். இங்கு நடைபெறுவது
என்னவெனில், விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்துது நீக்கப்பட்ட கருணா
குழுவே கடத்தல்களில் ஈடுபட்டு வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் கடத்தல்கள் நிகழும் போது சிறிலங்கா படையினரும் காவல்துறையினரும்
அதனை தடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் உள்ளன. ஆனால் எம்மிடம்
அதற்கான ஆதாரங்கள் இல்லை. அது தான் உண்மை. ஆனால் நாம் சிறிலங்கா அரசிற்கு
ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். இது ஒரு வருந்தத்தக்க விடயம்.
நீங்கள் அதனை எண்ணிப்பார்க்கலாம்.
சிறார்களை அவர்களின் வீடுகளில் இருந்தும் பெற்றோரிடம் இருந்தும் பலவந்தமாக
கடத்திச் சென்று வேலையாட்களாகவோ அல்லது படையினர்களாகவோ பயன்படுத்தவது
மன்னிக்கமுடியாத குற்றம். இது நிறுத்தப்பட வேண்டும். பிரித்தானியா அரசு
இதனை சிறிலங்கா அரசிற்கு கூறிக்கொள்ள விரும்புகின்றது. நான், நாளை
சிறிலங்காவின் பிரதமரை சந்திக்கும் போதும் இது தொடர்பாக பேசுவேன்.
ஊடகவியலாளர்: பொதுவாக, இதனை நிறுத்த முடியுமா?
ஹிம் ஹாவல்: இந்த அரசு நல்ல நோக்கத்துடன் உள்ளதாக நான் நினைக்கின்றேன்.
எனவே, எங்களால் முடிந்தவரை அவர்களை ஊக்கிவிப்போம். ஆனால் சிறார் கடத்தல்
போன்ற நடவடிக்கைகளை அனுமதிக்க மாட்டோம். அரசுக்கு அது தெரியாது என்றாலும்
அவர்கள் அது நடைபெறாத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை அவர்கள் உறுதி
செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகள் மூலம் மனித உரிமைகள் சிறிலங்காவில்
மதிக்கப்படுவதாக அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
ஏனெனில், எதிர்காலத்தில் சிறிலங்காவிற்கு அனைத்துலக சமூகம் தொடர்ந்து
ஆதரவை வழங்க வேண்டும் எனில் அது தான் ஒரே வழி. இது புரியுமானால் மனித
உரிமைகளுக்கு ஒரு பெறுமதி உண்டு. எனவே அதனை காப்பதற்கு அவர்கள் தங்களால்
முடிந்ததை செய்வார்கள்.
|