 கடந்த சில மாதங்களாக சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களை தகர்த்து வருவதாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் கல்முனைக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றை மூழ்கடித்தாக சிறிலங்கா அரசு கூறியது. ஒரு கப்பல் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்படும் வீடியோக் காட்சியையும் வெளியிட்டது.
அதன் பிறகு பல தடவைகள் கற்பிட்டிக் கடற்பரப்பில் ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு
வந்த விடுதலைப்புலிகளின் படகுகளை மூழ்கடித்ததாக கூறியது. இந்த ஆண்டு
பெப்ரவரி 28ம் திகதி மாத்தறைக் கடற்பரப்பில் ஒரு ஆயுதக் கப்பலை
மூழ்கடித்ததாக சிறிலங்கா அரசு கூறியது. இம் முறையும் ஒரு கப்பல்
தாக்கப்படும் வீடியோக் காட்சியை வெளியிட்டது.
கடைசியாக 18.03.07 அன்று விடுதலைப்புலிகளின் இரண்டு ஆயுதக் கப்பல்களை தாக்கி மூழ்கடித்துவிட்டதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.
இப்படி தொடர்ச்சியாக சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளின் கப்பல்களை
மூழ்கடிப்பதாக சொல்வதும், ஆதாரமாக வீடீயோக்களை வெளியிடுவதும், சில
தமிழர்கள் மத்தியில் அச்சம் கலந்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஆனால்
ஊன்றி ஆராய்கின்ற போது, இந்தக் கப்பல் தகர்ப்புக்கள் அனைத்தும் ஒரு
ஏமாற்று நாடகம் என்பது புரியும்.
இந்தக் கப்பல்கள் அனைத்தும் காலை மற்றும் பகல் வேளைகளிலேயே தாக்கி
அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்கள் விடிவதற்கு
முன்னமேயே தமது பணியை முடித்துச் சென்றுவிடும் என்று விபரம் அறிந்தவர்கள்
உறுதியாகச் சொல்கிறார்கள். அத்துடன் ஒரு ஆயுதக் கப்பல் வருகின்ற பொழுது
விடுதலைப்புலிகள் செய்கின்ற சில திசைதிருப்பல் மற்றும் பாதுகாப்பு
ஏற்பாடுகள் எதுவும் இந்த ஆயுதக் கப்பல்கள் தகர்க்கப்பட்டதன் போது
நடைபெறாததையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இந்த இடத்தில் சிறிலங்கா அரசு தெரிவிக்கின்ற சில செய்திகளின் அடிப்படையில்
பார்க்கின்ற போதும், சிறிலங்கா அரசு பொய் கூறுகிறது என்பதை புரிந்து கொள்ள
முடியும். ஒவ்வொருமுறையும் ஆயுதக் கப்பலில் இருந்து முதலில் சிறிலங்கா
கடற்படை மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், அதன் பிறகு பதிலுக்கு
சிறிலங்காப் படைகள் அந்தக் கப்பல் மீது தாக்குதல் நடத்தி
மூழ்கடிப்பதாகவுமே சிறிலங்கா அரசு தெரிவித்து வருகிறது.
ஆனால் சிறிலங்கா அரசு வெளியிடுகின்ற வீடீயோக் காட்சிகள் குறிப்பிட்ட
கப்பலில் இருந்து தாக்குதல் நடத்தப்படுவதற்கான காட்சிகள் எதுவும்
தென்படவில்லை. குறிப்பாக காலை நேரம் ஒன்றில் மாத்தறைக் கடற்பரப்பில்
கப்பல் மூழ்கடிக்கப்பட்ட வீடியோக் காட்சியிலும் அவ்வாறு எதுவும் இல்லை.
மாறாக சிறிலங்கா கடற்படை தாக்குதல் நடத்துவது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
அத்துடன் இந்த ஆயுதக் கப்பல்களை சிறிலங்காப் படைகளால் ஏன் கைப்பற்ற
முடியாது இருக்கின்றது என்ற கேள்வியும் எழுகின்றது. ஆயுதங்களை
கொண்டுவருகின்ற கப்பல்கள் ஒன்றும் சண்டைக் கப்பல்கள் அல்ல. கடலிலே தனித்து
நிற்கின்ற ஒரு வினியோகக் கப்பலில் இருந்து சிறிய ஆயுதங்களால் ஒரு
மட்டுப்படுத்தப்பட்ட சிறு தாக்குதலை மட்டுமே செய்ய முடியும். ஆனால்
சிறிலங்கா கடற்படையிடம் அதை முறியடித்து அந்தக் கப்பலை செயலிழக்கச் செய்து
கைப்பற்றுகின்ற வல்லமை உண்டு.
விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பல டோராக்களுடன் சண்டையிட்டு, சேதமாகிய
சில டோராக்களை கைப்பற்றியதையும், சென்ற ஆண்டில் சண்டையில் சேதம் அடைந்த
டோரா ஒன்றில் இருந்த கடற்படையினரை உயிரோடு பிடித்ததையும் இந்த இடத்தில்
சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஆனால் சிறிலங்கா கடற்படையோ தனித்து நிற்கின்ற வினியோகக் கப்பல்களை
கைப்பற்றவும், அதில் உள்ள மாலுமிகளை கைது செய்யவும் முடியாமல், அந்தக்
கப்பல்களை மூழ்கடித்துவிடுகின்றது என்பது பெரும் சந்தேகத்தை கிளப்புகின்ற
ஒரு விடயம்.
கடந்த ஆண்டு கல்முனைக் கடற்பகுதியில் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட போது,
அந்தக் கப்பலில் இருந்து ஒரு மர்ம உருவம் வெளியேறிச் செல்வது வீடியோக்
கட்சியில் தெளிவாகத் தெரிந்தது. ஒரு உயிர் காக்கும் படகு போன்று இருந்த
அந்த உருவம் தாக்குதல் நடத்துவதற்கு முன்னமேயே அந்தக் கப்பலில் இருந்து
வெளியேறிச் சென்றுவிட்டது. ஆனால் சிறிலங்கா அரசின் அறிக்கைகளில் அந்தப்
படகு குறித்து எந்தத் தகவலும் இல்லை.
அத்துடன் மாத்தறைக் கடற்பகுதியில் நடந்த கப்பல் தகர்ப்பு நிகழ்வின் போது,
சிறிலங்கா கடற்படை ஒரு வேடிக்கையான அறிக்கையை வெளியிட்டது. கப்பலில்
இருந்த விடுதலைப்புலிகளின் உடல்கள் கருகிவிட்டதாகவும், ஆனால் அந்தக்
கப்பலில் இருந்த 10.000 எறிகணைகளை தாம் கண்ணுற்றதாகவும் கடற்படையின்
பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன் இந்தக் கப்பல் மூழ்கடிக்கப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்பே
சிறிலங்கா அரசு ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. "விடுதலைப்புலிகளின்
ஆயுதக் கப்பல் வருவதாக நட்புநாடு ஒன்றின் புலனாய்வுத்துறை அறிவித்துள்ளது"
என்று செய்தியை வெளியிட்டிருந்தது. ரகசியமாக வைத்திருக்க வேண்டிய ஒரு
செய்தியை சிறிலங்கா அரசு இப்படி வெளிப்படையாக வெளியிட்டதும் சந்தேகத்தை
எழுப்புகின்ற ஒரு விடயம்.
இப்படி முன்னுக்குப்பின் முரணாகவும், வேடிக்கையாகவும், இயற்கைக்கு
மாறாகவும் சிறிலங்காப் படைகளின் அறிக்கைகள் அமைந்து, இந்தக்
கப்பல்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை
என்பதைக் காட்டி நிற்கின்றன.
ஆனால் இங்கே சில கேள்விகள் எழுகின்றன. இவைகள் விடுதலைப்புலிகளின்
கப்பல்கள் இல்லையென்றால், இந்தக் கப்பல்கள் யாருடையவை? இந்தக் கப்பல்கள்
எந்த நாட்டைச் சேர்ந்தவை? எதாவது ஒரு நாட்டின் கப்பல் என்றால், அந்த நாடு
ஏன் எந்த அறிக்கையும் விடவில்லை? இவ்வாறு இந்தக் கேள்விகள் அமைகின்றன.
இந்த இடத்திலே இன்னும் ஒரு விடயத்தைப் பார்ப்போம். இந்தியாவில் குஜராத்
மாநிலத்தில் "ஆலங்" என்று ஒரு பகுதி இருக்கிறது. இந்த இடம் உலக அளவில்
பெயர் போனது. இங்கேதான் உலகத்திலேயே மிகப் பெரிய கப்பல் உடைக்கும்
தொழிற்சாலை இருக்கின்றது.
இன்றைக்கு மூன்றாம் உலக நாடுகளில் கப்பல் உடைக்கும் தொழில் வேகமாக
வளர்ந்து வருகின்றது. இந்தியா, பங்களாதேஸ் போன்ற நாடுகள் இந்தத் தொழிலில்
முன்னணி வகிக்கின்றன. பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளும் குறிப்பிட்ட
அளவில் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இதில் பெரும் இலாபம் வருவதைக்
கண்ட சீனாவும் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
கப்பல் உடைக்கும் நிறுவனங்கள் பாவனைக்காலம் முடிந்த கப்பல்களை மிகக்
குறைந்த விலைக்கும், பல முறை இலவசமாகவும் வாங்கி உடைக்கின்றன. பணம்
கொடுத்து தமது கப்பல்களை உடைப்பவர்களும் உண்டு. கப்பல் உடைக்கும்
நிறுவனங்கள் இந்தக் கப்பல்களை உடைத்து புதிய கப்பல்களை தயாரித்தும்,
இரும்புகளை பெற்றும் கொள்ளை இலாபம் சம்பாதிக்கின்றன.
அதே வேளை இந்தத் தொழில் சுற்றுச் சூழல், மற்றும் சுகாதார ஆர்வலர்களால்
கடுமையாகக் கண்டிக்கப்படுகின்றது. இந்தத் தொழில் நடைபெறும் சூழல் கடுமையாக
மாசடைந்து வருகின்றது. அத்துடன் தொழிலாளிகள் புற்றுநோய் போன்றவற்றால்
தாக்கப்பட்டு இறக்கின்ற சம்பவங்களும் நேர்கின்றது. நூற்றுக்கும் மேற்பட்ட
தொழிலாளர்கள் இறந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தொழில் சம்பந்தமாக கடந்த ஆண்டு நடந்த ஒரு சம்பவம் சர்வதேச கவனத்தை
ஈர்த்தது. பிரான்ஸின் விமானம் தாங்கிக் கப்பல் ஒன்று தன்னுடைய பாவனைக்
காலத்தை முடித்துக் கொண்டது. ஆனால் பல நாடுகளின் கப்பல் உடைக்கும்
நிறுவனங்கள் அந்தக் கப்பலை ஏற்றுக் கொள்ள மறுத்தன. அந்தக் கப்பலில் இருந்த
நச்சுத் தன்மை மிக்க கழிவுகளே இதற்கு காரணம். இந்தக் கப்பலை தமது நாட்டுக்
கொண்டுவருவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவைகள் கருதின.
கடைசியில் இந்தியாவின் ஆலங்கில் உள்ள நிறுவனம் அந்தக் கப்பலை வாங்கிக்
கொண்டது. மூன்று கோடி ருபாய்களுக்கு வாங்கி முப்பது கோடி ருபாய்கள் வரை
இலாபம் சம்பாதித்தது. அந்த நிறுவனத்திற்கு பணமே முக்கியமாக இருந்தது.
இந்திய அரசும் பேசாது இருந்தது.
இவ்வாறு பல பாதிப்புக்களை உருவாக்கக்கூடிய கப்பல் உடைக்கும் தொழில்
இந்தியாவில் ஆலங் பகுதியில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
தமிழ்நாட்டிலும் வாலிநோக்கம் என்ற இடத்தில் ஒரு சிறிய கப்பல் உடைக்கும்
தொழிற்சாலை உண்டு. வாலிநோக்கத்திலே இந்தத் தொழிலின் காரணமாக மணல்
படர்ந்து, அந்தப் பகுதியின் கடற்கரை அழிவுற்று வருகிறது என்பது இங்கு
குறிப்பிடத்தக்கது.
அடிக்கடி கப்பல்கள் சிறிலங்கா கடற்பரப்பில் மூழ்கடிக்கப்படுகின்ற
சம்பவங்களோடு, இந்தியாவின் கப்பல் உடைக்கும் தொழிலையும் இணைத்துப்
பார்க்கின்ற பொழுது, கப்பல்கள் மூழ்கடிக்கப்படுவது பற்றிய கேள்விகளுக்கான
விடைகள் புரிய ஆரம்பிக்கும்.
ஏற்கனவே இந்தியாவின் புலனாய்வுத்துறை தமிழ்நாட்டில் எழுந்துள்ள ஆதரவு
நிலையை இல்லாமல் செய்வதற்கு, ஆயுதக் கடத்தல் என்ற நாடகங்களை அரங்கேற்றி
வருகிறது. காலம் காலமாக சாதாரண பொருட்களை கடத்துபவர்களை பிடித்து, அவர்களை
மிரட்டி, இதை செய்து வருகிறது.
அத்துடன் பாவனை முடிந்து உடைப்பதற்காக வருகின்ற கப்பல்களை சிறிலங்காவிற்கு
வழங்கி, சிறிலங்காவின் பிரச்சார யுத்தத்திற்கு உதவி செய்து வருகிறது.
மூழ்கடிக்கப்படுகின்ற கப்பல்கள் பாவனை முடிந்த வேற்று நாட்டுக் கப்பல்களாக
இருப்பதால், அந்தக் கப்பல்கள் குறித்து கேள்விகள் வருவதற்கு வாய்ப்பே
இல்லை.
இந்த கப்பல்கள் மூழுகடிப்பு நாடகம் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை
குறி வைத்து நடத்தப்படுகிறது. விடுதலைப்புலிகளுக்கு பெரும்பாலான நிதி
வெளிநாட்டில் இருந்து போவதாக சிறிலங்கா அரசு நம்புவதால், அவ்வாறு நிதி
கொடுப்பவர்களை சோர்வடையவும், சலிப்படையவும் செய்யும் முகமாக இந்த நாடகத்தை
நடத்தி வருகிறது. "நீங்கள் போராட்டத்திற்கு அனுப்புகின்ற பணத்தை நாங்கள்
கடலில் வைத்துக் கரைத்து விடுகிறோம்" என்று ஒரு பொய்யான செய்தியை
சிறிலங்கா அரசு புலம்பெயர் தமிழர்களுக்கு சொல்ல முனைகிறது.
ஆகவே எமது தமிழர்கள் சிறிலங்கா அரசு நடத்துகின்ற இந்த நாடகம் குறித்து
விழிப்பாக இருப்பதோடு, சிறிலங்கா அரசு பாவனை முடிந்த நச்சுக் கழிவுகளை
கொண்ட கப்பல்களை மூழ்கடித்து கடலை மாசுபடுத்துவது குறித்தும்,
சுற்றுச்சூழல் நிறுவனங்களுக்கு அறிவிக்க வேண்டும்.
(நன்றி வெப்ஈழம்)
|