|
"இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் ஒரே பாதுகாப்பு அரணாக உள்ள விடுதலைப் புலிகளால் மட்டுமே அங்குள்ள தமிழ் மக்களைப் பாதுகாக்க முடியும் என்று தற்போதும் முழுமையாக நம்புகின்றோம்" என பாரிஸ் தமிழ் வணிகர் சங்கத்தினர் பிரான்ஸ் அரசாங்கத்துக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.04.07) அதிகாலை 5 மணியளவில் பிரான்சில் உள்ள
தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளர்கள் 17
பேரை 'பயங்கரவாதிகள்', 'கட்டாயமாக பணம் வசூலித்தனார்' என்ற
குற்றச்சாட்டுகளில் பிரான்ஸ் காவல்துறையினர் கைது செய்தமையை மறுத்து,
பாரிஸ் தமிழ் வணிகர் சங்கத்தினர் அறிக்கை தயாரித்து சமர்ப்பித்துள்ளனர்.
இந்த அறிக்கையில் 130 வணிக நிறுவனத்தினர் தங்கள் நிறுவன முத்திரையுடன்
கையெழுத்திட்டுள்ளனர். இந்த அறிக்கை பிரான்ஸ் அரச தலைவர் மற்றும்
வெளிநாட்டு, உள்நாட்டு அமைச்சர்கள், அரச தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ள
வேட்பாளர்கள் என அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுளன.
அந்த அறிக்கையின் முழு விபரமாவது:
இதன்கீழ் கையொப்பமிடும் பாரிஸ் 10, லா சப்பல் பகுதி இலங்கைத் தமிழின
வர்த்தகர்களாகிய நாம் தனியாகவும், கூட்டாகவும் தங்களுக்கு சமர்ப்பிக்கும்
அறிக்கை யாதெனில்:
01. நாங்கள் இலங்கையில் வாழும் மக்களின் இன்றைய அவல நிலை காரணமாகவும்,
அங்கு நாளாந்தம் சிறிலங்கா இராணுவத்தால் தமிழர்கள் வயது, பால்
வேறுபாடுகளின்றிப் படுகொலை செய்யப்படுவதாலும், பலர் கடத்தப்பட்டு காணாமல்
ஆக்கப்படுவதாலும், வான் குண்டுத் தாக்குதலினாலும், எறிகணை வீச்சினாலும்
அப்பாவித் தமிழ் மக்கள் பலியாவதாலும், லட்சக்கணக்கான மக்கள் சொந்த
இடங்களிலிருந்து அகதிகளாக வெளியேறுவதாலும் விடுதலைப் புலிகளின் ஆயுதப்
போராட்டத்தை நிராகரிக்க முடியாதவர்களாக உள்ளோம்.
02. இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் ஒரே பாதுகாப்பு அரணாக உள்ள
விடுதலைப் புலிகளால் மட்டுமே அங்குள்ள தமிழ் மக்களைப் பாதுகாக்க முடியும்
என்று தற்போதும் முழுமையாக நம்பு கின்றோம்.
03. இலங்கைத் தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை
அர்ப்பணித்துப் போராடும் விடுதலைப் புலிகள் இலங்கைக்கு வெளியே எந்த
வன்முறைகளிலும் ஈடுபடாத நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாத
இயக்கமாக முத்திரை குத்துவதனையும், அந்த அமைப்பை பிரான்ஸ் நாட்டில் தடை
செய்ததனையும் நாம் மிகுந்த வேதனையுடன் நோக்குகின்றோம்.
04. கடும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள சிறிலங்கா அரசாங்கம் இன்றுவரை தமிழர்கள் மீதான வன்முறைகளை நிறுத்தாதுவிடத்து, விடுதலைப் புலிகளை
ஆதரிப்பதனைத் தவிர எமக்கு வேறு மார்க்கம் எதுவும் தென்படவில்லை என்பதனை
தாழ்மையுடன் அறியத் தருகின்றோம்.
05. விடுதலைப் புலிகள் அமைப்போ, அதன் பணியாளர்களோ எங்களிடம் எந்தக்
காலத்திலும் கட்டாய பண வசூலிப்பில் ஈடுபடவோ, அதற்காக அச்சுறுத்தல்
மேற்கொள்ளவோ இல்லை என்பதனை ஆணித்தரமாக தங்களுக்கு அறியத் தருகின்றோம்.
06. தமிழீழ விடுதலைப் புலிகள் பழி போட்டு, அவர்களது நடவடிக்கைகளை முடக்க
சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட சதியின் ஒரு பகுதியே இந்த கட்டாய பணம்
வசூலிக்கும் குற்றச்சாட்டு என்பதை தங்கள் மேலான கவனத்திற்குத் தருகின்றோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளையில் எதிர்வரும் திங்கட்கிழமை (09.04.07) நடைபெறவுள்ள கண்டன
ஒன்றுகூடல் நிகழ்விற்கு முன்னதாக காலை 10 மணிக்கு ஊடகவியலாளர்
சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்
தெரிவிக்கின்றனர்.'
நெருடல் இணையம்
|