பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow 'விளையாட்டு - அரசியல் - மொழி - நாட்டுப்பற்று!
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

'விளையாட்டு - அரசியல் - மொழி - நாட்டுப்பற்று! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 04 May 2007
உலகக் கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டி விளையாட்டின் வெற்றியின்- ஊடே, தனது இனவெறி அரசின் அரசியல் பரப்புரையை, மேற்கொள்ள முனைந்த சிறிலங்கா அரசின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

உலகக் கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியின் இறுதிச்சுற்றில் சிறிலங்கா அணியை, அவுஸ்திரேலிய அணி வெற்றி கொண்டுள்ளது. வெளிநாட்டில் இப்படிப்பட்ட ஒரு தோல்வியை, சிறிலங்கா அடைந்துள்ள அதே நேரத்தில், உள்நாட்டில்- சிறிலங்காவிலும் இன்னுமொரு மாபெரும் தோல்வியையும், இழப்பையும் அது அடைந்துள்ளது. சிறிலங்காவின் இரண்டு பிரதான பெற்றோலிய எரிபொருள் களஞ்சியங்கள் மீது வான் புலிகள் வெற்றிகரமாகத் தாக்குதல்களை நடாத்தியுள்ளார்கள்.

சிறிலங்காவின் பேரினவாத அரசுகள் தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட உணர்வை மழுங்கடிப்பதற்காகவும், அவர்களது நாட்டுப்பற்றினை நீர்த்துப் போகச் செய்வதற்காகவும் மேற்கொண்டு வருகின்ற உத்திகளில், விளையாட்டுப் போட்டியும் ஒன்றாகும். தமிழ் மக்களின் நாட்டுப்பற்று உறுதியோடு வளர்ந்து வரவேண்டிய இந்த முக்கிய காலகட்டத்தில் சில அவசியமான கருத்துக்களைத் தர்க்கரீதியாக முன்வைக்க விழைகின்றோம்.

முதலில் விளையாட்டுப் போட்டிகள் குறித்துச் சிறிது ஆழமாகக் கவனிப்போம். சிறிலங்காவின் துடுப்பாட்ட அணியில் முத்தையா முரளிதரன் என்பவர் தமிழ் மக்களின் அடையாளமாகக் காட்டப்பட்டு வருகின்றார். இதன் மூலம் சிறிலங்கா அணி, சகல இன மக்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற அணியாக காண்பிக்கப் படுகின்றது. தமிழ் மக்கள் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழீழ மக்கள் இந்த விளையாட்டு மாயைக்குள் சிக்குண்டு, அலைபாய்வதை நாம் காணக்கூடியதாக உள்ளது.

சிறிலங்கா அரசு முரளிதரனை உயர்த்திப் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கையில் அங்கே மலையகத்தில் தமிழர்கள் தினமும் கடத்தப்பட்டு காணாமல் போகின்றார்கள். கைதாகின்றார்கள். வன்முறையை சந்திக்கின்றார்கள். பல மலையகத் தமிழர்கள் கொலையுண்டும் போகிறார்கள். அவர்களது வாழ்விடங்களைச் சுற்றிச் சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. 'மகிந்த ராஜபக்சவின் அரசு மலையகத் தமிழர்ளை பிச்சைக்காரர்களைப்போல் நடாத்துகின்றது' என்று அந்த அரசில் அமைச்சர் பதவி வகிக்கும் ஆறுமுகம் தொண்டமான் கடந்தவாரம் குற்றம் சாட்டியிருந்தார். ஆக மலையக மக்கள் இந்த நாட்டின் மக்களாக கருதப்படவில்லை. ஆனால் முரளிதரன் மட்டும் இந்த நாட்டின் அடையாளமாகக் காட்டப்பட்டு வருகின்றார் முரளிதரன் ஒரு பெரிய விளையாட்டுவீரன் என்பதால் அவரது மலையக மக்களுக்கு எதுவும் கிடைத்து விடவில்லை. மாறாக அவர்கள் அடக்கப்பட்டு, அழிக்கப்பட்டே வருகின்றார்கள. பல்லை இளித்துக் காட்டிக்கொண்டு முரளிதரன் வீசுகின்ற ஒவ்வொரு பந்தும் உண்மையில் தன் இனத்து மக்களுக்கு எதிராக அவர் வீசுகின்ற பந்துதான்.!

தவிரவும் சிறிலங்காவின் சிங்கள விளையாட்டு வீரர்களின் பெரும்பாலானோர் சிங்கள இனவாதிகளாகவே உண்மையில் உள்ளார்கள். உதாரணத்திற்கு முன்னர் உலகக் கோப்பையை வென்ற சிறிலங்காவின் துடுப்பாட்ட அணியின் தலைவர் அர்ஜீன ரணதுங்க ஒரு தீவிர சிங்கள இனவாதியாவார்.! இன்று அவர் சிங்கள கடும்போக்கு இனவாதக் கட்சியோன்றில் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றார். பல ஆண்டுகளுக்கு முன்பு சிறிலங்காவின் துடுப்பாட்ட அணியின் தலைவர் இந்தியா சென்று சத்திய சாயி பாபாவை சந்தித்து அவரது ஆசியைப் பெற்றார். அவர் சத்திய சாயிபாபாவை சந்தித்ததன் காரணம் என்ன? என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சிறிலங்காவின் துடுப்பாட்ட அணியின் தலைவர் கூறிய பதில் என்ன தெரியுமா?

'எமது நாட்டில் போர் நடைபெறுகின்றது. அதன் காரணமாக எமது நாட்டின் பொருளாதரம் வீழந்து போய் உள்ளது. நாம் இந்த விளையாட்டுப் போட்டியில் வென்றால் எமது நாட்டிற்கு நல்ல விளம்பரம் கிடைக்கும். அதன் மூலம் சுற்றுலாத்துறையும், வணிக முதலீடுகளும் வளர்ச்சி பெறும். எமது பொருளாதாரம் மேம்படுத்தப்படும். இவற்றின் மூலம் நாம் போரில் வெல்லமுடியும். இதற்காகத்தான் நான் சத்தியசாயி பாபாவை சந்தித்து அவரது ஆசியைப் பெற்றேன்.'

இதுதான் சிறிலங்காவின் அன்றைய துடுப்பாட்ட அணியின் தலைவர் தன் திருவாய் மலர்ந்து அருளிய வார்த்தைகள். இப்படிப்பட்ட இனவாத விளையாட்டு வீரர்கள், சகல இனத்ததவர்களையும் அணைத்துக் கொண்டு போவார்கள் என்று நினைப்பது மடமைத்தனமாகும்.!

உலகக் கோப்பையை வெல்வது, தமிழனை வெல்வது என்று இந்த விடயங்களை எல்லாம் ஒரே 'கோப்பைக்குள்' வைத்துத்தான் இவர்கள் எண்ணி வருகின்றார்கள். இவை யாவும் தமது போரின் வெற்றிக்கான பின் முனைப்புக்கள்தான். துடுப்பாட்ட விளையாட்டும் அதன் வெற்றிகளும் சிங்கள இனவாதத்தின் சிந்தனைகள்தான்!. இந்த சிந்தனைகளின் ஒரு குறியீடுதான் துடுப்பாட்ட போட்டி இவற்றை அறியாமல் எம்மவர்கள் எங்களது தேசத்தை அழிப்பவர்களை பாராட்டி வருகின்றார்கள். விளையாட்டும், அரசியலும் வேறுவேறு அல்ல!

இனி, விளையாட்டு போட்டி மீதான தடை குறித்துச் சற்று ஆழமாக கருத்து ஒன்றைச் சொல்ல விழைகின்றோம்.

தென்னாபிரிக்கா மீது முன்னர் உலக நாடுகள் துடுப்பாட்ட போட்டிக்கான தடையை விதித்திருந்ததை நாம் அனைவரும் அறிவோம். அவ்வேளையில் நிறவெறித் தென்னாபிரிக்கா வேறு எந்த நாட்டோடும் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இது குறித்துச் சற்று நாம் ஆழமாகக் கவனித்தால் ஒரு முக்கிய விடயம் புலப்படும். உலக நாடுகள் தென்னாபிரிக்க மக்களின் நலன்கருதி இந்தத் தடையைக் கொண்டு வரவில்லை உலக நாடுகள் தங்களின் சொந்த அரசியல் நலனை மட்டும் கருத்தில் கொண்டுதான் இந்த விளையாட்டுத் தடையைக் கொண்டுவந்தன. உலக நாடுகள் தென்னாபிரிக்கா மீது இந்த விளையாட்டுத்தடையைக் கொண்டு வந்த பின்னரும், அங்கே தம்முடைய வர்த்தக நலன்களைப் பேணியே வந்துள்ளன. என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால் திரு நெல்சன் மண்டெலா அவர்கள் சுமார் இருபது ஆண்டுகள் சிறையில் இருந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிராது. உலக நாடுகள் தென்னாபிரிக்காவின்  வலிமையான புள்ளிகள் மீது அழுத்தம் கொடுக்கவில்லை. மென்மையான இடங்களில் மட்டும்தான் உலகநாடுகள் 'அடித்துக்' கொண்டிருந்தன.

ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாமோ மென்மையான இடத்தில் கூட அழுத்தம் கொடுக்கத் தயங்கி நிற்கின்றோம்.

மேற்கூறிய தரக்கங்களின் அடிப்படையில் இன்னுமொரு முக்கிய விடயத்தை அணுக விழைகின்றோம்.

சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் இப்போது வெளிப்டையாகத் தெரியவர ஆரம்பித்துள்ளன. இதன் அடிப்படையில் மேற்குலக மனித உரிமை அமைப்புக்களும், மேற்குலக நாடுகளும் சிறிலங்கா அரசைக் கண்டிக்க ஆரம்பித்துள்ளன. தமிழீழ மக்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழீழ மக்களுக்கும் சற்று ஆறுதலைiயும் பெரிதான எதிர்பார்ப்புக்களையும் இத்தகைய கண்டன அறிக்கைகள் அளித்துள்ளன.

ஆனால் இவற்றின் உள்ளே பொதிந்துள்ள ஒரு கபட நாடகத்தையும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இவற்றை நாம் அதன் தென்னாபிரிக்க மீதான அன்றைய கண்டனங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

'இன்று சிறிலங்கா அரசுமீது வெளிநாடுகள் விடுகின்ற கண்டனங்கள் என்பதானது சிறிலங்காவைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காவே தவிர தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக அல்ல!'

கேந்திர முக்கியத்துவம் போன்ற சில காரணங்களுக்காக இலங்கைதீவில் ஏதோ ஒரு விதமான(?) சமாதானம் வரவேண்டும் என்று மேற்குலகம் எண்ணுகின்றதே தவிர, தமிழர்களுக்குரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் மேற்குலகிற்கு உண்மையான அக்கறை இல்லை என்பதுதான் உண்மையுமாகும்.!

விடுதலைப் புலிகளை அந்நியப்படுத்த வேண்டும். அவர்களைப் பலமிழக்க செய்ய வேண்டும் அதேவேளையில் சிறிலங்காவின் அரசின் பலம் உடைந்து விடக்கூடாது என்பதில் சம்பந்தப்பட்ட உலகநாடுகள் கவனமாக உள்ளன.

இதுதான் இன்றைய அரசியலின் யதார்த்த நிலை!.

சிறிலங்காவிற்கான பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்கொட், தனது இராஜதந்திர நடுநிலையை மறந்து சிறிலங்காவின் துடுப்பாட்ட அணிக்கு ஆதரவு வழங்கியதையும் அந்த ஆதரவை அவர் வழங்கிய விதத்தையும் வாசகர்கள் ஊன்றிக் கவனித்தால் எமது தர்க்கத்தின் அடிப்படை நன்கு புரியும்.

'சிறிலங்காவின் சிங்கங்களே, வென்று வாருங்கள்' என்று எழுதப்பட்ட வாழ்த்து மடலில் கைiயாப்பமிட்ட பிரித்தானிய தூதுவர் சிறிலங்காவின் துடுப்பாட்ட அணியினர் அணிகின்ற ஆடைகளை அணிந்து தனது சக 52 ஊழியர்களுடன் கைகளை மேலே உயர்த்தியவாறு, தமது வாழ்த்துக்களை சிறிலங்கா அணியினருக்கு வழங்கியிருந்தார்.

இங்கே சிங்கம் என்பது சிங்களத்தின குறியீடு என்பதையும், இதில் தமிழ் மக்கள் சேர்த்தி இல்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். தவிரவும் பிரித்தானியத் தூதுவர் தாங்கி நின்ற சிங்கக் கொடியின் வடிவமைப்பும் தமிழ் இனத்தைப் புறம் தள்ளியே வடிவமைக்கப்ட்டுள்ளது என்பதையும் நாம் முன்னர் பல தடவைகள் தர்க்கித்து உள்ளோம். பிரித்தானியத் தூதுவரின் இத்தகைய செயல்கள் மேற்குலகச் சிந்தனையை வெளிக்கொண்டு வருவதாகவே அமைந்துள்ளன.

மேற்கூறிய தர்க்கங்களின் அடிப்படையில் சில முக்கிய அரசியல் கருத்துக்களை முன்வைக்க விழைகின்றோம்.

புலம் பெயர்ந்த தமிழர்களாகிய எமக்குப் பொதுவாக ஒரு மனநிலை உண்டு. சிறிலங்காவின் அரசுகளும், அதன் அரசியல்வாதிகளும்தான் சமாதானத்திற்கு எதிரானவர்கள். அவர்களால்தான் பிரச்சனைகள் உருவாகின்றன. ஆனால் சிங்களவர்கள் பொதுவாக நல்லவர்கள், என்ற ஒரு கருத்தும் மனநிலையும் எம்மிடம் உண்டு. இந்த மனப்பான்மையிலிருந்து நாம் விடுபடவேண்டும். பெரும்பாலானச் சிங்களவர்கள் தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற கருத்தில் உறுதியாகவே உள்ளார்கள். இங்கே நாம் சொல்ல வருவதைத் 'தமிழ் இனவாதம்' என்று தவறாக பொருள் கொள்ளக் கூடாது.

தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசுகள் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளுக்கும், இராணுவ நடவடிக்கைகளுக்கும் பெரும்பான்மைச் சிங்களவர்கள் தங்களது முழுஆதரiவுகளையும் வழங்கியே வந்திருக்கின்றார்கள் என்பதை வரலாறு கூறும். அமெரிக்கப் பொதுமக்கள் தமது அரசுகளுக்கு எதிராக வியட்நாம் மீதான போரையும், ஈராக் மீதான போரையும் கண்டித்து வெகுண்டு எழுந்து ஆர்ப்பாட்டம் செய்வதைப் போன்றோ, அல்லது ஐரோப்பியப் பொதுமக்கள் தமது அரசுகளுக்கு எதிராக போர்களைக் கண்டித்து எழுவது போன்றோ சிங்கள் மக்கள் செய்வதில்லை. மாறாக தமிழர்களை அழிக்க முனைகின்ற சிங்கள இனவாதக் கட்சிகளுக்குத்தான் சிங்களப் பொதுமக்கள் தொடர்ந்தும் தங்களது ஆதரவை காட்டி வந்துள்ளார்கள். அன்றிலிருந்து இன்றுவரை சிங்களப் பொதுமக்கள் இவ்வாறுதான் நடந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது சிறிலங்காவின் அரசிற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைப் பலம் இருந்தது. ஆயினும் எதுவும் அமலாக்கப்படவில்லை. இப்போது மூன்று கட்சிகள் சேர்ந்து கூட்டாட்சி அமைத்து பிரச்சனையைத் தீர்க்கலாம் என்று சித்தார்த்தன் போன்றவர்கள் பேச முற்பட்டிருக்கின்றார்கள்.

சிங்களவர்கள் தீர்வு ஒன்றைத் தரமாட்டார்கள். என்ற விடயம் தெளிவாக புரிந்திருந்த போதிலும், பேசுவதால் பலனில்லை என்று தெரிந்திருந்த போதும், சிங்களவர்களோடு இணங்கிப் போய்ப் பேசலாம் என்ற கருத்ருவாக்கம் தவறானதாகும்.

இவ்வாறாக இணங்கிப் போகமுனையும் கருத்துருவாக்கம் எமது நாட்டுப்பற்றை நீர்த்துப்போக வைக்கும். நாட்டுப்பற்று என்பது, இணங்கிப் போவதற்கு அப்பாற்பட்டு வரவேண்டும்.

இந்த விடயத்தை சற்று ஆழமாகச் சிந்தித்து பார்ப்போம்.

இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டிருந்தவாறு மேற்குலக நாடுகள் தத்தமது நலன் சார்ந்தே செயற்பட்டு வருகின்றன. இந்த நாடுகள் தங்கள் சொந்த நலன்களுக்கான கருத்துக்களில் திடமாக இருந்து கொண்டு எம்மைப் போன்றவர்களிடம் 'எதிரியைப் பகைக்காதே, எதிரி நல்லவன், எதிரி பரவாயில்லை, அவனோடு இணங்கிப் போய்ப் பார்க்கலாம்" - என்று அறிவுரைகளைக் கூறி வருகின்றன. இந்தக் கருத்துருவாக்கங்களைப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் அவை தொடர்ந்தும் விதைத்து வருகின்றன. இந்த அரசியலில்தான் பெருவாரி தமிழர்கள் உள்வாங்கப்பட்டு வீழ்ந்து போய் உள்ளார்கள். தெளிவான நாட்டுப்பற்று உள்ளவர்கள் இதற்குள் வீழ்ந்து போக மாட்டார்கள். இத்தகைய கருத்துக்களுக்கு இணங்கிப் போவது மேலும் அழிவுகளைத்தான் கொண்டு வரும்.!

எம்மிடையே உள்ள பெரிய குறைபாடு மேற்குலகின் இத்தகைய கருத்துக்களோடு இணங்கிப்போவதுதான். அதனால்தான் நாட்டுப்பற்று என்பது, இணங்கிப் போவதற்கு, அப்பாற்பட்டு இருக்கவேண்டும் என்று கூறியிருந்தோம்.

நாட்டுப்பற்று என்பதன் அடிப்படை என்பதானது எம்முடைய மண் எம்முடைய இனம், எம்முடைய மொழி என்பதில் பற்றுவெறி கொண்டு நிற்பதேயாகும். அடிப்படையில் இவை குறித்த பற்றும் இவற்றை அழிப்பவர்கள் மீது வெறுப்பும் இல்லாவிட்டால் அந்த இனம் வெற்றி பெறவே முடியாது.

இங்கே யூதர்களின் நாட்டுப்பற்றுப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். யூதர்கள் பல்வெறு மொழிகளைப் பேசி வந்தாலும், தமது மதம் குறித்து ஒன்றுபட்டுள்ளார்கள். அவர்களுடைய நாட்டுப்பற்று அதி உச்சமானது. இன்று அமெரிக்காவின் அதிபர்கூட இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றும் செய்து விட முடியாது ஏனென்றால் யூதர்கள் தமது நாட்டுப்பற்றைப் பாதிக்கும் எதனோடும் சமரசம் செய்து கொள்ளவதில்லை. அவற்றோடு இணங்கிப் போவதுமில்லை.

ஆனால் நாம்?

ஈழத்தமிழர்களாகிய நாம் பல மதங்களைச் சேர்ந்திருந்தாலும் மொழியால், பண்பாட்டால், மண்ணால் ஒன்றுபட்டுள்ளோம். ஆனால் இந்த அடிப்டைக் காரணிகளைக் குலைக்கின்ற காரணிகளைத்தாம் நாம் இயல்பாகவே செய்து வருகின்றோம். தமிழுக்கு எதிரான சமஸ்கிருத மொழியில் வணங்குவது, வேற்று மொழியான தெலுங்குப் பாடல்களில் பற்றுவைப்பது எனது பண்பாட்டுக்கு அப்பாற்பட்ட முறையில் பிறப்பு, இறப்பு, திருமணம் முதலானவற்றிற்கான சடங்குகளைச் செய்வது விளையாட்டு என்ற பெயரில் எம்மைக் கொல்பவனின் வெற்றிக்காக உழைப்பது ரஜனிகாந்த் என்ற தமிழ் நல விரோதியின் திரைப்படங்களுக்கு செல்வது,- இவை யாவும் எமது நாட்டுப்பற்றிற்கு எதிரானவையாகும். காலப்போக்கில் எமது நாட்டுப்பற்றை இவை நீர்த்துப்போக வைத்துவிடும். மேற்கூறியவை சில உதாரணங்களேயாகும்.

உண்மையைச் சொல்வதற்கு வேண்டிய தைரியத்தையும் விட, அந்த உண்மையை ஏற்றுக் கொள்வதற்குத்தான் மிகுந்த தைரியம் வேண்டும்.

மொழியால், பண்பாட்டால், மண்ணால் ஒன்றுபட்டுள்ள நாம் முதலில் இவற்றிற்கு முதன்மைத்துவம் கொடுக்க வேண்டும். நாட்டுப்பற்றாளன் தன் நாட்டையே முதன்மையாகக் கொண்டு அதன் விடுதலை குறித்தே எண்ணியும், செயலாற்றியும் வருவான். இன்று வலுவாக உள்ள வேற்று நாடுகளை நாம் கவனித்துப் பார்த்தால் அந்த நாட்டு மக்கள் இவ்வாறே இருப்பதையும், மற்றவர்களுக்கு மற்றவை இரண்டாம் பட்சமாக இருப்பதையும் நாம் காணலாம். புலம்பெயர்ந்த தமிழீழத்தவர்களாகிய நாம் முழுமையாக மனது வைத்தால் இவர்கள் எல்லோருக்கும் முன்னுதாரணமான நாட்டபற்றாளர்களாகத் திகழலாம். அதனால் பயன் அடையப் போவது நம்மிலும் பெரிதான நமது நாடே! 


சபேசன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..