பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதிப்போருக்குத் தயாராகின்றார்களா?
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதிப்போருக்குத் தயாராகின்றார்களா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 10 June 2007
தற்போது தென்னிலங்கையிலே சிங்கள அரச மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் மிகவும் பரவலாகப் பேசப்படும் விடயம் புலிகள் இறுதிப்போருக்குத் தயாராகிவிட்டார்களா என்பதுதான். சில வாரங்களாக கொழும்பு ஊடகங்களிலே இது தொடர்பான கருத்துக்கள் கட்டுரைகளிலும் இணையத்தளங்களிலும் வெளிவந்துகொண்டிருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.

முதலில் சிங்களவர்கள் மத்தியில் இவ்வாறான ஓர் எண்ணம் எப்படி ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து பார்த்தோமானால் விடுதலைப் புலிகளின் அண்மைக்கால வெற்றிகரமான வலிந்த மற்றும் முறியடிப்பு தாக்குதல்களின் விளைவே சிறிலங்கா அரசையும் தென்னிலங்கையையும் இவ்வாறான ஒரு பயப்பீதியை அவர்கள் மத்தியில் உருவாக்கியமைக்குக் காரணம் எனலாம்.

மகிந்த அரசு அரியணையில் அமர்ந்ததில் இருந்து தமிழீழத்தில் ஏற்கனவே இடம்பெற்றுக்கொண்டிருந்த மென்தீவிர போரானாது கொதிநிலை அதிகரித்து வன்தீவிர போராக மாற்றம் பெறத்தொடங்கியது.

சிறிலங்கா அரசானது மாவிலாறு, சம்பூர், வாகரை மற்றும் மட்டக்களப்பு என தென்தமிழீழத்தில் தனது போர் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதோடு தமிழ் மக்களை படுகொலை செய்ததோடு மட்டுமல்லாது தமது சொந்த இடங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை இடம்பெயர வைத்தது. அத்தோடு தமிழ் மக்கள் வாழுகின்ற அனைத்து பிரதேசங்களிலும் நாளாந்தம் தமிழ்மக்கள் வீதிகளிலும் வீடுகளிலும் படுகொலை செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

இவ்வாறான மனித அவலங்களை தமிழ்மக்களுக்கு ஏற்படுத்திய மகிந்த அரசும் அதனது சிங்கள இனவெறி படைகளும் புலிகளுக்கு எதிரான போரிலே தாம் வெற்றிகளைக் குவிப்பதாக தென்னிலங்கைக்கும் சர்வதேச சமூகத்திற்கும் பீற்றிக்கொண்டது. இதனை அப்படியே நம்பிக்கொண்ட சிங்கள மக்கள் தமது அன்றாடாக வாழ்க்கைச் செலவு அதிகரிப்பது தொடர்பாகவோ அல்லது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தின் ஆட்சிப் பிடிக்குள் அகப்பட்டு ஊழல் மற்றும் மோசடி காரணமாக சிங்கள தேசம் மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் திணறுவது தொடர்பாகவோ எதுவித அக்கறையோ கவலையோ கொள்ளவில்லை. தமிழ்மக்களையும் புலிகளையும் போரிலே வெற்றிகொள்வதற்கு மறுபிறப்பெடுத்துள்ள துட்டகைமுனுவாக மகிந்தவை புகழ்வதிலேயே சிங்கள இனவாதிகளும் தென்னிலங்கை ஊடகங்களும் தமது காலத்தையும் சக்தியையும் செலவழித்தன.

இவ்வாறான சூழ்நிலையில், எமது தேசியத் தலைவரின் போரியல் நுட்பத்தை வெளிப்படுத்தும்; தமிழீழ விடுதலைப் போராட்ட போரியல் வரலாற்றிலே முன்னெப்பொழுதும் இல்லாத புதிய புதிய தந்திரோபாயங்கள் போரியல் அரங்கிலே அறிமுகப்படுத்தப்பட்டன.

அதாவது வான்புலிகளினால் கொழும்பு நகரிலே மேற்கொள்ளப்பட்ட இரண்டு வெற்றிகரமான தாக்குதல்கள் காரணமாக ஏற்பட்ட பாரிய அரசியல், உளவியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் சிங்கள தேசத்தை அப்படியே ஆட்டங்காண வைத்துவிட்டன. சிங்கள தேசமும் சிங்கள படைத்துறையும் இன்னமும் வான் புலிகளின் தாக்குதல் நடவடிக்கையை எவ்வாறு முறியடிப்பது என்பது தொடர்பாக பல்வேறு வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டிருப்பதையும் தொடர்ச்சியாக ரஸ்யா, உக்ரேன், இந்தியா என வான்புலிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக பலநாடுகளுக்கு பாதுகாப்பு கட்டமைப்பின் அதிகாரிகள் பிரயாணங்களை மேற்கொள்வதில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.

இதேபோன்று விடுதலைப் புலிகளினால் கடந்த மே 24 ஆம் நாள் நெடுந்தீவு ரேடார் நிலையம் மீதான வெற்றிகரமான தாக்குதலில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் விசேட அணியான ஈருடக படையணி ஒரு சிறப்பு நடவடிக்கையினை மிகவும் துல்லியமான முறையிலே திட்டமிட்டு சிறப்பாக மேற்கொண்டிருந்தது. அமெரிக்க மரைன் விசேட படையணியின் தந்திரோபாய நடவடிக்கைகளுடன் கடற்புலிகளின் விசேட ஈருடகப் படையணியின் நெடுந்தீவு தாக்குதல் நடவடிக்கையினை இராணுவ ஆய்வாளர் ஒருவர் ஒப்பிட்டு எழுதியதில் இருந்தே இப்படையணியின் சிறப்பான செயற்பாட்டினை நாம் புரிந்துகொள்ளலாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுதலைப் புலிகளின் படையணிகள் மன்னார்- வவுனியா எல்லையில் எமது பிரதேசங்களுக்குள் முன்னகர்ந்து நிலைகொண்டிருந்த சிங்களப் படையினர் மீது பாரிய தாக்குதல் ஒன்றைத் தொடுத்து சிங்களப் படையினருக்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தியதோடு கிட்டத்தட்ட 30 சதுர கிலோமீற்றர் பரப்பளவு பிரதேசத்தை எதிரிகளிடம் இருந்து மீட்டெடுத்தனர். இதில் புலிகளினால் பவள் கவச வாகனம் உட்பட பெருந்தொகையான ஆயுதத் தளபாடங்களும் கைப்பற்றப்பட்டன.

இத்தாக்குதல் தந்திரோபாய ரீதியில் படைத்துறை வலுச்சமநிலையில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்களை நாம் ஆராய்வோமானால் சிங்களப் படைகள் மற்றும் புலிகள் சேனைகளுக்கு இடையிலான இராணுவச் சமநிலையில் மீண்டும் புலிகளின் கை ஓங்கத் தொடங்கிவிட்டதை புரிந்துகொள்ளலாம்.

தென்தமிழீழத்தின் புவியியல் தன்மைகளையும் கள யாதார்த்தங்களையும் கருத்தில் கொண்டு புலிகள் தந்திரோபாய ரீதியில் சில பிரதேசங்களில் இருந்து பின்வாங்கி சமச்சீரற்ற போரியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவெடுத்ததை சிங்கள தேசம் புலிகளுக்கெதிரான போரில் தாம் வென்றுகொண்டிருப்பதாகத் தவறாக நினைத்துவிட்டது.

ஆனால் இப்பொழுது புலிகள் சிறிலங்கா படையினரால் வவுனியா-மன்னார் பகுதிகளில் மேற்கொண்ட அனைத்து வலிந்த தாக்குதல்களையும் வெற்றிகரமாக முறியடித்ததோடு புலிகள் வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டு சிறிலங்கா படையினருக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது பிரதேசங்களையும் கைப்பற்றத் தொடங்கிவிட்டார்கள் என்பது எதிர்காலத்தில் இடம்பெறப்போகும் சமர்கள் எவ்வாறு இருக்கப்போகின்றன என்பதை கோடிட்டுக்காட்டுவதாகவே படைத்துறை ஆய்வாளர்கள் கருத்துக்களைத் தெரிவிக்கின்றார்கள்.

அண்மைக்காலங்களில் இடம்பெறும் குண்டுவெடிப்புக்கள் காரணமாக சிறிலங்காவின் தலைநகரானது ஒரு முற்றுகைக்கு உட்பட்ட நகரம் போன்று காட்சியளிக்கின்றது. ஒவ்வொரு மூலைமுடுக்குகளிலும் சிறிலங்கா படையினர் பல்வேறு காவலரண்களையும் சோதனைச் சாவடிகளையும் அமைத்துள்ளதோடு அவ்வழியால் பிரயாணம் மேற்கொள்ளும் அனைத்து வாகனங்களும் பயணிகளும் தீவிரமான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் தற்போது சிங்கள படைத்துறைக்கும் சிங்கள அரசிற்கும் எழுகின்ற அச்சமும் கேள்வியும் என்னவென்றால் புலிகள் இறுதிப்போருக்கு தயாராகிவிட்டார்கள் என்பதும் அவ்வாறெனின் எங்கே எப்போது எவ்வாறான தாக்குதல்களை அவர்கள் மேற்கொள்ளப்போகின்றார்கள் என்பதும்தான்.

புலிகளின் கடந்த காலப் போரியல் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தோமானால் ஒவ்வொரு காலகட்டங்களிலும் புலிகள் புதிய புதிய போரியல் நுணுக்கங்களையும் தந்திரோபாயங்களையும் அறிமுகப்படுத்தி எதிரிகளுக்கு அதிர்ச்சியையும் திகைப்பையும் ஏற்படுத்தி சமர்களிலே வெற்றிகளைக் குவித்து வருவதைக் காணலாம்.

தற்போது தமிழீழப் புலிகளின் மரபுவழிப் படையணிகளானது, வான் படை, ஈருடகப்படையணி என்பனவற்றின் வெற்றிகரமான தாக்குதல்கள் நடவடிக்கையின் வெற்றிக்களிப்போடும் மன்னர்-வவுனியா பகுதிகளில் தம்மால் மேற்கொண்ட வெற்றிகரமான வலிந்த தாக்குதல்களின் பெருமிதத்துடனும் காணப்படுகின்றன. அத்துடன் விடுதலைப் புலிகள் சேனையின் உளவுரனும் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளது.

எனவே எதிர்காலத்தில் விடுதலைப் புலிகளினால் தமது முப்படைகளின் உதவியோடும் பல்வேறு விசேட படையணிகளின் ஆதரவோடும் மேற்கொள்ளப்படுகின்ற வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளை எதிர்கொள்வது எப்படி என்பதுதான் சிங்கள படைத்துறையின் மண்டையைக் குடையும் விடயமாகும்.

விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதல்களை யாழ். குடாநாட்டின் மீது தொடுப்பார்களானால் அத்தாக்குதல்கள் கடற்புலிகளின் படையிறக்கத்துடன் கூடியதான ஒரு நடவடிக்கையாகவே இருக்கும் என்று சிங்கள அரசு எண்ணுகின்றது. நெடுந்தீவில் கடற்புலிகளின் ஈருடகப் படையணியின் தாக்குதல் நடவடிக்கையினை யாழ்க் குடாநாட்டினைக் கைப்பற்றுவதற்கான ஒரு முன்னோடி நடவடிக்கையாக சிங்களப் படைத்துறை எண்ணியதை தென்னிலங்கையின் இணையத்தளங்களில் வெளிவந்திருந்த செய்திகள் குறிப்பிட்டிருந்தன. யாழ். குடாநாட்டின் வீழ்ச்சி என்பது சிங்கள படைத்துறையின் ஒட்டுமொத்தமான படையியல் கட்டுமான சிதைவிற்கு ஒப்பானது. கிட்டத்தட்ட 30,000 வரையிலான சிங்களப் படையினர் யாழ். குடாநாட்டில் நிலைகொண்டுள்ளதோடு பெருமளவு ஆயுத தளபாடங்களும் அங்கு குவித்துவைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று புலிகளின் படையணிகள் தரையாலும் கடலாலும் சிங்களப் படையினர் மீது வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டு மணலாறு பகுதியில் நிலைகொண்டுள்ள சிங்கள படைக்கட்டுமானங்களை அழித்துவிட்டு இலகுவாக எமது தலைநகரான திருகோணமலை நகருக்கு செல்லமுடியும். இதேசமயம் திருகோணமலையில் நிலைகொண்டுள்ள புலிகள் சேனைகளும் இந்நடவடிக்கைக்கு மணலாறுக்கு தெற்குப் பகுதியில் இருந்து தாக்குதல்களை மேற்கொண்டு உதவிகளைப் புரியமுடியும். திருகோணமலை துறைமுகத்தினை இழப்பது என்பது சிறிலங்கா படையினரின் புலிகளுக்கு எதிரான அவர்களது பிரதான போரியல் மூலோபாயத்தினையே கேள்விக்குள்ளாக்கிவிடும். கிழக்குப் பிராந்தியத்தினை தக்கவைப்பதற்கும் யாழ் குடாநாட்டிற்கான விநியோகங்களை மேற்கொள்வதற்கும் சிங்கள படைத்தரப்பு திருமலை துறைமுகத்தினையே நம்பியுள்ளது.

இவ்வாறு வன்னியின் மேற்குப் பிராந்திய புலிகளின் படையணிகள் மன்னார் தள்ளாடி இராணுவ முகாம்களை தாக்கியழிப்பார்களானால் புத்தளத்திற்கும் வன்னியின் மேற்கிற்குமான தரை மற்றும் கடல்வழிப் பாதைகள் புலிகளிற்கு திறக்கப்படும். இதன்விளைவு சிறிலங்காவின் தலைநகர், துறைமுகம் மற்றும் விமானநிலையங்கள் அனைத்தும் புலிகளின் தாக்குதல்களுக்கான இலகுவான இலக்குகளாக மாறிவிடும்.

இது தவிர விடுதலைப் புலிகள் கட்டுநாயக்கா விமானத்தளம் மீது 2001 ஆம் ஆண்டு வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கையினை மேற்கொண்டு சந்திரிகா அரசினை முழங்காலிட்டு மண்டியிட வைத்தது போன்று எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்ற அச்சமும் சிங்கள அரசிடமும் அதனது படைத்துறையிடமும் காணப்படுகின்றது.

இப்பொழுது சிங்கள அரசிற்கு உள்ள தலைவலி என்னவெனில் புலிகள் மேற்கூறிய தாக்குதல்களில் எதனைச் செய்யப்போகின்றார்கள் என்பதும் அதனை எப்போது செய்யப்போகின்றாhகள் என்பதும் தெரியாமல் இருப்பதுதான். அதேசமயம் புலிகள் ஒரே சமயத்தில் பல்வேறு களமுனைகளை சமாந்தரமாக திறந்துவிடுவார்களேயானால் அதனை எவ்வாறு எதிர்கொள்ளமுடியும் என்பதிலும் சிங்கள படைத்துறை பல சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்று அச்சமடைந்துள்ளது.

கொழும்பைப் பாதுகாப்பதா அல்லது கிழக்கை பாதுகாப்பதா அல்லது குடாநாட்டை பாதுகாப்பதா என்ற சிக்கல்களில் சிக்கியுள்ள சிங்களப் படைத்துறைக்கு புலிகளின் அர்ப்பணிப்பும் உறுதியும் மிக்க படையணிகளான கரும்புலிகள், வான்படை, கடற்படை மற்றும் தரைப்படை என்பனவற்றோடு பல்வேறு விசேட படையணிகளும் இணைந்து எதிர்காலத்தில் நிகழ்த்தவிருக்கின்ற தீர்க்கமான சமர்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றோம் என்பதே தற்போதுள்ள பாரிய நெருக்கடியாகும்.


-புரட்சி (தாயகம்)-
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..