பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow 'நீ(தியா?)யுமா, ஐரோப்பிய ஒன்றியமே?"
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

'நீ(தியா?)யுமா, ஐரோப்பிய ஒன்றியமே?" அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 04 October 2005

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் செல்வதற்குத் தடை விதித்திருப்பதாக, ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. அது மட்டுமல்லாது, விடுதலைப்புலிகளைப் பயங்கரவாத குழுக்களின் பட்டியலில் சேர்ப்பது குறித்தும், பின்னர் தீர்மானிக்கப் போவதாகவும் ஐரோப்பிய ஒன்ற்pயம் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது, சமாதானத் தீர்வு ஒன்றில் நம்பிக்கை கொண்டுள்ள பல தரப்பினருக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த அறிக்கை அதிர்ச்சியையும், அதிருப்தியையும் அளித்திருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த அறிக்கையின் பின்னணி குறித்தும், இது உருவாக்கக் கூடிய பின் விளைவுகள் குறித்தும், தமிழ் மக்களினதும்-குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழீழ மக்களினதும்-தார்மீக கடமை குறித்தும், பல கருத்துக்களைத் தர்க்கிப்பதுவே இக்கட்டுரையின் நோக்கமாகும்!

மூன்றாவது உலக நாடுகள், பொதுவாகவே ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவையாகும். அதிலும், குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளும், தேசிய இனங்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதற்குத் தகுந்த காரணங்களும் உண்டு. மற்றைய மேற்குலக நாடுகள், பொதுவாகவே நியாயத்தின் பால் நின்றதில்லை. பல தேசிய இனங்களின் உரிமைக்காக போராட்டங்களை ஏற்றுக் கொண்டதுமில்லை.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் பெரும்பாலும் நியாயத்திற்கு ஆதரவாக நடந்து கொண்டிருக்கிறது. நியாயத்திற்கு ஆதரவாக செயல்வடிவம் கொடுக்காமல் போனாலும் நியாயத்திற்கு ஆதரவாக வார்த்தை வடிவத்தில் கருத்துருவாக்கத்தைத் தெரிவித்திருக்கின்றது. சில சந்தர்ப்பங்களில் தத்தமது நாடுகளின் கருத்துருவாக்கத்திற்கு ஏற்ப செயல்வடிவமும் கொடுத்துள்ளார்கள். உதாரணத்திற்கு ஈராக் மீதான போரின்போது, அமெரிக்காவின் அழுத்தத்தையும் மீறி, தமது படைகளை ஈராக்கிற்கு அனுப்ப மறுத்த ஜேர்மன், பிரான்ஸ் நாடுகளைச் சுட்டிக்காட்டலாம். ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் பிரித்தானியாவின் விருப்பத்திற்கு மாறாகவே இந்த நாடுகள் நடந்து கொண்டன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இப்படிப்பட்ட பல கருத்துருவாக்கங்கள், மற்றும் செயற்பாடுகள் காரணமாகவும் இலங்கைத்தீவில் ஏற்பட்ட சமாதான முன்னெடுப்புகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்த, காட்டிய ஆதரவு காரணமாகவும் தமிழ் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது, அதிகமான நம்பிக்கையை வைத்திருந்தார்கள் என்பதும் உண்மையே! ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடந்த வார அறிக்கை, தமிழ் மக்களும் சமாதான விரும்பிகளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையைச் சீர்குலைய வைத்து விட்டன.

ஏனென்றால் இது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கை மட்டும் அல்ல! ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் எதிரான நடவடிக்கை!! சமாதான முயற்சிகள் பலவற்றிற்;கும் எதிரான நடவடிக்கை!!

சமாதானத் தீர்வு ஒன்றை முன்வைக்க முடியாத நிலையில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றையும் எதிர்கொள்கின்ற தற்போதைய சிறிலங்கா அரசு மிக அண்மைக்காலத்தில் முடுக்கி விட்டிருந்த பரப்புரைகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த அவசர முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்ற கருத்தும் வலுவுடைய ஒன்றுதான். அதேவேளை சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க அரசின், தெற்காசிய நாடுகளுக்கான உதவிச் செயலாளர் ~கிறிஸ்டினா ரொக்கா| கூறிய கருத்தையும் நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டும்.!

விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள பயணத்தடையை வரவேற்றுள்ள ~கிறிஸ்டினா ரொக்கா| மேலும் ஒரு கருத்தையும் தெரிவித்துள்ளார். மேலோட்டமாகப் பார்க்கும்போது அக்கருத்து விடுதலைப் புலிகளை நோக்கி விடுக்கப்பட்டதாக இருந்த போதிலும் அதன் உட்கருத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ள வேண்டுகோளாக- இல்லை ஒரு வலியுறுத்தலாகவே- எமக்கு தென்படுகின்றது.

~விடுதலைப் புலிகள் மீதான இந்தப் பயணத்தடை, ~அதனுடைய 'நோக்கம் நிறைவேறும் வரை" அமலில் இருக்கும் என்று 'அமெரிக்கா நம்புகின்றது." என்று கிறிஸ்டினா ரொக்கா தெரிவித்துள்ளார். இக்கருத்தானது சில தர்க்கங்களை முன்வைக்க வேண்டிய அவசியத்தையும் உண்டாக்குகின்றது.

ஐரோப்பிய ஒன்றியம் என்ற அமைப்பு அமெரிக்காவின் பொருளாதார மற்றும் பிராந்திய மோலாண்மைச் சவாலை சந்திப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஐரோப்பிய ஒன்றியம் தமது சொந்த நலன்கள் பாதிக்கப்படும்போதோ அல்லது தமது வர்த்தக நலன்கள் பாதிக்கப்படும்போதோ அமெரிக்காவுடன் ~இறுக்கமான நிலையை| மேற்கொண்டே வந்துள்ளது. மற்றைய சந்தர்;ப்;பங்களில் அமெரிக்காவுடன் நெகிழ்ச்சிப் போக்கினையே கடைப்பிடித்து வருகின்றது. இந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியம் கண்ணுக்குப் புலப்படாத எல்லைக்கோடு ஒன்றினை தனக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் வகுத்து வைத்துள்ளது.

அந்த ~எல்லைக்கோட்டினை| கிறிஸ்டினா ரொக்கா தற்போது மீறியுள்ளார்.

அதாவது ~அமெரிக்கா நம்புகின்றது| என்ற சொல்லாடலின் மூலம் அமெரிக்காவின் விருப்பத்தை சிறிலங்காவின் பரப்புரையை கிறிஸ்டினா ரொக்கா அடிக்கோடிட்டு உள்ளார். இது சற்று வெளிப்படையாகவே நடைபெற்று இருப்பதுதான், எமக்குச் சற்று வியப்பைத் தருகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் என்ன செய்ய வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுக்க முனைகின்றது.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உள்ளரங்கமாகவும் வெளிப்படையாகவும் அமெரிக்கா அழுத்தம் கொடுக்க முனைகின்றது என்றால் திரைமறைவில் பல முரண்பாடுகள் இருக்கின்றன என்கின்ற தர்க்கம் சரியானதாகத்தான் இருக்கக்கூடும்.!

ஆயினும் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு ஓரளவு ஐரோப்பிய ஒன்றியம் பணிந்து கொடுத்து விட்டது என்பது உண்மையானால் நாம் முன்னர் கூறியதுபோல் ஐரோப்பிய ஒன்றியம் தனக்குரிய நம்பிக்கையை இழந்துவிட்டது என்றே கூறவேண்டும்.!

இதனடிப்டையில் நாம் சில தர்க்கங்களை முன்வைக்க விழைகின்றோம்.

ஒரு பேரினவாத அரசின் அராஜகச் செயல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் இருப்பதே குற்றமான விடயமாகும்.! ஆனால் அதனை ஆதரித்துப் பேசுவதோ, அதற்கு அனுசரணையாக நடப்பதோ, அநியாயமான செயலாகும். இங்கே குற்றத்தையும், அநியாயத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் ஒருங்கு சேரப் புரிந்திருக்கின்றது!. இங்கே ஐரோப்பிய ஒன்றியம் தனக்குரிய நம்பிக்கையை இழந்து விட்டது.

ஜனாதிபதித் தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிறிலங்காவின் இரண்டு பிரதான சிங்கள கட்சிகளும் சமாதானத்; தீர்வு குறித்துத் தெளிவான திட்டமொன்றை, இன்;றுவரை முன்வைக்கவில்லை. ஏன் தெளிவான கருத்தைக் கூட முன்வைக்கவில்லை. கடந்த மூன்றாண்டு காலத்திற்கும் மேலாக நிலவி வருகின்ற ~சமாதானத்திற்கான| காலத்தின் போது கூட சிறிலங்கா அரசுக்குள் எந்த விதமான உருப்படியான செயல் திட்டத்தை உருவாக்கவுமில்லை. அமலாக்கவும் இல்லை! இது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பெரிதாக அலட்டிக்கொள்ளவும் இல்லை. இங்கேயும் ஐரோப்பிய ஒன்றியம் தனக்குரிய நம்பிக்கையை இழந்து விட்டது!

ஐம்பது ஆண்டு காலத்திற்கும் மேலாக சிறிலங்காவின் சிங்கள அரசுகளால் தமிழினம் சந்தித்த அழிவுகள் ஒருபுறம் இருக்கட்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் ஒருமுறை கூட வராத, ஆழிப்பேரலை தந்திட்ட அழிவுகளுக்கு முகம் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட பொதுக்கட்டமைப்புக்கு சிறிலங்காவின் நீதித்துறை இடைக்காலத் தடை விதித்ததே?- அப்போது கூட ஐரோப்பிய ஒன்றியம் தனது நீதியான குரலை முறையான விதத்தில் எழுப்பவில்லையே, ஏன்? ஐரோப்பிய ஒன்றியம் தனக்குரிய நம்பிக்கையை மீண்டும் இழக்கின்றது.

சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகளைத் தாமே தன்னிச்சையாக மேற்கொண்டு போர் நிறுத்தம் அறிவித்து, சமாதானத்திற்கான கதவுகளையும் அகலத் திறந்து கடந்த மூன்றாண்டு காலத்திற்குள் சிறிலங்கா இராணுவத்தின் போர் நிறுத்த மீறல்களால் பல பேராளிகளையும் அரசியல்துறைச் செயற்பாட்டாளர்களையும் இழந்தும் கூட சமாதானத்தி;ற்கு வாய்ப்புக் கொடுத்து நிற்கின்ற விடுதலைப் புலிகளின் நெகிழ்ச்சி போக்கினை பாராட்டாமல், சிறிலங்கா அரசின் கடும் போக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் துணைபோகும் போது, ஐரோப்பிய ஒன்றியம் தனக்குரிய நம்பிக்கையை இழப்பதோடு மட்டுமல்லாது தன்னையே சந்தேகத்திற்கும் உள்ளாக்கி நிற்கின்றது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்டவாறு தமிழ்க் குழுக்களின் ஆயுதங்களைக் களையாதது மட்டுமல்லாது கருணா குழுவினருக்கு அடைக்கலம் வழங்கி தமிழினத்திற்கும், சமாதான முயற்சிகளுக்கும் எதிராகச் செயற்பட்டு வரும் சிறிலங்கா அரசிற்கு தனது கண்டனத்தைத் தெரிவிக்காமல் இருக்கும்போதே, ஐரோப்பிய ஒன்றியம் தனக்குரிய தகுதியையும் நம்பிக்கையையும் இழக்கத் தொடங்கி விட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் சில நாடுகள் இலங்கையில் போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவிலும் அங்கம் வகிக்கின்றன. தமது நாடுகளுக்கு விடுதலைப் புலிகள் வருவதற்கு தடை விதித்துக்கொண்டு அதேவேளையில் கண்காணிப்புக் குழுவிலும் பணியாற்ற முனைவதானது முரண்பாடான செயல் மட்டுமன்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது ஐயத்தையும் உருவாக்க கூடியதாகும்.!

இதேவேளை மிகவும் கவலைக்குரிய வேறு ஒரு ஐயப்பாடும் எமக்கு தோன்றுவதை இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும் சிறிலங்காவின் பிரதான சிங்களக் கட்சிகள் சமாதானத் தீர்வு குறித்து இதுவரை உருப்படியான திட்டம் ஒன்றை முன்வைக்காத நிலையில் கூட ஐரோப்பிய ஒன்றியம் தமிழ் மக்களுக்குத் தேவையற்ற ஒர் அழுத்தத்தைக் கொடுக்குமேயானால் எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம்  என்ன செய்யக் கூடும்.? என்ற கேள்வியும் பெரிதாக எழுகின்றது. ஒருவேளை-அதாவது ஒருவேளை-எதிர்காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஒரு கட்டத்தை நோக்கி நகரக்கூடிய நிலை ஒன்று ஏற்பட்டால், அப்போது தமிழ் மக்கள் ஏற்க முடியாத தீர்வுத் திட்டம் ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் தமிழ் மக்கள் மீது திணிக்கக் கூடுமோ? என்ற ஐயம் இப்போது எமக்குள் எழுவதை எம்மால் தவிர்க்க முடியவில்லை. இது ஒரு மிக முக்கியமான தர்க்கமுமாகும்.

இப்பயணத்தடை குறித்து சிலர் வேறு ஒரு பார்வையைத் தரக்கூடும் 'பேச்சுவார்த்தைகள் எதுவும் பலன் அளிக்காத நிலையில் சிங்களப் பிரதானக் கட்சிகளின் செயற்பாடுகளும் அவநம்பிக்கையை அளிக்கத்தொடங்கி விட்ட நிலையில் வேறு வழியின்றி தமிழீழ விடுதலைப்புலிகள் யுத்தத்தை ஆரம்பிக்கக் கூடும் அதனை தடுப்பதற்காகத்தான் இந்தத் தடையுத்தரவு-என்று கூட ~சிலர்| தர்க்கிக்கலாம். அப்படியானால் அது பிழையான கருத்துருவாக்கத்தில் உருவாகிய தவறான தடையுத்தரவு என்றே நாம் கருதுகின்றோம்.

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது விதித்துள்ள பயணத்தடையின் பின்னணி குறித்தும் பல கருத்துருவாக்கங்கள் செயல்வடிவுகள் குறித்தும் பல தர்க்கங்களை முன்வைத்து நாம் ஈற்றில் மிக முக்கியமான விடயங்களை சொல்லி வைக்க விழைகின்றோம். ஏனெனறால் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழீழ மக்களின் பார்வைக்காக இக் கருத்துக்களை முன் வைக்கின்றோம்...

அன்புக்குரிய எமது தமிழ் மக்களே!

எம்முடைய ஒருங்கிணைப்பின் பலத்தை நாமே உணரவேண்டிய வேளை இது! இப்போது நாம் முன்வைக்கின்ற தர்க்கங்களின் யதார்த்தத்தை சற்றே சீர்தூக்கி பார்க்கும்படியும் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

உலகின் பல பாகங்களிலும் நடைபெற்ற, நடைபெறுகின்ற உரிமைப் போராட்டங்களை மேற்குலகம் ஏற்றுக்கொண்டதில்லை. அதற்காக விடுதலைப் போராட்டங்கள் வெல்லாமலும் போனதில்லை. மேற்குலகத்தினைக் கேட்டோ அல்லது அவர்களது அங்கீகாரத்தை பெற்றோ மக்கள் தங்களது விடுதலைப் போராட்டங்களை ஆரம்பிக்கவோ அல்லது தொடரவோ போவதில்லை. இதுவரை காலமும் உலக வரலாற்றில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களை ஆராய்ந்து பார்த்தால் ஓர் உண்மை பளிச்சிடும். அதாவது ஒரு விடுதலைப் போராட்டம் பலமுற்று விளங்கினால் உடனே உலக நாடுகள் சமாதானம் குறித்து பேச ஆரம்பிக்கும்.

போராட்டத்தின் பலம் குன்றினால் உலக நாடுகள் பாராமுகமாக இருக்கும். ஐந்து லட்சம் தமிழ் மக்கள் ஓர் இரவிலேயே அகதிகளாக மாறிய போது உலக நாடுகள் திரும்பியும் பார்க்கவில்லை. ஆனால் வன்னிப்பெரு நிலமும் ஆனையிறவுத் தளமும் தமிழீழ விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்ட போது சம்பந்தப்பட்ட உலக நாடுகள் சமாதானம் குறித்துப் பஜனை பாட ஆரம்பித்து விட்டன. கிழக்குத் திமோரின் சுதந்திர தாகத்தை தணிப்பதற்கு இவர்களில் எவருமே முன்வரவில்லை. ஆனால் கிழக்குத் தீமோரின் சுதந்திரம் தவிர்க்க முடியாத அளவிற்கு நெருங்கிபோது வரழ்த்துப்பா பாடுவதற்கு இவர்கள்தான் முன்நின்றார்கள்!

ஆகவே ஒற்றுமைதான் பலம்! வலிமைதான் வாழ்வு!

இந்த ஒருங்கிணைப்பின் ஊடே நாம் தெளிவான கருத்துக்களை ஐரோப்பிய ஒள்றியத்திற்குத் தெரிவிக்க வேண்டும்! வெறுமே அங்கலாய்ப்பதில் பயன் இல்லை!

~ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது விதித்துள்ள பயணத்தடையும், எதிர்காலத்தடை குறித்த எச்சரிக்கையும், தமிழ் மக்களாகிய எங்களுக்கு அதிர்ச்சியை மட்டுமல்ல, அதிருப்தியை அளித்திருக்கின்றது தமிழீழ விடுதலைப் புலிகள் மீது மேற்கொள்ளப்படும் அழுத்தமானது ஒட்டுமொத்தமாகத் தமிழினத்தின் மீது மேற்கொள்ளப்படுகின்ற அழுத்தம் என்றே தமிழினம் கருதுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியம் இதனை உடனடியாக மீள் பரிசீலனை செய்து தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது நியாயபூர்வமான நம்பிக்கையை தமிழ் மக்கள் வைத்துள்ளார்கள். அத்தகைய நியாயபூர்வமான நம்பிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் இழக்கும் நிலை வராது என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்புமாகும். எது எப்படியிருப்பினும் தமிழீழ மக்களும் புலம்பெயர்ந்த தமிழீழ மக்களும் ஒரு விடயத்தில் உறுதியாக இருக்கின்றோம். அது நியாயத்தின் பால் நாம் உறுதியாக ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதேயாகும். நியாயத்திற்கு எதிராக எத்தகைய அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், அவற்றை நாம் கண்டிக்கவோ, எதிர்க்கவோ தயங்க மாட்டோம்.!|

இதுவே இன்றைய தினம் நாம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விடுக்கக் கூடிய வேண்டுகோளும் செய்தியுமாகும்.!
 
 
இவ் ஆய்வு 03.10.05 அவுஸ்திரேலியா மெல்பேர்ன் ~தமிழ்க்குரல்| வானொலியின் ஒலிபரப்பாகிய ஆய்வின் எழுத்து வடிவமாகும


சபேசன் அவுஸ்திரேலியா
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..