|
மறவன் - நெருடலுக்காக..
தனி அரசிற்கான தமிழர்களின் விடுதலைப்போராட்டமானது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையின் கீழ் இன்று மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப்படுகின்ற விடுதலைப் போராட்டத்திற்கான உலகத்தமிழர்கள் ஆதரவு தற்போது மிகப்பெரும் எழுச்சியைக் கண்டுகொண்டு இருக்கிறது. தாய்த்தமிழகம், மலேசியா, தென்னாபிரிக்கா மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் தமிழீழத்திற்;கு ஆதரவான செயற்பாடுகள் தமிழீழ மக்களிற்கு மிகுந்த உத்வேகத்தை அளித்து வருகின்றது.
தமிழ்மக்களின் இந்த எழுச்சிப்போக்கினைப் பொறுக்க முடியாத தமிழின விரோத சக்திகள் தமிழ்மக்களின் தேசிய எழுச்சிக்கு எதிராக உலக அளவில் பல பிரச்சார உத்திகளைக் கையாண்டு வருகின்றனர். பிராந்திய சர்வதேச சக்திகளால் தமிழர்களிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் இவ்வகையான நடவடிக்கைகள் மூலம் தமிழர்களிற்கு தமிழீழம் மீதான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி விடுதலைப்போராட்டத்தை நலிவடையச் செய்யவே அவர்கள் விரும்புகின்றனர்.
தமிழகத்தின் பார்ப்பனிய ஊடகங்களான இந்து துக்ளக் போன்றவையும் அந்நிய சக்திகளின் பணத்தில் இயங்கும் T.B.C வானொலி மற்றும் பல இணையத்தளங்களும் தமிழரின் தேசிய எழுச்சியை சிதைப்பதற்கு தம்மாலானவற்றை செய்துவருகின்றனர். அண்மைக்காலமாக B.B.C தமிழோசையின் செய்திகளை உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கு எவ்வாறு தமிழ்தேசியத்திற்கும் தேசியத்தலைமைக்கும் எதிரான செய்திகளை மிக நுட்பமாக வழங்கி வருகின்றார்கள் என்பதை இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். அண்மையில் தமிழக மீனவர்கள் சிறீலங்காப்படைகளால் கடத்தப்பட்ட சம்பவத்தில் புலிகள்தான் மீனவர்களைக் கடத்தினார்கள் என்ற கருத்தைத் தமிழகமக்கள் மத்தியில் ஏற்ப்படுத்தும் விதமாகவே அவர்களின் அனைத்து செய்திகளும் வழங்கப்பட்டன. கடத்தப்பட்டபோது இவ்வாறு செய்தி வழங்கியவர்கள் உண்மையில் நடுநிலையாக செய்தி வழங்கி இருந்தால் அவர்கள் விடுவிக்கப்பட்டபோது அவர்களிடம் உண்மை நிலையை அறிந்து தமிழர்க்கு உணர்த்தியிருக்கவேண்டும். சிங்கள கடற்ப்படையால் தமிழக மீனவர்கள் பலநூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டபோது சாதாரணமாக செய்திவழங்குபவர்கள் வியாபாரிகளால் சைக்கிள் உதிரிப்பாகங்கள் கடத்தப்படும் பொழுது தமிழகத்தில் இருந்து புலிகள் அணுகுண்டு கடத்துகிறார்கள் என்பதுபோல பரபரப்பு செய்திகளை வழங்கி மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவார்கள். மாலைதீவில் ஒரு அடையாளம் தெரியாத படகு பிடிபட்ட செய்திக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும் அது சம்பந்தமாக அந்நாட்டு அதிகாரிகளிடம் செவ்விகள் பெற்று இது புலிகளின் படகுதான் என நிரூபிக்க தமிழோசையினர் பட்டபிரயத்தனம் அந்த செய்தியைக்கேட்ட அனைவருக்கும் தெளிவாகப் புரிந்திருக்கும். அந்நிய சக்திகளால் நடத்தப்பட்ட நாடகத்தின் பிரச்சார உத்திகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பவற்றை மேற்குறித்த செய்திகள் மூலமாகப் புரிந்துகொள்ளப்படும்.
தமிழீழவிடுதலைப் போராட்டத்திற்கும் தமிழ்த்தேசியத் தலைமைக்கும் தமிழகத்தில்ப் பெருகிவந்த உணர்வுமிக்க ஆதரவினைக்கண்டு அதிர்ச்சி அடைந்தவர்களால் புலிகளுக்கெதிராக தமிழகத்தில் அரங்கேறிய நாடகங்களிற்கெல்லாம் தமிழோசை தனது ஊடகப் பங்களிப்பினை மிகவும் காத்திரமாகவே வழங்கியிருந்தது.
தமிழ்மக்கள் சிங்களப்படைகளால் இனப்படுகொலை செய்யப்படும்போதெல்லாம் படுகொலை செய்யப்பட்ட மக்களின் பெயர் விபரங்கள் புகைப்படங்கள் உட்பட அனைத்து விபரங்களும் செய்தியாக வெளிவரும் சந்தர்ப்பங்களிலும் தமிழோசையினர் சிறிலங்கா இராணுவப்பேச்சாளர்களிடம் செவ்வி கண்டு தமிழ்மக்கள் படுகொலை செய்யப்படவில்லை புலிகளின் இலக்குகளைத்தான் தாக்கினோம், அல்லது புலிகளால்த்தான் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற அவரின் கருத்துக்கள் ஒலிபரப்பப்படும். இவர்கள் செவ்வி தொடங்கும் விதமும் அதை நிறைவு செய்கின்ற இடமும் களநிலவரம் தெரியாத உலகத்தமிழர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றது.
தமிழர்களிற்கெதிராக சிங்கள அரசின் ஆதரவுடன் செயற்படும் தமிழின விரோதிகளால் ஐரோப்பாவில் ஒரு சிறு நிகழ்வு நடத்தினால்க்கூட செய்தியாக ஒலிபரப்பும் தமிழோசை தமிழ்தேசியத்திற்கு ஆதரவாக தமிழர்களால் மிகப்பெரியளவில் ஐரோப்பாவில் நடத்தப்படுகின்ற எழுச்சி நிகழ்வுகள் பற்றி வாய்மூடி மௌனம் காப்பார்கள். ஈழத்திற்கு ஆதரவான இம்மாபெரும் எழுச்சிகள் உலகத்தமிழர்களை சென்றடையும் போது அவர்கள் மேலும் உற்சாகம் அடைவார்கள் என்ற பயம் காரணமாகத்தான் இச்செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.
உலகெல்லாம் வாழ்கின்ற தமிழ்தேசியத்திற்கு எதிரான ஆய்வாளர்களை மட்டும் தமிழோசைக்கு நன்றாகத்தெரியும். தமிழர் தரப்பில் எந்த சம்பவங்கள் நடந்தாலும் அவர்கள் மூலமே ஆய்வினைப் பெற்று ஒலிபரப்புவார்கள்.
இன்று வடக்கு கிழக்கில் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் ஒவ்வொரு நாளும் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் அல்லது கடத்தி காணாமல் செய்யப்படுகிறார்கள். சாதாரணமாக அச்செய்திகளை வடக்கு கிழக்கு வன்முறையில் இன்று இத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்று ஒலிபரப்புகின்றவர்கள் இவ்வாறு நாளொரு மேனியுமாக தமிழர்கள் எவ்வளவு பேர் படுகொலை செய்யப்படுகிறார்கள் யாரால்ப் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்ற விபரங்களை அந்த மக்களை நேரில் சென்று அறிந்து வெளிஉலகத்திற்கு தெரியப்படுத்தலாமே. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு சென்று அங்குள்ள மக்களின் கருத்துக்களை குரலை மாற்றி ஒலிபரப்பு செய்கின்றவர்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அவலத்திற்குள்ளாகியிருக்கும் மக்களின் குரலை வெளி உலகத்திற்கு கொண்டு வர ஏன் முயற்சிகள் எடுக்கவில்லை. விடுதலைப்புலிகளின் ஒளி ஒலிபரப்பு சம்பந்தமாக சிறிலங்கா அரசால் தெரிவிக்கப்பட்ட பொய் குற்றச்சாட்டு சம்பந்தமாக அமெரிக்க சற்றலைற் நிறுவன அதிகாரிகளுடன் எல்லாம் பேட்டி கண்டு அதைப் பெரிதுபடுத்தி மக்களைப் பலவீனப்படுத்த முயற்சிக்கின்ற தமிழோசைத் தமிழர்கள் எவ்வாறு இலங்கையில் இன சுத்திகரிப்பு செய்யப்படுகிறார்கள் யாரால் செய்யப்படுகிறார்கள் என்று சர்வதேசப்பிரதிநிதிகளிடம் செவ்வி பெற்று அழிவில் இருக்கின்ற ஒரு இனத்தைப் பாதுகாக்கத் தம்மாலான உதவிகளை செய்யலாமே.
அண்மையில் ஐ.நா அதிகாரி திரு ஜோன் ஹோல்ம்ஸ் இன் யாழ் விஜயத்தின்போது அது சம்பந்தமான செய்தி பெற்று ஒலிபரப்பு செய்வதற்குத் தமிழோசைக்கு வேறு யாருமே கிடைக்கவில்லை டக்லஸ் தேவானந்தாவைத் தவிர யாழ்ப்பாணத்திலே நடக்கின்ற அனைத்துப் படுகொலைகளிற்கும் பொறுப்பான கூலிக்குழுத்தலைவரிடமே மனித உரிமை நிலவரங்கள் பற்றி செவ்வி கண்டு அதைத் தமிழ்மக்களிற்கு ஒலிபரப்பு செய்வது ஒரு கேலிக்கூத்தான விடயம். ஐ.நா அதிகாரியிடம் யாழ் நிலவரம் தொடர்பாக எதுவும் கூறக்கூடாதென அரச அரசசார்பற்ற நிறுவன அதிகாரிகள் இராணுவத்தால் மிரட்டப்பட்டதும் ஐ.நா அதிகாரியின் சந்திப்புக்கள் யாவும் இராணுவப்பிரசன்னத்துடனும் தாடி வைத்த யமனின் முன்னிலையிலும் நடைபெற்றதால் மக்கள் தமது உண்மை நிலவரத்தை உலகறியச் செய்யமுடியாமல்ப் போனதையும் நீங்கள் வெளிப்படுத்தியிருந்தால் அங்கே அல்லலுறும் தமிழர்கள் சற்று நின்மதி அடைந்திருப்பார்கள்.
தமிழ்தேசியத்திற்கு எதிராகப் பொறுப்புள்ள தமிழ் ஊடகங்களில்ப் பிரச்சாரம் செய்பவர்கள் தமிழர்களின் இனப்பிரச்சனை வரலாற்றை முதலில் முழுமையாகத்தெரிந்து கொள்ளவேண்டும். இலங்கைத்தீவிலே வாழ்கின்ற தமிழர்களிற்கான வாழ்வுரிமையை எந்த சிங்களத்தலைமையுமே ஏற்றுக்கொண்டதுமில்லை ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை. தமிழர்களை அடக்கி இரண்டாந்தரப் பிரஜைகளாக சிறிலங்காவில் வாழ்வதையே சிங்களவர்கள் என்றும் விரும்பி வந்துள்ளனர். கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டதாகக் கூறி இராணுவபலத்தின் மூலம் கிழக்கைக் கைப்பற்றிய சிங்கள அரசு அங்கு உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில்த் தமிழரின் பூர்வீகநிலங்களை அபகரித்தும் தமிழ்க்கிராமங்களுக்கு சிங்களப் பெயர் சூட்டுவதும் சிங்கள குடியேற்றங்கள் நிறுவப்படுவதும் சிங்களத்தின் ஆள்மனது சிந்தனையை வெளிப்படுத்தும் அண்மைக்கால நிகழ்ச்சிகள் அரசியல் தீர்வின்மூலம் தமிழர்களிற்கு அதிகாரங்களைப்பகிர்ந்து கொடுக்க சிங்களம் நினைத்தால் ஏன் இவ்வளவு அவசரமாக சிங்களப்பெயர் மாற்றங்களும் விகாரை அமைப்புக்களும் குடியேற்றங்களும். தமிழர்க்கு எதிரான அனைத்து இன ஒடுக்கலையும் செய்யும் சிங்களத்தின் விமானத்தில் மட்டக்களப்பு சென்று கூட்டம் நடத்தி B.B.C க்கு பேட்டி கொடுக்க மட்டும் தான் சங்கரி கூட்டத்தால் முடியும் சங்கரி கருணா போன்றோரின் சுயநல அரசியலில் எமது தாயக பாரம்பரிய பிரதேசங்கள் அபகரிக்கப்படுவதை செய்தியாக்கி தமிழினத்திற்கான உங்கள் வரலாற்றுக் கடமையை தமிழ் ஊடகங்கள் வழங்கவேண்டும். தமிழர்களின் அவலங்களையும் அகதிமுகாம்களில் மக்கள் படும் அவலங்களின் குரல்களையும் செய்தியாக்குகின்றவர்கள் ஏன் இந்த மக்கள் இவ்வாறு நிர்க்கதி ஆக்கப்பட்டார்கள் என்பது பற்றி எப்போதாவது பேசியிருக்கிறார்களா? இலங்கையிலே தமிழன் சுயமரியாதையுடன் கௌரவமான வாழ்வு கேட்டதற்கு தண்டனைதான் இந்த மக்களின் அழுகுரல்கள் என்பதைத் தமிழோசை புரிந்துகொள்ளுமா?
யார் என்ன விதமான உத்திகளைப் பயன்படுத்தி எவ்வகையான பிரச்சாரங்களை மேற்கொண்டாலும் ஈழத்தமிழர்களின் அரசியல்த் தலைவிதியைத் தீர்மானித்து தமிழர்களிற்கு சுதந்திரமான சுபீட்சமான எதிர்காலத்தைப் பெற்றுக் கொடுக்கப்போகின்றவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளே. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் அவர்களால் தமிழீழத்திற்கான அடித்தளம் மிக மிகப் பலமாகப் போடப்பட்டுவிட்டது அதை இனி எந்த சக்திகளாலும் ஆட்டம் காண முடியாது. இன்றைய காலத்தில் உலகப்பரப்பில் ஈழத்திலேயே தமிழர்கள் மிகப்பலமாக ஒரு தனி அரசை அமைக்கக்கூடிய வல்லமையுடன் இருக்கிறார்கள். ஒரு தலை சிறந்த இராணுவ அரசியல் மதிநுட்பம் மிக்க தலைவரின் கீழ் சர்வதேச புலனாய்வு அமைப்புக்களுடன் போட்டிபோடக்கூடிய புலனாய்வு கட்டமைப்பு, கடலிலே காவியம் படைக்கும் கடற்ப்புலிகள், இஞ்சி பிசகாமல் ஆட்லறி போடும் பீரங்கிப்படையணி, பல மைல்கள் பறந்து குண்டு வீசும் விமானப்படையுடன் மேலும் பல சிறப்புப் படையணிகளையும் கொண்ட மிகப்பெரும் படைக்கட்டகைப்புக்களுடன் மிகப்பிரமாண்டமாக வளர்ந்துள்ள விடுதலைப்புலிகளால் அமைக்கப்படப்போகின்ற தமிழீழ தனி அரசிற்கு உலகெல்லாம் வாழும் தமிழ்மக்களின் ஏகோபித்த ஆதரவு முன் எப்போதையும் விட மிகவும் அதிகரித்த அளவிலே காணப்படுகின்றது. உலகெல்லாம் தமிழன் வாழ்கின்றான் ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடில்லை என்று மனம் வெதும்புவதை விடுத்து ஈழத்திலே தமிழரினால் அமைக்கப்படப்போகும் தனி அரசிற்கு உலகத்தமிழர்கள் அனைவரும் பங்காளிகளாக மாறித் தமிழரின் விடுதலையை விரைவுபடுத்தவேண்டும்.
தமிழர்கள் வாழ்வுரிமைக்காகவே ஈழத்தில் போராடுகின்றார்கள் தமிழர்பக்கம் தர்மம், நியாயம் உள்ளது பல சோதனைகளிற்கு பின்பே தர்மம் வெல்லும் தமிழரின் தேசிய எழுச்சியை எந்தப் பிரச்சார சக்திகளாலும் அடக்கி விட முடியாது தேசியத்தலைவரின் தலைமையின் கீழ் தமிழர்கள் தனியரசை அமைப்பார்கள் என்பது உறுதி.
நெருடல் இணையம்
|