|
உலகிலேயே செயற்திறன் மிக்க இயக்கமாக விடுதலைப்புலிகளே உள்ளனர். அவர்களை
போரின் மூலம் வெல்ல முடியாது என்று, இன மோதல்கள் தொடர்பான ஐரோப்பிய
மையத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜெரார்ட் சாலியண்ட் கருத்து
தெரிவித்திருந்தார். ஜெரார்ட் சாலியண்ட் ""கள யதார்த்தம் தெரியாமல்
பேசியுள்ளார்' என்று அதற்குப் பதிலடியாக பேசினார் பாதுகாப்பு அமைச்சின்
செயலாளர் கோதாபய.
இருவருடைய கருத்துக்களும் வெளிவந்து மூன்று
நாட்களுக்குள் அநுராதபுர வானூர்தி தளத்தின் மீது விடுதலைப்புலிகள்
வெற்றிகரமான இருவழி அதிரடித் தாக்குதல் ஒன்றை நடத்தி முடித்துவிட்டு
அடுத்த பெரும் தாக்குதலுக்கான இறுதிக்கட்ட திட்டமிடல் நடவடிக்கைகளில்
ஈடுபட்டுள்ளார்கள்.
இதனடிப்படையில் பார்க்கும் போது,
ஸ்ரீலங்காவினுடைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபயவா அல்லது ஜெரார்ட்
சாலியண்டா களயதார்த்தம் தெரியாமல் பேசியுள்ளனர் என்பதை தீர்மானிக்கும்
பொறுப்பை வாசகர்களிடமே விட்டுவிட்டு, அநுராதபுர வானூர்தித் தளத்தின் மீதான
எல்லாளன் நடவடிக்கையையும் அதன் போரியல் பரிமாண போக்கையும்,
விடுதலைப்புலிகளின் ""மௌன காப்பு' மற்றும் தாக்குதல் உணர்த்தும் சேதி
போன்வற்றையும் கீழே நோக்குவோம்.
இலங்கைத் தீவில் ஸ்ரீலங்காப்
படைகளுக்கு சொந்தமாக ஐந்து பிரதான வானூர்தி தளங்கள் இரத்மலானை, பலாலி,
சீனன்குடா, கட்டுநாயக்கா, அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ளன.
இவற்றில் இரத்மலானை, கட்டுநாயக்கா ஆகிய வானூர்தித் தளங்கள் மேல்
மாகாணத்திலமைந்துள்ளன. ஏனையவை வடகிழக்கு மற்றும் வடமத்திய
மாகாணத்திலமைந்துள்ளன. இந்த வானூர்தித் தளங்கள் பரந்து இருப்பினும்,
மேற்கூறிய வானூர்தித் தளங்கள் ஐந்திலும் விடுதலைப்புலிகளின் தாக்குதல்
இடம்பெற்றுள்ளது. இதில் அனைத்து தாக்குதல்களும் ஊடுருவி தாக்குதல்களாகவே
அமைந்துள்ளன. அந்த தாக்குதல்களை ஆராய்கின்ற போது, காலத்திற்கும்
களத்திற்கும் ஏற்ற வகையில் தாக்குதல் திட்டங்களை விடுதலைப்புலிகள்
மேற்கொள்வதையும் ஒவ்வொரு தாக்குதலின் பின்னரும் விடுதலைப்புலிகளின்
படிநிலை வளர்ச்சியடைவதையும் காணமுடிகிறது.
வானூர்தி தளம் மீதான
முதலாவது தாக்குதல் 1980 களின் நடுப்பகுதியில் இரத்மலானை வானூர்தித்
தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவ்ரோ வானூர்தியை குண்டுவைத்து
தகர்த்ததுடன் ஆரம்பமானது. லெப்.கேணல். ராதாவே அந்த நடவடிக்கையை
வெற்றிகரமாக முடித்துவிட்டு தாயகம் திரும்பியிருந்தார். அதன் காரணமாகவே
விடுதலைப்புலிகளின் வானூர்தி எதிர்ப்பு பிரிவுக்கு" ராதா வானூர்தி
எதிர்ப்பு படையணி' என்ற பெயர் சூட்டப்பட்டது.
இரண்டாவது
தாக்குதல் 1990 களின் ஆரம்பத்தில் பலாலி கூட்டுப்படைத்தளம் மீது
மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு உலங்குவானூர்தி அழிக்கப்பட்டது. முற்று
முழுதான வெற்றியை குறித்த தாக்குதல் அளிக்கவில்லையாயினும் பின்னர்
இடம்பெற்ற வெற்றிகரமான தாக்குதல்களுக்கான சிறந்த அனுபவத்தை
வழங்கியிருந்தது. 1991 இல் இடம்பெற்ற ஆனையிறவு படைத்தளம் மீதான ஆகாய கடல்
வெளிச் (ஆ.க.வெ.) சமரில் ஏற்பட்ட பின்னடைவினூடாகப் பெறப்பட்ட அனுபவம்
விடுதலைப்புலிகளின் வளர்ச்சிக்கு எப்படி வழிகோலியதோ, அதுபோன்ற ஒரு
தாக்குதலாகவே பலாலி படைத்தளம் மீதான தாக்குதலும் அமைந்திருந்ததெனலாம்.
இந்த தாக்குதலில் கெனடி தலைமையிலான சுமார் 15 கரும்புலிகள் பங்குபற்றியதாக
நம்பப்படுகிறது.
ஒரு தாக்குதலின் வெற்றியிலிருந்து பெறப்படும்
அனுபவத்திலும் பார்க்க தோல்வியிலிருந்து கிடைக்கும் அனுபவங்கள்
கனதியானவையும் பயன்மிக்கவையும் ஆகும். அதனை சரிவர பயன்படுத்துவதனூடாக தமது
தரப்பின் எதிர்கால தாக்குதல்களை வெற்றிகரமாக முன்னெடுக்கமுடியும் என்பது
சாத்தியமானது. இதனை விடுதலைப்புலிகள் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.
மூன்றாவது
தாக்குதல் திருகோணமலையிலமைந்துள்ள சீனன்குடா விமானப் படைத்தளம் மீது 1997
மார்ச் 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. அந்த வெற்றிகரமான தாக்குதலின்
மூலம் பல வானூர்திகள் அழிக்கப்பட்டதுடன் சில வானூர்திகள் பாரிய
சேதத்திற்குள்ளாகின. அந்த தாக்குதலினூடாக ஸ்ரீலங்கா விமானப்படைக்கு சுமார்
125 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்திருந்தது. அந்த
தாக்குதலின் போதும் விமானப்படைக்கு ஏற்பட்ட இழப்பு
கணிப்பிடப்பட்டவற்றிலும் பார்க்க அதிகமானது என அன்றைய எதிர்க்கட்சியான
சுதந்திரக் கட்சி தெரிவித்திருந்தது. குறித்த தாக்குதலின் போது
விடுதலைப்புலிகள் வித்தியாசமான உத்தியை கையாண்டார்கள். அதாவது, தமது
அணிகள் வானூர்தி தளத்துக்குள் ஊடுருவ முன்னர் வானூர்தி தளம் மீது மோட்டார்
குண்டு மழை பொழிந்தார்கள். அந்த அதிர்ச்சியிலிருந்து படையினர்
மீள்வதற்கிடையில், சுமார் 15 பேர் கொண்ட கரும்புலி அணி தனது பாய்ச்சலைக்
காட்டியது. இதில் மேஜர் சிற்றம்பலம், கப்டன் நிவிதன், கப்டன் விஜயரூபன்
ஆகிய போராளிகள் வீரச்சாவை அணைத்தார்கள் என அன்றைய காலப்பகுதியில்
சண்டேரைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
வரலாற்று சிறப்புமிக்க
தாக்குதல்களில் ஒன்றான நான்காவது தாக்குதல் கட்டுநாயக்கா வானூர்தி தளம்
மீது மேற்கொள்ளப்பட்டது. 2001 ஜூலை 24 ஆம் திகதி அதிகாலை 3.50 மணிக்கு
மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சுமார் இரு மணிநேரம் தீவிரமாக இடம்பெற்றது.
இதனூடாக சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேற்பட்ட இழப்பு ஸ்ரீலங்கா
விமானப்படைக்கு ஏற்பட்டது. ஸ்ரீலங்கா அரசாங்கத்தை பேச்சுவார்த்தை மேடைக்கு
கொண்டு வரவும், உலகம் தமிழர்களின் போரியல் பலத்தை அறியவும் இந்த தாக்குதல்
வழியமைத்தது. உலகத்தின் கண்களை திகைப்பில் ஆழ்த்தி, அன்றைய ஆட்சியாளர்களை
நிலைகுலைய வைத்து, முப்படையையும், அதிர்ச்சியில் உறைய வைத்து,
பொருளாதாரத்தை ஆட்டம் காணவைத்த அந்த தாக்குதலை 700 ஏக்கர்
நிலப்பரப்புக்குள் நின்றபடி சுமார் 15 போராளிகள் மேற்கொண்டிருந்தனர். இந்த
கீர்த்தி மிகு தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்ட ஒரு மாவீரனின் தாய்,
குறித்த தாக்குதலுக்கான வேவு அணியில் பங்கு பற்றியிருந்தமையும்
குறிப்பிடத்தக்கது.
""ரிவிரச', ""சத்ஜெய', ""எடிபல' இராணுவ
நடவடிக்கைகளுக்கு பிற்பாடு, விடுதலைப்புலிகளின் கதை இன்னும் 4
மாதத்துக்குள் முடிவுக்கு வரப்போகிறது என கேணல் ரத்வத்தை காலவரையறை செய்ய,
ஓயாத அலைகளாய் எழுந்த புலிகள் இறுதியில் சீனன்குடா வானூர்தி தளத்தில்
அதிரடியை நிகழ்த்தினார்கள்.
வன்னிக்குள் புலிகளை துண்டாடி ஏ9
பாதையை படையினரின் போக்குவரத்திற்காக திறக்க முனைந்த ""ஜெயசிக்குறுவின்'
முதுகெலும்பை முறித்து கட்டுநாயக்காவின் நெஞ்சில் ஏறி மிதித்து மக்களின்
போக்குவரத்திற்காய் பாதையை திறந்துவிட்டனர் புலிகள்.
கிழக்கினை
சிங்கள மயப்படுத்தும் நோக்குடன், அதனை ஆக்கிரமித்த பின் ""புலிகளை
கிழக்கிலிருந்து முற்றாக விரட்டியடித்து, கிழக்கினை புலிகளின்
பிடியிலிருந்து விடுவித்து விட்டதாக' சிங்களம் கொக்கரித்த போது
விடுதலைப்புலிகளின் சிறப்பு கரும்புலிகள் அதன் கழுத்தை நெரித்து கொட்டத்தை
அடக்கியுள்ளனர்.
ஈகமும் வீரமும் தீவிரமும் நிறைந்த இந்த
தாக்குதல் 2007 அக்டோபர் 22 ஆம் திகதி அதிகாலை 3.20 மணிக்கு
இடம்பெற்றுள்ளது. இதில் 21 சிறப்பு கரும்புலிகள் வீரச்சாவை அணைத்துள்ளதாக
விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். எதிர்க்கட்சியின் கணக்குப்படி 18 இற்கு
மேற்பட்ட வானூர்திகள் அழிக்கப்பட்டுள்ளன. சுமார் 660 கோடி ரூபா நஷ்டம்
விமானப்படைக்கு ஏற்பட்டுள்ளது.
இறுதியாக கிடைத்த தகவலின்படி 21
வானூர்திகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் எதனையுமே
விடுதலைப்புலிகளின் சிறப்பு கரும்புலிகள் விட்டு வைக்கவில்லை. அங்கிருந்த
அனைத்து விமானங்களும் அழிக்கப்பட்ட பின்பு மறைவில் நிறுத்தப்பட்டிருந்த
யு.ஏ.வி. உளவு விமானத்தை தேடிக்கண்டு பிடித்து அழிக்கும் நிலையில்,
புலிகளின் மேலாண்மை அந்த தாக்குதலில் நிலவியது. இதனை ஆழமாக அலசும் போது
இந்த தாக்குதலுக்கான வேவு நடவடிக்கை ஆரம்பத்திலிருந்து தாக்குதல்
மேற்கொள்வதற்கான இறுதி நிமிடம் வரை துல்லியமாக சேகரிக்கப்பட்டுள்ளது.
அதனூடாகவே அதிகளவான வானூர்திகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்
நாளும் கணக்கிலெடுக்கப்பட்டுள்ளது. பலாலிக் கூட்டுப்படைத்தளம் மீதான
தாக்குதலினூடாக முகமாலையிலிருந்து வன்னியை நோக்கி மேற்கொள்ளப்படவிருந்த
தாக்குதல் எவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டதோ, அதேபோல் மன்னார்
மாவட்டத்திலிருந்து வன்னியை நோக்கி மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதல்
எல்லாளன் நடவடிக்கை மூலம் தாமதப்படுத்தப்பட்டிருக்கிற�
ு.
போரியல்
உபாயத்தின்படி இருவகையான தாக்குதல்களை மேற்கொள்வதே ஒப்பீட்டளவில்
சாதகமானது. ஒன்றில் எதிரி எம்மை நோக்கி முன்னேறும் முன் அவனது
கோட்டைக்குள் புகுந்து அவனது கட்டமைப்புகளை சிதறடித்து தாக்குதலுக்கு
தயார்படுத்திய திட்டங்களை சிதைத்தல். இரண்டாவது எதிரியை எமது
நிலப்பரப்புக்குள் அகலக் கால் பதிக்க வைத்துவிட்டு தருணம் பார்த்து
சுற்றிவளைத்து அல்லது ஊடறுத்து அதிரடி தாக்குதலை திடீரென மேற்கொண்டு அவனை
நிலைகுலைய வைத்தல். அநுராதபுர வான்படைத் தளம் மீதான தாக்குதலை முதலாவதாக
அண்மைக்கால உதாரணமாகக் குறிப்பிடலாம். இரண்டாவதாக சிறந்த உதாரணமாக
""ஜெயசிக்குறு' படையினர் மீதான ஓயாத அலை 3 ஆக்ரோசத்தை குறிப்பிடலாம்.
எமது
தரப்பு மேலாண்மையை நிலைநிறுத்துவதற்கு தற்காப்பு சமரைவிட தாக்குதல் சமர்
புரிவதே சிறந்த மார்க்கம் என போரியல் மரபுகளூடாக அறியமுடிகிறது. ஆயினும்,
தற்காப்பு சமரில் ஆரம்பித்து அதனையே தாக்குதல் சமராக மாற்றக்கூடிய வல்லமை
இருக்குமாயின் களமுனையில் கையோங்கியவர்களாக நாமே இருப்போம். அத்துடன்,
அந்த அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கு எதிரிக்கு நீண்டகால அவகாசம்
தேவைப்படும். கூடவே எதிரியின் மனோபலம் இலகுவில் கட்டியெழுப்பப்படாதபடி
சிதைக்கப்பட்டுவிடும். பிரகடனப்படுத்தப்படாத ஈழப்போர் 4 இல் 2006,
அக்டோபர் 14 ஆம் திகதி முகமாலை பளை களமுனையில் இதுதான் நடந்தது. அதாவது,
தற்காப்பு நிலையிலிருந்த புலிகள் குறுகிய நேரத்துக்குள் தாக்குதல்
தரப்பினராக மாறினார்கள். கேணல் ஹரிகரனின் மொழியில் அதன் விளைவைக்
கூறுவதாயின் ""தன் தலையை மலையோடு கொண்டு சென்று மோதியது' சிங்கள
இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவின் படைகள்.
கடும் பிரயத்தனங்களுக்கு
மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ""எல்லாளன் நடவடிக்கை'யினூடாக வன்னி நோக்கிய
படைநகர்வு மட்டும் தாமதிக்கவில்லை. மாறாக ஸ்ரீலங்காப் படைகள் தொடர்பான
படைவலிமையே கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்�
து. கவர்ச்சியான விளம்பரங்கள்
மூலம் முப்படைகளுக்கும் ஆட்களை சேர்த்துக்கொள்ள முடியும். வட்டிக்கு கடன்
வாங்கி, பொதுமக்களின் வாழ்க்கைச் செலவை உயர்த்தி அவர்களின் வயிற்றில்
அடிப்பதனூடாக நவீனரக ஆயுதத் தளபாடங்களை கொள்வனவு செய்ய முடியும்.ஆனால்,
மனோபலத்தை கட்டியெழுப்புதல் என்பது மிகச் சவாலான விடயம்.ஸ்ரீலங்காப்
படைத்துறை வரலாற்றில் ஆட்பலத்தையும் ஆயுத தளபாடங்களையும்
கட்டியெழுப்புவதில் காட்டப்பட்ட அக்கறை மனோபலத்தை கட்டியெழுப்புவதில்
காட்டப்படவில்லை. ஆனால், விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை மூன்று
விடயங்களிலும் உரிய அக்கறை செலுத்துவதில் குறியாய் இருந்து வருகின்றனர்
என்பது அவர்களுடைய செயல்பாடுகளை தொடர்ச்சியாகவும், ஆழமாகவும் அவதானிக்கும்
போது தெரிகிறது.
தென்னிலங்கையில் கிழக்கு புலிகளின்
பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டதாக ஊடகங்களின் மூலம் ஊதிப்
பெருப்பிக்கப்பட்ட வெற்றி சிந்திப்புத் தன்மையற்ற சிங்கள மக்களை
உற்சாகப்படுத்தியதில் பாதியை கூட களமுனையில் நின்ற படையினரிடம்
உண்டுபண்ணவில்லை. மாறாக விடுதலைப்புலிகள் சாதித்து வந்த மௌனம் தமிழ்
மக்களினுடைய மனங்களில் குழப்பத்தை சில சந்தர்ப்பங்களில் ஏற்படுத்தியதே
தவிர போராளிகளிடம் எந்தவித குழப்பத்தையும், ஏற்படுத்தவில்லை. ஏனெனில்,
போராளிகளின் மனோபலத்தை பேணுவதில் அதன் தலைமை, தொடர்ச்சியாக அதிக கவனம்
செலுத்தி வந்தமையே ஆகும். அதனூடாகவே எந்த இடத்திலும் நினைத்த வேளையில்
வெற்றிகரமான தாக்குதலை மேற்கொள்ளும் வல்லமையை பெற்றிருக்கிறார்கள்.
அத்துடன்,
ஒழுக்கப்பண்பையும் பேணுவதில் குறிப்பாகவுள்ளனர். ஆனால், இரண்டும்கெட்டான்
நிலையிலேயே சிங்களப்படைகள் உள்ளது. இல்லையெனில், சிங்கத்தின் கோட்டைக்குள்
புகுந்து துவம்சம் செய்தபோது, எந்தவித முறியடிப்பு தாக்குதலுக்கும்
திராணியற்றவர்கள், தாக்குதலில் வீரமரணமடைந்த மாவீரர்களின் உடலை
நிர்வாணமாக்கி மக்கள் பார்வைக்கு வைத்திருப்பார்களா? போரியல் மரபுக்கும்
உலக நியதிக்கும் எதிரான விடயத்தை சிங்களப்படைகள் மீண்டுமொருமுறை
செய்திருக்கின்றன.
இந்தவிடத்தில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு
விடயம் யாதெனில், தமிழ் மக்கள் தேவையற்று இனி மேலும் போலி ஊடகப்
பரப்புரைகளால் மனம் சஞ்சலப்படக்கூடாது. பின்னடைவுகளின் போது தாமும்
சோர்வடையாமல் போராளிகளை உற்சாகப்படுத்திய மக்கள் கூட்டமே தேசவிடுதலையை
அடையமுடியும்.
ஆகமொத்தத்தில்,` எல்லாளன் நடவடிக்கை'யானது,
ஸ்ரீலங்காப் படைகளின் போரிடும் வலிமையை மீண்டுமொருமுறை சிதைத்து,
பொருளாதாரத்தை ஆட்டம் காணவைத்து, தமிழர்களின் படைபலத்தையும் ஒரு
கட்டமைக்கப்பட்ட படையமைப்புக் கொண்டிருக்க வேண்டிய மிக முக்கிய
பண்புகளையும் அதனூடாக ஏற்படும் விளைவுகளையும் வெளிப்படுத்தி நிற்பதோடு,
எதிர்காலப் போரில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆதிக்கம் மேலோங்கப் போவதையும்
தெளிவாக எடுத்து சொல்லியிருக்கிறது.
-சிவஒளி-
|