|
ஏழு மணி நேரத்திற்குள் விடுதலைப்புலிகள் எல்லாவற்றையும் முடித்துள்ளனர்.
மிக நீண்டகாலமாக மௌனம் சாதித்து வந்த புலிகள் வடக்கில் எங்கு, எப்போது
பாரிய தாக்குதலை நடத்துவார்களென படையினர் எதிர்பார்த்திருந்த நேரத்தில்,
தனிச் சிங்களப் பிரதேசத்தில் மிகப்பெரும் தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர்.
வடக்கில்
பல்வேறு பகுதிகளிலும், பாரிய தாக்குதலுக்காக படையினர் அணி திரண்டு
வருகையில் வடக்கிற்கான தாக்குதல் மையமொன்றே அழிக்கப்பட்டமை, வடக்கில்
படையினர் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பல்வேறு படை நடவடிக்கைகளையும்
முழுமையாகப் பாதித்துள்ளது.
வன்னியில் கடந்த இரு மாதங்களாக
முன்னரங்க காவல்நிலைப் பகுதிகளில் தினமும் கடும் மோதல்கள் தொடர்கின்றன.
ஒவ்வொரு நாள் மோதலிலும் பத்துக்கும் குறையாமல் புலிகள் கொல்லப்படுவதாக
படைத்தரப்பு அறிவித்தும், இன்று வரை படையினரால் ஒரு அங்குல நிலத்தைக்கூட
கைப்பற்ற முடியாமல் படை நடவடிக்கை தொடர்கையிலேயே புலிகள் இந்தப் பாய்ச்சலை
நடத்தியுள்ளனர்.
கிழக்கை புலிகள் இழந்துவிட்டதாலும் வடபகுதியில்
பாரிய தாக்குதல்கள் நடைபெறுவதாலும், வடக்கில் பலாலி படைத்தளம் மீதே
புலிகள் பாரிய தாக்குதலை நடத்தலாமென படையினர் எதிர்பார்த்திருந்தனர்.
யாழ்.குடாவைக் கைப்பற்றுவாதனால், பலாலி விமானப் படைத்தளத்தையும்
காங்கேசன்துறை துறைமுகத்தையும் முற்றாகச் செயலிழக்கச் செய்ய
வேண்டுமென்பதால் புலிகள் பலாலி மற்றும் காங்கேசன்துறையில் பாரிய
தாக்குதலைத் தொடுப்பார்களென எதிர்பார்த்த படையினர் இவ்விரு பகுதிகளையும்
பாதுகாப்பதில் தீவிர கவனம் செலுத்தினர்.
பலாலி
விமானப்படைத்தளமானது புலிகளின் ஆட்லறி ஷெல் தாக்குதலுக்குட்பட்ட
பிரதேசமென்பதால் இங்கு விமானங்களோ அல்லது ஹெலிகொப்டர்களோ எதுவும்
நிறுத்தப்படுவதில்லை. அதேநேரம், வன்னியில் இடம்பெறும் பாரிய படை
நடவடிக்கையின் போது பலாலி விமானப்படைத் தளத்திலிருந்து வானூர்திகளை
வரவழைப்பதில் பல்வேறு பிரச்சினைகளுமிருந்தன. அவை புலிகளின் பிரதேசங்களைத்
தாண்டியே வரவேண்டும்.
இதனால், வன்னியில் இடம்பெறும் படை
நடவடிக்கைக்கு அநுராதபுரம் விமானப்படைத்தளமே கேந்திர மையமாயிருந்தது.
வன்னிக்கான படை நடவடிக்கைக்கான கட்டளைத் தலைமையகமாக வவுனியா படைத்தளமும்
அதனோடிணைந்த விமானப்படை முகாமுமிருந்த போதும் வவுனியா விமானப்படை முகாமில்
விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களை நிறுத்துவது மிகவும் ஆபத்தாயிருந்தது.
இங்கு
புலிகள் திடீர் தாக்குதல்களை நடத்தலாமென்பதுடன் சில வேளைகளில் புலிகள்
இங்கு ஆட்லறி ஷெல் தாக்குதலையும் நடத்திவிடலாமென்ற அச்சத்தில் இந்த
விமானப்படைத்தளத்தில் விமானங்களோ ஹெலிகொப்டர்களோ அல்லது உளவு விமானங்களோ
நிறுத்தப்படுவதில்லை. இதனால் அவை, வன்னிக்கு மிக அருகில் மிகவும்
பாதுகாப்பானதெனக் கருதப்பட்ட அநுராதபுரம் விமானப்படைத் தளத்தில்
நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் அநுராதபுரம்
விமானப்படைத்தளம் மீதான தாக்குதலென்பது, வெறுமனே விமானப் படையினருக்கு
மட்டும் ஏற்பட்ட அழிவல்ல. வன்னியில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய படை
நடவடிக்கைக்காக முப்படையினரும் இணைந்து மேற்கொண்டு வந்த தாக்குதல்
திட்டங்களை தவிடு பொடியாக்கிய தாக்குதலாகவே இது கருதப்படுகிறது.
விமானப்
படையின் அனைத்து தாக்குதல் பிரிவுகளினதும் தலைமையகமாகவும், பயிற்சி
நிலையமாகவும் மட்டுமன்றி வடபகுதி மீதான இறுதித் தாக்குதலுக்கான
தலைமைப்பீடமாக இந்தப் படைத்தளம் இருந்துள்ளதை இங்கு அடிக்கடி வரும்
இந்திய, சீன, பாகிஸ்தானிய மற்றும் இஸ்ரேலிய படை அதிகாரிகள்
நிரூபித்துள்ளனர்.
விமானப்படையினரின் நடவடிக்கைகளுக்காக ஆளில்லா
உளவு விமானங்களும் (யு.ஏ.வி.) கடற்படையினருக்காக `பீச் கிராவ்ற்'
எனப்படும் கண்காணிப்பு விமானமும் மேற்கொள்ளும் உளவு வேலைகளே வடக்கில்
இடம்பெறும் முப்படையினரதும் தாக்குதல்களுக்கான புலனாய்வுத் தகவல்களை
வழங்கும் நிலையங்களாயிருந்தன.
கட்டுநாயக்கா விமானப்படைத்தளமானது
வடக்கில் இடம்பெறும் வான்வழித் தாக்குதல்களுக்கான விமானத்
தரிப்பிடமாயிருந்த அதேநேரம் அநுராதபுரம் படைத்தளமானது வடக்கே இடம்பெறும்
அனைத்து நடவடிக்கைகளுக்குமான ஒருங்கிணைப்பு நிலையமாக இருந்துள்ளது. இதனால்
தான் இந்தப் படைத்தளத்தை அழிப்பதன் மூலம் வடக்கே ஏற்பட்டுள்ள தாக்குதல்
நெருக்கடிகளைக் குறைக்க புலிகள் முடிவுசெய்து கரும்புலி அணியொன்றையும்
அங்கு அனுப்பி வைத்தனர்.
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்தை தாக்க
புலிகள் தரைவழியால் வருவரென, படையினர் எதிர்பார்த்திருந்த வேளையில் கடந்த
சில மாதங்களுக்கு முன் புலிகள் வான்வழியால் வந்து தாக்கினர். இந்த
நிலையில் தெற்கில் மற்றொரு தாக்குதலுக்காக புலிகள் வான் வழியால் வருவரென
எதிர்பார்க்கப்பட்ட போது, அவர்கள் தரைவழித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
படையினரின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாகவே புலிகளின் தாக்குதல்
திட்டங்களும் அமைந்துள்ளன.
இந்த அணி எங்கிருந்து எப்படி
வந்ததென்பது இன்றுவரை மர்மமாகவேயுள்ளது. விமானப்படைத் தளத்திற்குள்
புகுந்த இவர்கள் விமானப் படைத்தளத்தை சில நிமிட நேரத்திற்குள் தங்கள்
கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.
எனினும், இந்தக் கரும்புலிகளின் நடவடிக்கை ஒரு வழித் தாக்குதலாக
மட்டுமேயிருந்தது. அவர்களில் எவருமே திரும்பிச் செல்லவில்லை.
விமானப்படைத்தளத்தினுள்
அவர்கள் நுழைந்தது முதல் அங்கு பதுங்குகுழிகள், காவலரண்கள், காவல்
கோபுரங்களில் கண்காணிப்பிலிருந்த படையினரது கண்களில் படாது அனைத்துப்
பகுதிகளிலும் மிக நுட்பமாகப் புகுந்து ஒரே நேரத்தில் அங்கு பாரிய
தாக்குதலைத் தொடுத்தபோது தான் புலிகள் விமானப் படைத்தளத்தினுள் ஊடுருவி
எங்கும் பரந்திருந்து கடும் தாக்குதலை நடத்துவது படையினருக்கு
தெரியவந்தது.
விமானப் படையினர் உஷாராகி பதில் தாக்குதல்
தொடுத்தபோது அந்தத் தாக்குதல்களை முறியடித்த புலிகள், படையினரின்
பதுங்குகுழிகள், காவலரண்கள், காவல் கோபுரங்களையெல்லாம் கைப்பற்றியதுடன்
அங்கிருந்த விமான எதிர்ப்பு பீரங்கியையும் ராடரையும் குறிப்பிட்ட சில
நிமிட நேரத்தில் தங்கள் வசப்படுத்தினர்.
இவ்வேளையில்
விமானப்படைத்தளத்தினுள் எதிர்ப்புக் காட்டிய படையினர் சுட்டு
வீழ்த்தப்பட்டதுடன் அங்கிருந்த வானூர்திகளை அழித்தொழிப்பதிலும் புலிகள்
கவனம் செலுத்தினர். படையினர் வசமிருந்து கைப்பற்றப்பட்ட விமான எதிர்ப்பு
பீரங்கியால் வானூர்திகள் மீதும் அவை நிறுத்தப்பட்டிருந்த இடங்கள் மீதும்
கடும் தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.
விமான எதிர்ப்பு பீரங்கியை
கைப்பற்றி அதன் மூலம், தங்கள் விமானங்கள் அங்கு வரும்போது அவற்றுக்கு
பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுவதைத் தவிர்த்த புலிகள் அந்தப் பீரங்கியை
பயன்படுத்தியே அங்கிருந்த அனைத்து வானூர்திகள் மீதும் தாக்குதல்களைத்
தொடுத்துள்ளனர்.
இதனால், அங்கிருந்த எந்த வானூர்தியும்
தப்பிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாலேயே, அந்த விமானப்படைத்தளத்திற்கு
புலிகளின் இரு விமானங்களும் வந்தபோது, வவுனியா விமானப்படை முகாமில், மிக
அவசர தேவைக்காக நிறுத்தப்பட்டிருந்த பெல்-212 ரக ஹெலிகொப்டர் அநுராதபுரம்
படைத்தளம் நோக்கி வரவேண்டிய நிலையேற்பட்டது.
வன்னியிலிருந்து
தெற்கே வரும் வான் புலிகளை வழிமறித்து மடக்க விமானப்படையினர் கே-8 பயிற்சி
விமானங்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தனர். எனினும், அநுராதபுரம்
தளத்தினுள் அந்த ரக விமானங்கள் உட்பட அனைத்தும் அழிக்கப்பட்டதால்
கட்டுநாயக்காவிலிருந்தே கிபிர் அல்லது மிக் விமானங்கள் வரவேண்டிய
நிலையேற்பட்டது. எனினும், அநுராதபுரம் விமானப்படைத்தளத்தினுள் பாரிய
தாக்குதல் தொடுத்த புலிகள் வன்னியில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை தயாராக
வைத்திருந்திருக்கலாமெனக் கருதியே கிபிர் மற்றும் மிக் விமானங்கள்
உடனடியாக அங்கு செல்லவில்லை.
இதனாலேயே, அந்த நேரத்தில் வடபகுதி
மற்றும் தென்பகுதி வான்பரப்பில் தங்களது எந்தவொரு விமானமும்
பறக்கவில்லையென தரைப் படையினருக்கு அறிவிக்கப்பட்டதுடன், அநுராதபுரம்
முகாம் மீது தாக்குதல் நடத்த வந்த புலிகளின் விமானங்கள் மீது தாக்குதல்
நடத்துமாறு தரைப்படையினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதையடுத்தே,
வவுனியாவிலிருந்து அநுராதபுரம் நோக்கி வந்த ஹெலிகொப்டர் மீது
தரைப்படையினர் தவறுதலாகச் சுட்டுள்ளதாக கூறப்படுகிறது. தங்கள் ஹெலி மீது
தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த விமானி அதனை அவசர அவசரமாகத்
தரையிறக்க முற்பட்ட போதும் அதற்கிடையில் அது வீழ்ந்து நொருங்கியுள்ளது.
அவசர
நேரத்தில் படைத்தளம் ஒன்றை பாதுகாக்கும் திட்டம் வகுக்கப்படாததால்,
அநுராதபுரம் விமானப்படைத்தளம் விடுதலைப் புலிகளால் மிக மோசமாகத்
தாக்கப்பட்டது. அதேநேரம், வான் புலிகளின் வருகையின் போதும் அதன்
தாக்குதலின் போதும் மேற்கொள்ளப்பட வேண்டிய பதில் நடவடிக்கையில் ஏற்பட்ட
குழப்பத்தால், விமானப்படைத் தளத்திற்கு வெளியேயும் ஹெலிகொப்டர் ஒன்றை
இழக்க நேரிட்டது.
விடுதலைப் புலிகளின் விமானங்கள் தெற்கு நோக்கி
வந்தால் அவற்றை வான் வெளியில் வைத்து விமானங்கள் மூலம் தாக்கியழிக்கவும்
அல்லது தரையிலிருந்து ஏவுகணைகளைச் செலுத்தி அல்லது விமான எதிர்ப்பு
பீரங்கிகளால் சுட்டு வீழ்த்தவும் அதுவும் முடியாது போனால் அவை வன்னிக்குத்
திரும்பிச் சென்று தரையிறங்கும் போதாவது விமானத் தாக்குதல் நடத்தவும்
திட்டமிடப்பட்டிருந்தும் படையினரால் எதுவும் செய்யமுடியாது போனதுடன்
இந்தத் திட்டத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையால், புலிகளின் விமானங்களைத்
தேடிவந்த ஹெலிகொப்டர் ஒன்றை இழந்தமையானது படையினரின் வான் பாதுகாப்புத்
திட்டம் வெற்றிகரமானதல்ல என்பதை நிரூபித்துள்ளது.
2001 ஆம் ஆண்டு
கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மற்றும் அதனோடிணைந்த சர்வதேச விமான
நிலையம் மீதான தாக்குதலின் அடிப்படையிலேயே, புலிகள் அநுராதபுரம்
விமானப்படைத்தளம் மீதான தாக்குதல் திட்டத்தை தீட்டியுள்ளனர்.
தென்பகுதியில் புலிகளின் தாக்குதல் இலக்காக கட்டுநாயக்கா விமானப்
படைத்தளத்தையே கருதிய படைத்தரப்பு அதன் பாதுகாப்பை பலமடங்காக்கியிருந்த
அதேநேரம், அநுராதபுரம் விமானப்படைத்தள பாதுகாப்பு குறித்து பெரிதும்
அலட்டிக்கொள்ளவில்லை.
கொழும்பு மாநகரிலும் அதன்
சுற்றுப்புறங்களிலும் தமிழ்பேசும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகமென்பதால்
கட்டுநாயக்கா விமானப் படைத்தளப்பகுதிக்குள் நுழைவதற்கு புலிகளுக்கு
வாய்ப்புகள் மிக அதிகமிருப்பதாகக் கருதப்பட்டது. அதேநேரம், 99 சதவீதம்
சிங்கள மக்களே வாழும் அநுராதபுரம் பகுதியில் தமிழர்களின் நடமாட்டம் மிகக்
குறைவென்பதாலும் அவர்களது குடியிருப்புகளை கூட சிங்களவர்கள் நன்கு
அடையாளம் காண முடிவதாலும் இங்கு புலிகள் நுழைவதற்கான
சாத்தியமேயில்லையென்றே படைத்தரப்பு பெரிதும் கருதியிருந்தது.
கட்டுநாயக்கா
விமானப்படைத்தளம் மற்றும் அதனோடிணைந்த சர்வதேச விமான நிலையம்
மிகப்பெரியது. அதனுடன் ஒப்பிடுகையில் அநுராதபுரம் விமானப்படைத்தளம்
சிறியது. ஆனால், கட்டுநாயக்கா விமானத்தளம் மீதான தாக்குதலுக்கு
அனுப்பப்பட்ட கரும்புலிகளின் எண்ணிக்கையை விட அநுராதபுரம் விமானத்தளத்
தாக்குதலுக்குச் சென்ற கரும்புலிகளின் எண்ணிக்கை அதிகம்.
பெரிய
படைத்தளம் மீதான தாக்குதலுக்கு குறைந்தளவு கரும்புலிகள் சென்றபோது சிறிய
படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அதிகளவு கரும்புலிகள் சென்றது ஏனென்ற
கேள்வியும் எழுகிறது.
கட்டுநாயக்கா தளத்தின் பாதுகாப்பு மிக
அதிகம். அநுராதபுரம் தளத்தைவிட அங்கிருக்கும் விமானங்களின் பாதுகாப்பில்
படைத்தரப்பு மிகவும் அவதானமாயிருந்ததால் அங்கு படையினரின் எண்ணிக்கையும்
மிக அதிகம். அதன் பாதுகாப்பும் மிக அதிகம். அதனால், அந்தப் பாதுகாப்பையும்
ஊடுருவிச் செல்வதிலுள்ள சிரமங்களை புலிகள் உணர்ந்திருந்ததுடன் அதிகளவானோரை
அனுப்பி பெருமளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவே குறைந்தளவானோரை
அந்தத் தாக்குதலுக்கு புலிகள் அனுப்பினர்.
ஆனால், அநுராதபுரம்
படைத்தள நிலைமை அவ்வாறிருக்கவில்லை. கட்டுநாயக்கா விமானத் தளத்திற்குள்
புகுந்த கரும்புலிகள், முதலில் தாக்குதல் விமானங்களை தாக்கி அழிப்பதிலேயே
குறியாக இருந்தார்கள். படைத்தளத்தை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து
அதன் பின் விமானங்களை தாக்கக்கூடிய நிலைமைக்கான சாத்தியம் அங்கில்லை.
அதனால், அந்தத் தளத்தினுள் கரும்புலிகள் புகுந்த நேரம் முதல் விமானங்களைத்
தாக்குவதிலேயே குறியாக இருந்தனர்.
ஆனால், அநுராதபுர தாக்குதலில்
நிலைமை அவ்வாறிருக்கவில்லை. அங்கு புகுந்த புலிகள் முதலில் விமானப்
படைத்தளத்தை தங்களது முழுக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர். அதையடுத்து
அங்கு வசதியாக நிலையெடுத்த பின் அனைத்து விமானங்களையும் தேடிப்பிடித்து
முற்றாக அழித்ததுடன் விமானப்படை முகாமுக்கும் பாரிய சேதங்களை
ஏற்படுத்தினர்.
இந்தப் படைத் தளத்தை முழுமையாகக்
கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து, அதனை முற்றாக அழிக்க வேண்டுமென்ற
நோக்கிலேயே மிகத் துல்லியமாக உளவுத் தகவல்கள் பெறப்பட்டு திட்டங்களும்
தீட்டப்பட்டிருந்தன. இதற்கேற்பவே அதிகளவான கரும்புலிகள் அனுப்பப்பட்டு
விமானப் படைத்தளமும் அவர்களது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டு
பின்னர் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன.
அதிகாலை 3.20 மணிக்கு
ஆரம்பமான தாக்குதல் காலை 10.30 மணிவரை நீடித்துள்ளது. சுமார் ஏழு மணிநேரம்
படைத்தளம் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டிலிருந்துள்ளது.
படைத்தளத்திலிருந்த படையினர் பலர் கொல்லப்பட்டதுடன் புலிகளின் கடும்
தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாது பலர் படைத்தளத்தை விட்டு
தப்பிச்சென்றுவிட்டனர். இந்தச் சமரில் ஒவ்வொரு கரும்புலியும் தனக்கு
வழங்கப்பட்ட பணிகளை முடித்துக்கொண்டு உயிரிழந்த போதும் கடைசிக் கரும்புலி
காலை 10.30 மணியளவிலேயே உயிரிழந்துள்ளார்.
புலிகளின் தகவலின்படி,
படைத்தளத்தினுள் புகுந்த புலிகள் சுமார் 20 நிமிட நேரத்தினுள் அதனைத் தமது
பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளனர். `எல்லாளன்' என்று
பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கைக்கு லெப். கேணல் இளங்கோ தலைமை தாங்கினார்.
தற்காப்பு நடவடிக்கைகளிலும் காட்டுப்புறத்தினூடாக முகாமுக்குள் மேற்கொண்ட
நகர்வுகளிலும் கப்டன் பஞ்சசீலன் ஈடுபட்டார்.
விமான எதிர்ப்பு
ஆயுதங்களைக் கையாள்வதில் மிகவும் நிபுணத்துவம் பெற்ற கப்டன் ஈழப்பிரியா
இந்தத் தாக்குதலில் முக்கிய பங்கை வகித்துள்ளார். படைத் தளத்தினுள்ளிருந்த
விமான எதிர்ப்பு பீரங்கி உட்பட அனைத்து கனரக ஆயுதங்களையும் கைப்பற்றிய
இவர் அங்கிருந்த படை நிலைகளைத் தகர்த்தெறிந்துள்ளார்.
அமெரிக்கத்
தயாரிப்பான `பீச் கிராவ்ற்' உளவு விமானத்தை லெப்.கேணல் வீமன்
தாக்கியழித்துள்ளார். `எல்லாளன்' தாக்குதல் நடவடிக்கைக்கு தலைமைதாங்கிய
லெப்.கேணல் இளங்கோ காயமடைந்த நிலையில் காலை 8.30 மணியளவில்
உயிரிழந்துள்ளார்.
கடைசிக் கரும்புலி காலை 10.30 மணிவரை அங்கு
நின்று, படைத்தளத்தை மீளக் கைப்பற்ற அனுப்பப்பட்ட இராணுவ விஷேட கமாண்டோ
படையணியுடன் மோதி உயிரிழந்துள்ளார். காலை 8.30 மணியளவில், படைத்தளத்தை
மீண்டும் கைப்பற்றுவதற்கான தாக்குதலை விஷேட கமாண்டோ படையணியினர்
ஆரம்பித்தபோதும் காலை 10.30 மணியளவில் கடைசிக் கரும்புலி இறந்த பின்பே
அவர்களால் விமானப் படைத் தளத்தினுள் பிரவேசிக்க முடிந்தது. ஆனால், அவர்கள்
உள்ளே நுழைந்த போது எல்லாமே முடிந்துவிட்டன.
கரும்புலிகளின்
இந்தத் தாக்குதலில் ரஷ்யத் தயாரிப்பான எம்.ஐ.-24 ரக ஹெலிகொப்டர்கள் -2,
எம்.ஐ-17 ரக ஹெலிகள் -2, சீனத் தயாரிப்பான கே-8 ரக விமானங்கள் - 2,
பி.டி.-6 ரக விமானங்கள் - 3, ஆளில்லா உளவு விமானங்கள் - 3, செஸ்னா ரக
விமானங்கள் -5, அமெரிக்க தயாரிப்பான ஆழ்கடல் உளவு விமானம் (பீச் கிராவ்ற்)
-1 என 18 வானூர்திகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. மேலும், மூன்று
வானூர்திகள் தொடர்பாக எதுவும் தெரியவரவில்லையெனவும் கூறப்படுகிறது.
இதேநேரம்,
இவ்வாறானதொரு நுட்பமான திட்டத்துடன் வந்து தாக்குதல் நடத்திய 21
கரும்புலிகள் 20 வானூர்திகள் வரை அழித்த நிலையில் அவற்றில் சிலவற்றையாவது
கொண்டு சென்றிருக்கலாமேயென்ற கேள்வியும் எழுகிறது. ஆனால், இந்தத்
தாக்குதலுக்காக விமானப் பயிற்சி பெற்றவர்களை புலிகள் ஈடுபடுத்தவில்லை.
தாக்குதல் திட்டம் முழுமையாக வெற்றிபெற்றதால் விமானங்கள் சிலவற்றையாவது
புலிகள் கொண்டு சென்றிருக்கலாமே என்ற கேள்வி எழுகிறது. சிலவேளை
இத்தாக்குதல் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறாது போயிருந்தால், விமானப்
பயிற்சி பெற்ற ஒரு போராளியை இழப்பதென்பது புலிகளும் மிகப்பெரும்
இழப்பாகிவிடுமென்பதாலேயே, விமானங்களை தாக்கியழிப்பதென்ற திட்டம் மட்டுமே
புலிகளால் தீட்டப்பட்டிருந்தது.
கரும்புலிகள் வெற்றிகரமாக
விமானப்படைத்தளத்தினுள் புகுந்து தாக்குதலை நடத்தியபோது, நாடு முழுவதும்
படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். முழு விமானப்படைத்
தளத்தினுள் புலிகள் வெற்றிகரமாகத் தாக்குதலை நடத்துகிறார்களென்ற
செய்தியும் படையினருக்கு தெரியவந்த அதேநேரம், புலிகள் விமானப்படைத்
தளத்திலிருந்து விமானங்கள் எதையாவது கடத்திச் செல்லலாமென்ற
எதிர்பார்ப்புடன் படையினர் தயாராயிருந்தனர்.
இந்த நிலையில் வான் புலிகள் அந்தப் பகுதிக்கு வந்தது அவர்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியதாயிருந்தத�
.
தரைவழித் தாக்குதலுக்கு வந்தவர்களே விமானப்படைத்தளத்தை முழுமையாக
அழித்தபோது, இங்கு வான் புலிகளின் தாக்குதல் முக்கியத்துவமற்றது. எனினும்,
வான் புலிகளின் இந்த வருகையும், தாக்குதலுமானது அரசையும் படையினரையும்
மட்டுமல்லாது உளவியல் ரீதியாக தென்பகுதி மக்களை பெரும் அச்சத்திற்குள்ளும்
அதிர்ச்சிக்குள்ளும் ஆழ்த்தியுள்ளது.
புலிகளின் வரலாற்றில்,
இதுவரை காலமும் அவர்களது தரைப்படையும் கடற்புலிகளும் இணைந்து வடக்கில் பல
தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில் புலிகளின் தரைப்படையும் வான் படையும்
இணைந்து, அதுவும் தெற்கில் தாக்குதல் நடத்தியமை இதுவே முதற் தடவையாகும்.
இந்தத் தாக்குதலால் விமானப் படைத்தளத்திலிருந்த 80 வீதத்திற்கும் மேலான
வானூர்திகள் முற்றாக அழிந்துவிட்டன. எந்தவொரு வானூர்தியும் இங்கு
தப்பியதாகத் தகவலில்லை. பல மில்லியன் டொலர் பெறுமதியான `பீச்கிராவ்ற்'
அழிக்கப்பட்டமை கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கையை முழுமையாகவே
முடக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கே வன்னி, மணலாறு
மற்றும் மன்னார் பகுதியில் விமானப்படையினர் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு
பின்புலமாக இருந்து வான் வழியே உளவுத் தகவல்களைச் சேகரித்து அவற்றை,
கட்டுநாயக்காவிலிருந்து செல்லும் `மிக்' மற்றும் `கிபிர்' விமானங்களுக்கு
வழங்கிய அநுராதபுரம் விமானப்படைத்தளம் இன்று அனைத்து செயற்பாட்டையும்
இழந்துள்ளது. இது வடக்கே நடைபெறும் பாரிய படை நடவடிக்கைக்கு பெரும்
பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மிகத் துல்லியமான தகவல் சேகரிப்பு,
அதற்கேற்ப மிகச்சிறந்த தாக்குதல் திட்டம், இதனை நிறைவேற்றுவதற்கென
சிறப்புப் பயிற்சிபெற்ற விஷேட கரும்புலிகள் அணி, இவற்றுக்கெல்லாம் அப்பால்
தாக்குதல் நடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட தினம், 99 வீதம் சிங்களவர்களே வாழும்
பகுதிக்குள் தாக்குதல் அணியொன்று ஊடுருவி அனைத்தையும் நிறைவேற்றிய விதம்
என்பன அரசுக்கும் படைத்தரப்புக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அநுராதபுரத்தில்
இந்தளவுக்கு ஆயுதங்கள் சகிதம் விடுதலைப்புலிகள் எங்கிருந்து எப்படி
வந்தார்கள், எப்படி ஒன்று திரண்டார்கள், தாக்குதலுக்காக விமானப்
படைத்தளத்தினுள் எப்படி நுழைந்தார்களென்பதெல்லாம் இதுவரை
விடைகண்டறியப்படாத, தொடர்ந்தும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள
மிகப்பெரும் கேள்விகளாகும்.
21 கரும்புலிகளும் விமானப்படையினரின்
சீருடையில் மிக நவீன ரக ஆயுதங்கள் பலவற்றுடன் புகுந்துள்ளனர். இவர்கள்
வசம் எம்-16 ரகத் துப்பாக்கிகள், லோ (இலகு ரக டாங்கி எதிர்ப்பு ஆயுதம்),
எம்.பி.எம்.ஜி, எல்.எம்.ஜி, ஆர்.பி. ஜிகள், கைக்குண்டுகள், கத்திகள்
மற்றும் ஏழு செய்மதித் தொலைபேசிகள் உட்பட பல்வேறு ஆயுதங்கள் இருந்துள்ளன.
இவர்களிடமிருந்த செய்மதித் தொலைபேசி ஊடாகவே வன்னியிலிருந்து இவர்கள் வழி
நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுரம்
விமானப்படைத்தளம் மீதான இந்தத் தாக்குதலானது, புலிகள் குறித்து அரசும்
படைத்தரப்பும் தெற்கில் பரப்பிவந்த பிரசாரங்களை முற்றாகத்
தலைகீழாக்கியுள்ளது. மிகப்பெரும் போரிடும் ஆற்றலுடன் புலிகளிருப்பதால்
இந்த நிலையில் அவர்களுடன் சமரசம் செய்யாவிட்டால் நிலைமை மேலும் மோசமடைந்து
விடுமென, பிரதான எதிர்க்கட்சி அரசை கடுமையாக எச்சரிக்குமளவுக்கு
நிலைமையுள்ளது.
எனினும், இழந்த விமானங்களை விரைவில் ஈடுசெய்வோம்,
பயங்கரவாதத்தை முற்றாக அழித்தொழிப்போமென சூளுரைத்துள்ள அரசு, மேலும்
போருக்குத் தயாராகி வருகின்றது. அரசின் இந்தச் சவாலை புலிகளும்
எதிர்கொள்ளத் தயாராகியுள்ளதால் அடுத்த சமர் எங்கு, எப்போது
வெடிக்குமென்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
-விதுரன்-
|