|
ஒரு போராளியை துரோகியாக்கிய துரோகி!
சுரேஸ் என்ற பிரசன்னாவுக்கு நடந்தது என்ன?
எழுவானில் எழுந்த வட்டச் சூரியன் அழகாய்ப் புன்னகைத்து சிவப்பாய்க் குருதி சிந்தி ஒரு போராளியைப் போன்று மறைவான் படுவான் கரைதனிலே...
பச்சை வயலோடு ஆற்றுப் படுக்கைகளும் பசுமை போர்த்திருக்கும். கடல் அன்னையவளைத் தழுவிய காற்று உடல் தழுவி மெல்ல முத்தமிடும்.
எட்டி நின்று பார்த்தால் எட்டுத்திசையும் வீரம் செறிந்திருக்கும்.
கோயில்களின் மணியோசையோடு மண்மறக்கா மாவீரர்களின் குரலோசையும்
சேர்ந்தொலிக்கும்.
ஆம்! பல புலி மறவர்களின் வீரம் செறிந்த வரலாற்றுப் பதிவுகள் வந்தாறுமூலைக் கிராமத்துடன் இழையோடி நிற்கின்றன என்றால் அது மிகையாகாது.
தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு அதி தீவிர ஆதரவளானாக சுரேஸ் செயற்பட்டான்.
1988ல் அவனை முழுநேர உறுப்பினராக மாவீரர் மேஜர் அபயன் உருவாக்கினார். அப்போது அவனுக்கு பிரசன்னா என்ற பெயர் சூட்டப்பட்டது.
இயற்கையில் அழகும், வீரமும், சகபோராளிகளை சமமாக மதிக்கும் பண்பும், ஏழை
மக்களை மிகவும் நேசிக்கும் உள்ளமும் கொண்ட மாவீரனை யாழ் தெல்லிப்பளையைச்
சேர்ந்த மேஜர் அபயனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை தான் பயிற்சி
கொடுத்து உருவாக்கிய போராளி கயவர்களால் பிற்பகுதியில் துரோகியாக்கப்
படுவானென்று!
தான் ஆதரவாளராகச் செயற்பட்டபோது எப்படி இயக்கத்திற்காக செயற்பட்டானோ
அதைவிட முழுநேரச் செயற்பாட்டாளராக உருவாகிய பின் ஒரு முழுநேர போராளி
எப்படியிருக்க வேண்டும் என்ற கோட்பாட்டுக்கு அமையத் தன்னை மாற்றிக்கொண்டு
செயற்பட்டான் சுரேஸ்.
ஐ. பி. கே. எப் காலகட்டத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலேயே பல
சோதனைகளுக்கு மத்தியில் நின்று இயக்கப் பணிகளை முனைப்புடன்
முன்னெடுத்தான். எதிரிகளையும், துரோகிகளையும் அழித்தொழிக்கும் பணிகளை அவன்
தீவிரமாக்கினான். காட்டிலிருக்கும் போராளிகளுக்கான அத்தியாவசியப்
பொருட்களையும் சேகரித்து அவ்வப்போதே அனுப்பி வைத்துக் கொண்டிருந்தான்.
இது ஒருபுறமிருக்க, ஐ.பி.கே. எப்பினராலும், துரோகக் கும்பலாலும் இவனது
தீவிர செயற்பாட்டாலும் வந்தாறுமூலையிலிருந்த இவன் குடும்பம் பல தடவை
துன்புறுத்தப்பட்டது. இவனது தந்தையோ ஒரு மனநோயாளி!
1985-1986 காலப்பகுதியில் விசேட அதிரடிப்படையினரின் நடவடிக்கைகளை அதாவது
அதிரடிப்படையினர் இயக்கப் போராளிகளின் மீதும், ஆதரவாளர்கள் மீதும்
பதுங்கித் தாக்குதல்கள் மேற்கொள்ள வீதியோரங்களில் மறைந்திருக்கும்போது
சுரேஸின் தந்தையான கைலாயபிள்ளை வீதியோரத்தில் நடமாடிக் கொண்டிருப்பார்.
அப்போது பதுங்கியிருக்கும் இராணுவத்தினர் இவர் ஒரு பைத்தியமென அறிந்து
அவரைக் கவனிக்கமாட்டார்கள். அப்போது தெருவில் பிரசன்னமாகும் இயக்கப்
போராளிகளையோ அல்லது ஆதரவாளர்களையோ கண்டால் அவர் ஆமி பதுங்கியிருக்கிறான்
கவனம் என்று கூறிக்கொண்டே நடந்து கொண்டிருப்பார். இப்படிப் பல தடவைகள் பல
போரளிகளை அவர் காப்பாற்றியுள்ளார்.
மக்கள் மத்தியில் பல்வேறு இயக்கப் பணிகளை மேற்கொண்ட சுரேஸ் நிதிசேகரிப்பு வேலைகளிலும் ஈடுபாடுபட்டான்.
அப் பிரதேசத்திற்கு கருணாவின் சகோதரரான றெஜி நிதிப் பொறுப்பாளராக
நியமிக்கப்பட்டார். சேகரிக்கும் நிதியினை சுரேஸ் றெஜியிடம் கொடுத்தும்
அதன் கணக்கு விபரங்களை ஒழுங்காகப் பேணவில்லை! நிதிமோசடியில் பெருவாரியாக
ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
இந்தப் பிரச்சனையை இலுப்படிச்சேனையைச் சேர்ந்த போராளியொருவர் றெஜியின்
பணமோசடி பற்றி சுரேஸிடம் கூறினார். கணக்குகள் ஒன்றும் ஒழுங்கில்லை! எனவே
றெஜியின் விடயத்தில் நீங்கள் கவனமாக இருங்கள், இதனால் உங்களுக்குப்
பிரச்சனை வரலாம் எனவும், தான் சமாதான காலம் என்பதால், பாடசாலையில்
மீண்டும் இடையில் விட்ட கல்வியை தொடரப் போவதாகவும் அந்தப் போராளி பல
தடவைகள் சுரேஸிடம் கூறினார்.
றெஜியின் தில்லுமுல்லுகளைப் பலவழிகளில் அறிந்த சுரேஸ், தனது பணத்திற்கான
கணக்குகள் எழுதப்பட்டு அதற்கான பிரதிகள் தரவேண்டும் என றெஜியிடம் கூறினார்.
இதனால் கோபமும் எரிச்சலுமடைந்த றெஜி நான் ஒரு பொறுப்பாளர். எனது தம்பிதான்
மாவட்டத் தளபதி என்பது உனக்கும் தெரியும். ஒரு சிப்பாயாக இருக்கும்
உனக்கெல்லாம் கணக்கு காட்டவேண்டிய அவசியம் எனக்கில்லை! இந்த விடயத்தை
இதனோடு விட்டுவிடு! இல்லையேல் எனது தம்பி கருணாவிடம் கூறி உன்னை மண்டையில்
போடுவேன் என்று சுரேஸை றெஜி மிரட்டினாராம்.
தன்னைப் பற்றிய நிதி மோசடி சம்பந்தமான விடயங்களை இலுப்படிச்சேனையைச்
சேர்ந்த அந்தப் போராளிதான் சுரேஸிடம் கூறியுள்ளான் என்ற விபரத்தை எப்படியோ
றெஜி அறிந்து கொண்டார்.
தனது ஏவலாளிகளை அழைத்த றெஜி அந்தப் போராளியைக் கைதுசெய்து சித்திரவதை
செய்து கொன்றுவிடும்படி கட்டளையிட்டார். அதன்படியே அந்த
இலுப்பையடிச்சேனையைச் சேர்ந்த அந்தப் போராளியை அந்த ஏவலாளிகள் மிகக்
கொடுரமாகத் தாக்கத் தொடங்கினார்கள். தாகத்தால் தண்ணீர் கேட்டபோதும்
கொடுக்கப்படவில்லை! அவர்களின் கொடுரத் தாக்குதல்களினால் அந்தப் போராளியின்
சிறுநீரகத்தில் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் மயக்கமடைந்தவரைத் தூக்கி உழவு
இயந்திரப் பெட்டிக்குள் போட்டார்கள். சிறிது நிமிடங்களில் அந்தப்
போராளியின் முனகல் சத்தம் நிசப்தமாக அடங்கிப் போனது.
ஆம்! அந்தப் போராளியின் உயிர் அந்தக் கயவர்களினால் பிடுங்கப்பட்டது.
மருத்துவப் பரிசோதனைக்காக ஏறாவூர் அரசினர் வைத்தியசாலைக்கு அந்தப் போராளியின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
ஆனால், அங்கு உண்மையை மூட பொய் ஒன்று தயாரிக்கப்பட்டது. அந்த உடலைப்
பரிசோதித்த மருத்துவர் ஆயுதமுனையில் மிரட்டப்பட்டார். பொய் மருத்துவ
அறிக்கை தயாரிக்கும்படி அவரிடம் கூறப்பட்டது.
பயத்தின் விளிம்பிலிருந்த அந்த மருத்துவரும் இதற்கு இசைந்தே கொடுத்ததால்
போலி மருத்துவ அறிக்கை தயாரிக்கப்பட்டு, இயற்கை மரணமாக வெளியிடப்பட்டது.
இந்த மரணத்தோடு அந்தக் கயவர்கள் திருப்தியடையவில்லை! தங்களது விஷவில்லை
வளைத்து அதில் விஷ அம்புகளை சுரேஸ்மீது ஏவிவிடத் தயாரானார்கள்!
நெருடல் இணையம்
|