பிரதான பக்கம் arrow Karuna Antharangam arrow சமாதானப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த போர் நிறுத்த உடன்படிக்கையின் முறிவு
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

சமாதானப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த போர் நிறுத்த உடன்படிக்கையின் முறிவு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 07 January 2008
 போர் நிறுத்த உடன்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்தன் மூலம் முழு அளவிலான போருக்கு அரசு அறைகூவல் விடுத்துள்ளது. இவ்வாண்டை போராண்டாகப் பிரகடனப்படுத்திய அரசு சமாதான முயற்சிகளுக்கு அடியோடு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. இதனால் அரசின் அறைகூவலுக்கு முகம் கொடுக்க விடுதலைப் புலிகளும் முழுஅளவில் தயாராக வேண்டியிருக்கும். 
விடுதலைப் புலிகளின் பலத்தின் அடிப்படையிலேயே போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. `ஜெயசிக்குரு' படை நடவடிக்கையின் படுதோல்வியை அடுத்து புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் தாக்குதல்களால் யாழ்.குடாநாட்டை அவர்கள் கைப்பற்றும் நிலை உருவானது. வன்னியில் பலபடைத்தளங்கள் புலிகளிடம் வீழ்ந்ததும், ஆனையிறவு படைத்தளம் அழிக்கப்பட்டதும், கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் தகர்க்கப்பட்டதும் இந்த உடன்பாடு கைச்சாத்திட பிரதான காரணிகளாய் அமைந்தன.

இராணுவ ரீதியில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதென உணரப்பட்டது. புலிகளின் போர் வெற்றிகள் மேலும் தொடர்வதை தடுத்து நிறுத்தவும் இந்த உடன்பாடு அப்போது உதவியது. இதனால்தான் இலங்கைத் தீவில் இரு தேசங்கள் இருப்பதை கொள்கையளவில் ஏற்றுக் கொண்டு இரு தரப்புக்களதும் எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டு இந்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது.

சமாதான முயற்சிகளை முன்னெடுத்து இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணவும் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்கவும் இந்த உடன்பாடு வழிவகுத்தது. ஆனாலும் அனைவரதும் எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை. சமாதானப் பேச்சுக்களும் தோல்வியடைய மோதல்கள் வெடித்து பெரும் யுத்தமாக மாறியதால் கடந்த இரு வருடங்களாக இந்த உடன்பாடானது வெறுமனே காகிதத் தாளில் மட்டுமே இருந்தது.

சமாதான முயற்சிகளும் பேச்சுக்களும் முன்னெடுக்கப்படாத போதும் போர் நிறுத்த உடன்பாடு முழுமையாக அமுல்படுத்தப்பட்டு சமாதானச் சூழ்நிலை பேணப்பட்டிருந்தால் பேச்சுக்களுக்கான வாய்ப்பை மீண்டும் உருவாக்கியிருக்க முடியும். ஆனால் பேச்சுக்கள் முறிவடைய சமாதானச் சூழலும் மோசமடைந்து பெரும் போருக்கே வித்திட்டது. பேச்சுக்கள் ஊடாக இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கமில்லாததால் போர் மூலமே தீர்வென்ற நிலை உருவானது.

போர் நிறுத்த உடன்பாடு உருவாகி சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பமாக நோர்வே அனுசரணையாளருக்கு உதவிய சர்வதேச சமூகம், பின்னர் மோதல்கள் ஏற்பட்டு பெரும் போர் வெடித்த போது இலங்கை அரசுக்கு ஆயுதங்களை விற்பதில் தீவிரம் காட்டியது. போர் நிறுத்த உடன்பாட்டை முழுமையாக இருதரப்பும் கடைப்பிடிக்கச் செய்யும் விதத்தில் சர்வேதச சமூகம் நடந்து கொள்ளவில்லை.

போர் நிறுத்த காலத்தில் இலங்கை அரசுக்கு ஆயுதங்களையும் போர்த்தளபாடங்களையும் விற்பனை செய்வதற்கு பல்வேறு நாடுகளும் போட்டி போட்டன. இதில் இந்தியா ஒரு படி மேல் சென்று, இலங்கை தன்னிடமே ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய வேண்டுமென மிரட்டலும் விடுத்தது. இவ்வாறானதொரு நிலைமை போர்நிறுத்த உடன்பாடு முறிவடையவும் சமாதானச் சூழ்நிலை சீர்குலையவும், சமாதான முயற்சிகளும் சமாதானப் பேச்சுக்களும் ஸ்தம்பிதமடையவும் வழிவகுத்தது.

மக்களின் உயிரிழப்புக்களை தவிர்க்கும் நோக்கிலும் இந்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. ஆனால் இந்த உடன்பாடு முடிவுக்கு வந்த நிலையில் மக்களின் உயிரிழப்புக்கள் மிக மோசமாக அதிகரிக்கப் போகிறது. இந்த உடன்பாடு இருக்கும் வரை சமாதான முயற்சிகள் தொடரும், அழிவுகள் குறையுமென்ற எதிர்பார்ப்பிருந்தது. ஆனால் இந்த உடன்பாடு இல்லாமல் போனதன் மூலம், போரிடும் இரு தரப்பும் அழிவுகளைப் பற்றி இனி சிந்திக்கப் போவதில்லை. தங்கள் பலத்தை காட்டுவதற்காக அவர்கள் எதனையும் செய்வர்.

கிழக்கில் படையினருக்கு கிடைத்த சில வெற்றிகள் அரசுக்கு பல்வேறு நம்பிக்கைகளையும் ஏற்படுத்தியது. கிழக்கை போன்று வடக்கையும் கைப்பற்றி விட்டால் யுத்தத்திற்கு மட்டுமன்றி இனப்பிரச்சினைக்கும் தீர்வைக் கண்டு விடலாமென்ற எண்ணத்தை தீவிரமாக உருவாக்கியது. முன்னைய அரசுகள் கூட ஏதாவொரு வகையில் சமாதானத் தீர்வு குறித்து சிந்தித்திருந்தன. புலிகளின் பலம் பற்றி அவர்கள் அறிந்திருந்ததே அதற்குக் காரணமாகும்.

ஆனால் இந்த அரசோ இந்தப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு கண்டு அதன் பின் அரைகுறைத் தீர்வைத் திணித்து விடலாமென முழுமையாக நம்புகிறது. புலிகளை அழிப்பதன் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட முடியுமெனக் கருதுகிறது. இதனால்தான் இவ்வாண்டு வரவு - செலவுத் திட்டத்தில் பெருமளவு நிதியை யுத்தத்திற்கு ஒதுக்கி இவ்வாண்டை போராண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

வடக்கே தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வரும் அரசு, தமிழ்ச் செல்வனின் கொலையுடன் புலிகள் யுத்த நிறுத்தத்திலிருந்து விலகுவரென எதிர்பார்த்தது. மாவீரர் தின உரையில் புலிகளின் தலைவர் இதனைத் தெரிவிப்பாரெனவும் அரசு எதிர்பார்த்தது. ஆனால், யுத்த நிறுத்தம் மடிந்து போவதற்கும் சமாதான முயற்சிகள் முழுமையாக சீர் குலைந்து போவதற்கும் சர்வதேச சமூகம் விட்ட தவறுகளே காரணமெனவும் இலங்கை அரசு மீது அவர்களால் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாதுபோன இயலாதத் தன்மையையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

எனினும் இந்த ஆண்டை போராண்டாகப் பிரகடனப்படுத்தியதன் மூலம் அரசு போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகப் போகிறது என்பது உணரப்பட்டு வந்தது. புலிகளின் தலைவரைக் கொல்லப் போவதாகவும் வடக்கிலிருந்து புலிகளை முற்றாக அழித்தொழித்து விடப்போவதாகவும் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகள் சூளுரைத்துள்ளனர்.

கடந்த இரு வருடங்களுக்கு முன்பே போர் நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வந்து விட்டாலும் உடன்பாட்டிலிருந்து முதலில் விலகுவது யாரென்ற பிரச்சினையிருந்தது. உடன்பாட்டிலிருந்து விலகி சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பைச் சம்பாதிக்க இரு தரப்பும் விரும்பவில்லை. இதனால்தான் உடன்பாட்டை கிடப்பில் போட்டுவிட்டு கடும் சமரில் ஈடுபட்டு வந்தன. எனினும் தாங்கள் புலிகளை விட மிகவும் பலமான நிலையிலிருப்பதாகவும் யுத்தத்தில் தங்கள் கையே ஓங்கியிருப்பதாகவும் கருதும் அரசு போர் நிறுத்த உடன்பாடு இல்லையேல் வடக்கையும் தாங்கள் கைப்பற்றிவிடமுடியுமெனக் கருதுகின்றது.

போர் நிறுத்த உடன்பாடு இருந்து அது செயலிழந்து போயிருந்தாலும் வடக்கில் பாரிய படையெடுப்பை மேற்கொள்ளும் போது அந்த உடன்பாட்டைகாரணம் காட்டி சர்வதேச சமூகம் தங்கள் மீது கடும் அழுத்தம் கொடுக்க முயலுமென அரசு கருதுகிறது. இதனால்தான் அவ்வாறானதொரு அழுத்தத்திற்குட்படுவதைத் தவிர்ப்பதற்காக அரசு போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலக முடிவு செய்தது.

எதிர்வரும் 16 ஆம் திகதியுடன் இந்த உடன்பாடு உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வருகிறது. அத்துடன் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் இலங்கையிலிருந்து வெளியேறிவிடும். சமாதான முயற்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும். முழு அளவில் பெரும் போர் வெடிக்கும். இதனை நோக்காகக் கொண்டே போர் நிறுத்த உடன்பாட்டை அரசு முடிவுக்கு கொண்டு வந்தது.

இந்த உடன்பாடானது புலிகளையும் பெரிதும் கட்டிப்போட்டிருந்தது. யுத்தமுனைக்கு வெளியில் இடம்பெறும் தாக்குதல்களுக்கும் அவர்களுக்கு பெரும் தடைகளை ஏற்படுத்தியிருந்தது. எனினும், போர் நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வருவதுடன் அவர்களுக்கான கட்டுப்பாடும் நீங்கிவிடும். வடக்கிலேற்படும் அழிவுகளுக்கு தெற்கே காரணமாயிருக்கப் போகின்றதென்பதால் தெற்கிலும் இதன் தாக்கம் கடுமையாக உணரப்படும்.

இந்த உடன்பாட்டிலிருந்து அரசு விலகிவிட்டதால் யுத்தத்தில் அரசு தோல்வியுறுமானால் அவர்களுக்கு மாற்று வழியிருக்கமாட்டது. இதனைப் புலிகளும் நன்குணர்வர். இதனால் புலிகளது நடவடிக்கையும் மிகத் தீவிரமாயிருக்கும். அரசின் இராணுவத் தீர்வை முறியடித்தால் புலிகள் தங்களது தனித்தமிழீழப் பிரகடனத்தைக் கூட வெளியிடும் வாய்பை இந்த அரசு உருவாக்குவதாக அமைந்துவிடும்.

வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் இராணுவ உதவிகளை நம்பியே அரசு வடக்கில் பெரும் போரை ஆரம்பிக்கப் போகிறது. இதனால் வடக்கில் படையினர் மேற்கொள்ளும் ஒவ்வொரு தாக்குதலுக்குமான பதிலடியை புலிகள் வழங்குவரென எதிர்பார்க்கப்படுகிறது. போர் நிறுத்த காலத்தில் புலிகள் பயன்படுத்தாத பல வகை ஆயுதங்களை இனிவரும் சமர்களில் அவர்கள் பயன்படுத்தக்கூடும்.

அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீதான தாக்குதலில் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்து படைத்தரப்பு பெரிதும் ஆச்சரியமடைந்திருந்தது. அதுபோன்று புலிகள் பல்வேறு வகையான நவீனரக ஆயுதங்களை வைத்திருப்பரெனவும் அவர்கள் கருதுகின்றனர். அரசின் நெருக்கடியாலேயே படையினரும் வடக்கே பாரிய படைநகர்வுக்கு தயாராகின்றனர். ஆனாலும் அவர்களுக்கு வடக்கின் களநிலை நன்கு தெரியும்.

வன்னியில் கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக தினமும் பாரிய முன்நகர்வு முயற்சிகளை படையினர் மேற்கொள்ள முயல்கின்ற போதும் அது சாத்தியப்படவில்லை. புலிகள் பாரிய தாக்குதல்களைத் தொடுப்பதைத் தவிர்ப்பதற்காகவும் அவர்கள் மீது சிறுகச் சிறுக தாக்குதல்களை நடத்தி தினமும் அவர்களுக்கு இழப்புகளை ஏற்படுத்தி அவர்களை சலிப்படையவும் விரக்தியடையவும் செய்ய வேண்டுமென்பதற்காகவும் இந்தத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

அதேநேரம் இந்த மோதல்களில் தினமும் படையினருக்கு பலத்த சேதங்கள் ஏற்படுகின்றன. பல படையினர் கொல்லப்படுகின்றனர். பலர் படுகாயமடைகின்றனர். மோதல்கள் தீவிரமடைய இந்த இழப்புக்கள் அதிகரிக்கக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. கனரக ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களை நம்பியே அரசு வடக்குப் போரில் களமிறங்குகிறது. அவற்றுக்கு பாரிய அழிவுகள் ஏற்படுமானால் அது படையினருக்கு பேரிழப்பாகிவிடலாம்.

வடக்கில் அரசு தனது முழுக் கவனத்தையும் திருப்பியிருக்கையில், யுத்தம் அவற்றையெல்லாம் தாண்டி தெற்கு வரை விரிவடைந்துள்ளது. கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் புலிகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தினால் அது அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். வடக்கில் நடைபெறும் போரில் அப்பாவிகள் பெருமளவில் கொல்லப்படும் வாய்ப்புகளிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் தாக்கம் இனிமேல் தென் பகுதியிலும் எதிரொலிக்கலாமென்ற அச்சம் நிலவுகிறது.

கிழக்கிலிருந்து முற்று முழுதாக புலிகளைப் அப்புறப்படுத்திய நிலையில் வடக்கில் தங்கள் முழுப் பலத்தையும் படையினர் பிரயோகித்தால் வடக்கை புலிகளால் தக்க வைக்க முடியுமா? எனப் பலர் கேள்வியெழுப்புகின்றனர். ஆனால் வடக்கில் கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக இடம் பெறும் போரில் படையினர் சாதித்ததென்ன என்ற கேள்வி அதற்கு விடையளிக்கும்.

வடக்கே அரசு தொடுக்கப்போகும் போரானது மனிதப் பேரழிவுகளுக்கு வழிவகுக்கப் போகிறது. மிக மோசமான மனித உரிமை மீறல்களும் இடம் பெறலாமென எச்சரிக்கப்படுகிறது. ஆனாலும் இதனை அரசு பொருட்படுத்துமா என்பது கேள்விக் குறியே. ஏற்கனவே இதுபோன்ற பாரிய குற்றச்சாட்டுக்களையெல்லாம் உதாசீனம் செய்துவிட்ட இந்த அரசு இனிமேலும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் குறித்து கவனத்திலெடுக்காது என்பதே உண்மை.

சர்வதேசம் எங்கிலுமிருந்து மிகப் பெருமளவு ஆயுதங்களை வாங்கிக் குவித்தவாறு அரசு போர்ப் பிரகடனம் செய்துள்ளது. புலிகளுக்கான ஆயுதங்கள் வரும் பாதைகளை அயல்நாடுகளின் உதவியுடன் மூடிவிட்டு உலக நாடுகளின் உதவியுடன் இந்த இறுதியுத்தத்திற்கு அரசு தயாராகி வருகிறது. இதனை எதிர்கொள்ள புலிகளும் தயாராகிவருகின்றனர்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண இந்த அரசு ஒரு போதும் தயாரில்லையென்பதை தனது நடவடிக்கைகள் மூலம் அது காண்பித்து விட்டது. தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய குறைந்த பட்ச தீர்வைக் கூட இந்த அரசால் வழங்க முடியாது. இதனால்தான் சமாதானத்திற்கு வாய்ப்பளிப்பதை விட போர் மூலம் புலிகளைப் பலவீனப்படுத்தி விட்டு ஏதாவது அரைகுறைத்தீர்வை திணித்துவிடவேண்டுமென அரசு முயல்கிறது.

எதிர்வரும் 16 ஆம் திகதியுடன் உடன்பாடு முறிவடைகிறது. அதிலிருந்து அரசு விலகும் போது புலிகளும் அதிலிருந்து விலக வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதன் பின் ஏற்படப் போகும் அழிவுகளுக்கு இந்த அரசே பதில் கூற வேண்டிய நிலைமை ஏற்படும். இதனை தென்பகுதி மக்களும் நன்குணர்வர்.

முன்னைய காலங்களைப் போன்று இந்த யுத்தம் வடக்குடன் மட்டுப்படுத்தப்பட்டிருக்கா�
�ென மக்கள் கருதுவதால் தாங்கள் பேரழிவுகளைச் சந்திக்க நேரிடலாமென நாட்டு மக்கள் அனைவரும் அஞ்சுகின்றனர்.

-விதுரன்-
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..