|
வடக்கு கிழக்கு மாகாணத்தை மீண்டும் இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கக்கோரும் சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு ஜாதிக ஹெல உறுமயவின் உறுப்பினரான வண. கொட்டபொல அமர கீர்த்தி தேரர் கடந்த செவ்வாயன்று முயன்றார். எனினும், அந்த விவகாரம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியால் மட்டுமே கையாளப்படவேண்டிய விடயம் எனக் குறிப்பிட்டு, நாடாளுமன்றத்தில் சட்டப் பிரேரணை கொண்டு வரும் முயற்சிக்குத் தடைபோட்டுவிட்டார் சபாநாயகர்.
1987ஆம் ஆண்டு ஜூலையில் செய்துகொள்ளப் பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழான கடப் பாட்டை உறுதிப்படுத்தும் வகையில், வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கும் வர்த்தமானி அறிவித் தலை 1988ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 8ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா விடுத்தார். இந்த இணைப்பை உறுதிப்படுத்துவது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று கிழக்கில் நடத்தப்பட்டு, இந்த விவகாரம் குறித்து இறுதிமுடிவு எடுக்கப்படும்வரை ஒருவருட காலத்துக்கான தற்காலிக இணைப்பாகவே அது அப்போது செய்யப்பட்டது. எனினும், பதினேழு ஆண்டுகள் கழிந்தும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப் படாத நிலையில் அந்த இணைப்பு நிரந்தரமாகிவிட்டது. இலங்கை அரசுத் தலைமை கொழும்பு நிர்வாகம் வடக்கையும் கிழக்கையும் தனது நிர்வாக ரீதியிலான நோக்கங்களின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளாக வும், இரு மாகாணங்களாகவும் கருதலாம். ஆனால், ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை வடக்கும், கிழக்கும் இரண்டு வெவ்வேறு பிரதேசங்கள் அல்ல. அவை ஐக்கியப்பட்ட தமிழர் தாயகத்தின் ஒரே மாநிலம்தான், தமிழரின் பிரிக்க முடியாத பூர்வீகத் தாயகம் இது. தமிழர் தாயகத்தை முற்றாகக் கபளீகரம் பண்ணி, தனது ஆளுகைக்குட்படுத்தி, தமிழரின் பூர்வீகக் குடிப் பிரதே சத்தை அடிமைப்படுத்தியிருக்கும் தென்னிலங்கைப் பேரினவாதம், தமிழருக்கு அவர்களின் நியாயமான உரிமையான சுயாட்சியைக் கொடுக்க மறுத்து, "ஐக்கிய இலங்கை', "ஒற்றையாட்சி' என்றெல்லாம் தேசிய மட்டத் தில் முழங்குகின்றது. ஆனால், அதேசமயம் அது தமிழர் தாயகமான வடக்கையும் கிழக்கையும் துண்டாடுவதற் காகப் பிரதேச மட்டத்தில் பிரிவினையை வலியுறுத்தி வாதாடுகின்றது. தமிழரின் பூர்வீகத் தாயகத்தைத் துண்டாட வேண்டும், வடக்கையும் கிழக்கையும் பிரிக்கவேண்டும் என்றெல் லாம் தமிழரின் நலனுக்கு விரோதமாகக் குரல் எழுப்பும் பௌத்த, சிங்களப் பேரினவாதிகள், இப்போது ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பின்னால் அணிதிரண்டுள்ளனர். சிறு பான்மையினருக்கு எதிரான பேரினவாதக் குரல் தென்னி லங்கையில் வலுவடைந்துவரும் இந்தச் சூழலில், அத்த கைய போக்குக்கு ஆதரவான சக்திகள் சுலபமாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகளும் அதி கரித்து வருகின்றன. அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் அதாவது, அடுத்த ஆறு வார காலத்தின் பின் புதிதாகப் பதவியேற்கும் ஜனாதிபதி, இவ்விடயத்தில் பெரும்பான்மையினரின் மேலாண்மைப் போக்கு அழுத்தத்துக்கு மசிந்து, வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பான 1988ஆம் ஆண்டின் செப்ரெம் பர் 9ஆம் திகதிய வர்த்தமானி அறிவிப்பை ரத்துச்செய்யும் புதிய உத்தரவை விடுத்தாலும் விடுக்கலாம். அப்படி நேர்ந்தால் அதுவே தற்போதைய யுத்தநிறுத்த ஏற்பாடுகளுக்கு அடிக்கப்படும் சாவு மணியாகிவிடும் என் பது நிச்சயம். மூன்றரை வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட யுத்தநிறுத்த ஏற்பாடுகளும் அவை தொடர்பான புரிந் துணர்வு உடன்படிக்கையும், அமைதி முயற்சிகள் தடைப் பட்டுப் போனதால், ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாகி, பரஸ்பரம் நம்பிக்கை குறைந்து, யுத்தம் எப்போது வெடிக் கும் என்ற ஆபத்து நிலையை நோக்கி நாட்டை நெட்டித் தள் ளிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், தமிழரின் தாயகத்தைத் துண்டு போடும் பெரும்பான்மையினரின் சதித்திட்டம் முன்னெ டுக்கப்பட்டால் யுத்தநிறுத்தம் ஒரேயடியாக நொறுங்கிப் போவது தவிர்க்கமுடியாததாகிப் போய்விடும். தமிழர் தாயகத்தைப் பிரிப்பது பிளப்பது என்பது தமிழர்களின் உரிமையோடு சம்பந்தப்பட்ட அடிப்படை விடயத்தில் கைவைக்கும் வேலையாகும். தமிழர் தரப்பு அதைப் பார்த்துக்கொண்டு வாளாவிருக்கும் என்று யாரும் எதிர்பார்த்தால் அவர்கள் யதார்த்தம் அறியாத புரியாத ஏமாளிகளேயன்றி வேறில்லை. இந்தச் சர்ச்சையை இப்போது கிளப்பி, அதில் குளிர்காய விளையும் மேலாண்மைவாதிகள், இது விபரீதத்தை விலை கொடுத்து வாங்கும் விவகாரம் என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும். uthayan
|