|
எமது தேசம் விடுதலை பெறுகிற போது, தேசத்தோடு சேர்ந்து எமது பெண்களும் விடுதலை பெற்றிருப்பார்கள் - போராளி ஜனனி
அக்டோபர் பத்தாம் திகதி மாலதி, நினைவு நாளும் தமிழீழ பெண்கள் எழுச்சி நாளும் ஆகும். இந்த நாளை நினைவு கொள்ளும் போது ஈழத் தமிழ்ப் பெண்கள் பற்றி பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் நாள் யாழ். கோப்பாய் பகுதியில் இந்தியப் படையுடனான நேரடி மோதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவில் இருந்து முதன் முதலாக வீரச் சாவடைந்த லெப்.மாலதியின் நினைவு நாளே தமிழீழ பெண்கள் எழுச்சி நாளாகும். ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகளின் சாதனைகள் பற்றி ஏராளம் சொல்லலாம். தனியே பல மகளிர் படையணிகள் உள்ளன. முதல் பெண் மாவீரரான மாலதியின் பெயரிலும் மாலதி படையணி என்ற ஒரு படையணி உள்ளது. மகளிர் படையணிகளை வைத்து தனியே படை நகர்த்தி களமாடிய சந்தர்ப்பங்களும் உண்டு. மகளிர் படையணிகளின் தளபதிகள் மன்னகுளத்தில், ஜயசிக்குறு படை நடவடிக்கையில் ஈடுபட்ட படையினரை இலக்கு வைத்து நடத்திய தாக்குதல் பெரும் சாதனையென்பதைக் கூறுவார்கள். கணவனைத் தொழிலுக்கனுப்பிவிட்டு கரையில் கடவுள் வழிபாட்டுடன் கணவன் பத்திரமாக திரும்ப வேண்டுமெனக் காத்திருந்த காலம் போய், இன்று பெண்கள் கடலிலும் சாதனை படைக்கின்றனர். 02-01-1993 அன்று கிளாலி கடல் நீரேரியில் ஐம்பதிற்கும் அதிகமான பொது மக்களை இராணுவம் படுகொலை செய்ததை நேரில் பார்த்து கொதிப்படைந்த பெண் போராளியான கப்டன் அங்கையற்கண்ணி ,தனது உயிரினை ஈகம் செய்து வரலாற்றில் பெரும் திருப்பத்தினை ஏற்படுத்தினார். 07-08-1994 அன்று காங்கேசன் துறை கடற்பரப்பில் கட்டளைக்கப்பலைத் தகர்த்து, முதற் பெண் கடற் கரும்புலியாகி வரலாற்றுப் பதிவாகினார். வீட்டிலேயே முடங்கி, அடுப்படியிலே அடங்கிக் கிடந்த பெண்களா பெரும் சாதனை படைக்கின்றனர்? என இன்றும் என்றும் போற்றிப் புகழக் கூடியதாக ஈழப்பெண்களிடையே விடுதலைப் போராட்டம், பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. போர்ப் பயிற்சியெடுத்து தனியே களத்தில் நின்றது மட்டுமல்ல.... மருத்துவ, சட்டத்துறை, அரசியல், இலக்கியம், பட்டப்படிப்பு எனப் பல பிரிவுகளிலும் பெண்களின் பங்களிப்பு பரந்து விரிந்து செயற்படுவதைக் காண முடிகின்றது. இந்த இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கூறிய ஒரு சிந்தனைக் கருத்தையும் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். காலம் காலமாகத் தூங்கிக் கிடந்த பெண்ணினம் இன்று விழிப்படைந்து எமது போராட்டத்தின் ஒரு புரட்சிகர சக்தியாக எழுச்சி கொண்டு நிற்கின்றது. வீரத்திலும் தியாகத்திலும் விடுதலை உணர்விலும் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்களில்லை என்பதனை எமது பெண் போராளிகள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். இப்படியான கருத்துகளுடன் பேரெழுச்சி கொண்டுள்ள ஈழப் பெண்களின் உருவாக்கம், உலகத் தமிழ்ப் பெண்களிடம் மட்டுமல்லாமல்- உலகப் பெண்களிடமும் நம்பிக்கையொன்றை நிச்சயமாக ஏற்படுத்தியிருக்கும் அல்லது ஏற்படுத்தக் கூடும் எனச் சொல்லலாம். உலகின் பல விடுதலைப் போராட்டங்களில் இருந்த பெண் போராளிகளின் பங்களிப்பு, ஈழப் பெண் போராளிகளைப் போன்ற கட்டுப்பாட்டுடனும் கட்டுக்கோப்புடனும் தலை நிமிர்ந்து நின்றதெனக் கூற முடியாது. ஈழப் பெண்களிடம் இவ்வளவு ஆற்றல் வருவதற்குக் காரணம், ஸ்ரீலங்கா அரசும் அதன் படையும் எமது சமூகத்தில் இருந்து வந்த, வருகின்ற பிற்போக்குத் தனமான கருத்துகளுமே என்பதனையும் பல சிந்தனையாளர்கள் எடுத்துக் கூறுகின்றனர். தமிழர் வரலாற்றிலேயே இல்லாத புரட்சி இதுவெனக் கூறலாம். ஆனாலும் ஈழப் பெண்களை நோக்கிய ஒடுக்கு முறையென்பது கோரமானதாகவே இருந்து வந்தது. இதனைச் சிலர் இன்றும் ஏற்றுக் கொள்கிறார்களில்லை என்பது அந்தச் சிலரின் வறட்டுத் தனமான கௌரவத்தையே காட்டுகின்றது. பெண் உடல் ரீதியாக ஆணிலிருந்து வேறுபடுகின்றதை வைத்துக் கொண்டு, தீர்மானிக்கும் சக்தி ஆணுக்கு என்று நினைப்பதனால் தான் வறட்டுக் கௌரவம் பார்க்கின்றனர். குழந்தையைப் பெற்றெடுக்கவும், பாலூட்டவும், கணவர், ஏனைய உறவுகள்... குடும்பமென்று வீட்டுப் பணிசெய்து கிடக்கவும், வீடே உலகென்று பெண் இருந்து விட வேண்டும். அவள் இத்தனையையும் செய்யும் உடல் வலிமையுடையவளாயிருப்பாள்... குடத்தில் நீர் சுமப்பாள், அம்மியில் குளவியிழுத்து அரைப்பாள், நெருப்புக் குழித்து சமைத்துப் போடுவாள். இவைபோன்றவற்றைப் பாராது வேண்டும் வேலைகளையெல்லாம் வேண்டிய பின்னர், மானே, தேனே, மயிலே, குயிலே... என மென்மையானவளாக்கிடுவர். வீட்டிலிருந்து பெண்கள் வெளியே போகக் கூடாது என்பதற்கான எழுதப்படாத பல சட்டக் கோவைகளை வீடுகளில் வைத்திருப்பார்கள். அதன் படி பெண்ணின் கற்பு பற்றி எடுத்துரைப்பார்கள். இந்த இடத்தில்தான் ஒரு முக்கியமான விடயத்தைப் பார்க்காது தவறு விடுகின்றோம். பெண்கள் வெளியில் போனால் கேலி செய்வது யார்? அவளை பாலியல் ரீதியிலான உடல் சேட்டை புரிபவர் யார்? வன்புணர்ச்சி புரிபவர் யார்? செய்வது ஆண். குற்றம் புரிபவர் உலகே வீடெனத் திரிய பெண்கள் முடங்கிக்கிடக்க வேண்டுமா? எமது தேசத்தில் இன்னும் முடிவடையாத ஒரு கொடுமையான செயல் திருமண வியாபாரம். அதற்குப் பெண்ணுக்கு சீதனம் கொடுப்பதென்ற நாகரிகமான பெயரொன்றும் உள்ளது. ( இதற்கு பெண்களும் காரணமாக இருப்பது என்ற உண்மையினையும் இந்த இடத்தில் நினைவு படுத்த விரும்புகிறேன்.) குழந்தைகளாக இருக்கும் போது, விளையாட்டுப் பொருள் பெற்றுக் கொடுப்பதில் இருந்து ஆரம்பமாகும் பெண்கள் மீதான பாகுபாடு, இது இன்று வரை முடிவில்லாத தொடர் கதையாகவே உள்ளது. இது பற்றி மூத்த பெண் போராளிகளுடனான பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் மூத்த பெண் போராளியான ஜனனியிடம் கேட்ட போது, நாங்கள் மாத்திரம் செய்து சமூகத்தில் பெண்களிடம் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பிற்குப் பின் பெண்களிடம் விழிப்புணர்வொன்று ஏற்பட்டுள்ளது. எமது தேசம் விடுதலை பெறுகின்ற போது, நிச்சயமாக பெண் விடுதலை பெற்றிருப்பாள். சமூகத்தில் அதனை நாம் காண்போமென்றார். விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் ஆரம்ப காலத்தில் ஈடுபடுகின்ற போது கூட, சமூகத்திற்குள்ளிருந்து சிறு நெருடலொன்று வந்தது. ஆனால்... பெண் போராளிகளின் மனவலிமை அவர்களின் சாதனையொன்றினால் சமூகம் விழி விரித்து ஆச்சரியமாக நோக்கியதே தவிர, வேறெதுவும் செய்யவில்லை. மனிதர் என்பதற்குள் ஆணும் பெண்ணும் அடக்கம். ஆண் - பெண் என்ற பேதமின்றி, சரிநிகர் சமானமாக வாழ வைப்பதற்கு ஈழ விடுதலைப் போராட்டம் நிச்சயம் வழியமைக்கும் என்றார். ஈழவிடுதலையென்பதில் தனித்து மண்விடுவிப்பு மாத்திரமன்றி, அனைத்து ஒடுக்கு முறைக்குள்ளிருந்தும் விடுதலை, பெண் விடுதலை என்பனவும் அடங்கும். தமிழீழப் பெண்களின் வீரம்மிக்க எழுச்சியின் வரலாற்றுப் பதிவு தான் மாலதியின் நினைவு நாளும், தமிழீழபெண்கள் எழுச்சி நாளும் ஆகும். இந்த நாளில் பண்டைய வரலாற்றினையும் அதன் தொடர்ச்சிகளையும் புதிய வரலாற்றுப் பதிவினையும், தொடரப் போகும் புதிய சிந்தனைகளையும் போராட்டம் மூலமாகவே பெற்றுக் கொள்ள முடியும். இதில் நோயிருந்தால் அதற்கு மருந்திட்டு புதிய வரலாற்றினைப் பெற்று சமமாக வாழ்வோம். அதில் உயர்வென்பதை அடைவதும் ஆரோக்கியம், தாழ்வென்பதை தவிர்ப்பதும் ஆரோக்கியம்.
கனகரவி
|