|
இராணுவ வன்முறையாளர் சரத் பொன்சேகாவிடம் சில கேள்விகள் |
|
|
|
Wednesday, 07 May 2008 |
|
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கின்றோம் என்று சிறிலங்காவின் தரைப் படைத்தளபதி சரத் பொன்சேகா மார் தட்டிக்கொண்டு மறுபக்கம் வெளிநாடுகளுக்கு உதவிக்கு ஓடுகின்றார்.
பாகிஸ்தானுக்கு போர்க்கலக் கொள்வனவுக்கு சரத் பொன்சேகா ஓடுகின்றார்.
முகமாலைக் களமுனையில் பெரும் இழப்புக்களை படையினர் சந்தித்துள்ள போதிலும் அவ்வாறு இல்லை என்று சரத் பொன்சேகா மறுக்கின்றார்.
அவர் அண்மையில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் வெளியிட்ட பொய்களைப் பார்த்தால் சிறிலங்காவின் படைகள் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளன என்பதனை உணரலாம்.
முகமாலையில் படையினரின் முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படையினருக்கு பெரும் அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன.
சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதல் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.
ஆனால் சரத் பொன்சேகா முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் இந்தத் தாக்குதல் திட்டம் தொடர்பாக தமக்கு ஏற்கனவே தெரிய வந்திருந்ததாகவும் அதற்கு முகம் கொடுப்பதற்கு தாம் ஆயத்தமாக இருந்ததாகவும் தாக்குதல் நிகழ்ந்த அன்று அதிகாலை 2:30 அளவில் விடுதலைப் புலிகள் பாதுகாப்பு முன்னரங்குகளை நோக்கி கடுமையான மோட்டார் மற்றும் ஆட்டிலறித் தாக்குதல்களை மேற்கொண்டனர் என்றும் கதையை சரத் பொன்சேகா புரட்டிப்போட்டு விட்டார்.
அதனை தாம் வெற்றிகரமாக முறியடித்ததாக அவர் பொய் உரைக்கின்றார்.
உண்மையில் விடுதலைப் புலிகள்தான் படை முன்நகர்வை முறியடித்தனர்.
மேலும் படையினரின் இழப்பு 200ஐ தாண்டியிருக்கின்றது.
ஆனால் படை இழப்பையும் மறைத்து விடுதலைப் புலிகளின் இழப்பு என்று பெரும் எண்ணிக்கையையும் வெளியிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளை ஒழிக்கும் காலக்கெடு என்று ஒன்றை அவர் அடிக்கடி வெளியிட்டு அது பொய்யாகி வர அவர் இன்னும் அதிகம் பொய்யறிக்கையை வெளியிடுகின்ற நிலை காணப்படுகின்றது.
இந்தத் தாக்குதலில் சிறிலங்காப் படையினரின் உளவுரண் எந்த வகையிலும் வீழ்ச்சி அடையவில்லை என்றும் தமது சக்தி பலவீனமானதல்ல. 1,67,000 படையினரை வைத்திருக்கும் தமக்கு, எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு, இது ஒரு தடையல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படை எண்ணிக்கையைக் கொண்டு சரத் பொன்சேகா மிரட்டல் விடுக்கின்றார்.
படை எண்ணிக்கை என்பது சிறிலங்காவுக்குப் புதியதல்ல. இந்த எண்ணிக்கை முன்னரும் இருந்ததுதான்.
ஆனால் கடந்த காலங்களில் இந்த எண்ணிக்கைப் படையினரால் ஏன் வெல்ல முடியவில்லை. படுதோல்விகளை ஏன் அனுபவிக்க வேண்டி வந்தது என்பதும் கேள்விகளாகும்.
யாழ்ப்பாணத்தில் 34,000 படையினர் இருக்கின்றனராம். இது புதிய எண்ணிக்கை அல்ல.
இது ஆனையிறவை இழந்து முகமாலைக்கு 2000 ஆம் ஆண்டில் படையினர் பின்வாங்கி ஓடியபோதும் இருந்த எண்ணிக்கைதான்.
அப்போது யாழ்ப்பாணத்தை விட்டு பின்வாங்கி ஓட இந்தியாவிடம் கப்பல் கேட்டதும் இதே சிறிலங்காப் படைதான்.
இப்போது சொல்லும் யாழ்ப்பாணத்தின் 34,000 படையினரும் அவர்களில் வலிந்த தாக்குதலுக்குள்ளான 53 ஆம், 55 ஆம் டிவிசன்களும் அன்றும் இன்றும் அங்குதான் உள்ளன.
2001 தீச்சுவாலை-
2006 ஒக்ரோபர் 11-
2008 ஏப்ரல் 23 என்று முகமாலையின் 3 பாரிய முன்நகர்வுகளும் இந்த டிவிசன்களால்தான் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் அவைதான் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன.
இதே 34,000 படையினரின் நடவடிக்கைகள்தான் அவை.
இதற்குமேல் அவர்களால் என்ன செய்ய முடியும் என்ற கேள்விதான் எழுப்பப்படுகின்றது.
கடைசி முகாமலைத் தாக்குதல்களில் 53 ஆம் 55 ஆம் டிவிசன்களின் 5 பற்றாலியன்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டன.
முன்னைய மோதல்களுடன் ஒப்பிடுகையில் இந்த மோதலில் காயமடைந்தவர்கள் குறைவாகும் என்கிறார் சரத்.
தனது மூளையில் உதித்த மக் இலகு காலாட் படை என்று முழங்கித் தள்ளியவரும் சரத் பொன்சேகாதான்.
ஆனால் அப்படியான ஒன்றும் இருந்தும் அவர்களால் எதனையும் இதுவரை சாதிக்கவில்லை.
முகமாலை இழப்புக்கள் குறித்து மூடி மறைக்கும் சரத் பொன்சேகா புலிகளை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது.
இந்த மோதலுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் போர்க்கலங்கள் பற்றிய விபரங்கள் தம்மிடம் இருந்தன எனவும் இந்த மோதலில் புலிகள் பயன்படுத்துவார்கள் என எண்ணிய ஆட்டிலறி எதிர்ப்பு உட்பட அவர்களின் முழுமையான போர்க்கலங்கள் பற்றிய அறிக்கை தன்னிடம் இருந்தது எனவும் அதனால் தாம் புலிகளின் தாக்குதலுக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்ததாகவும் சொல்கின்றார்.
அவரின் கூற்றில் உள்ள உண்மையை காலமே உணர்த்தியுள்ளது.
விடுதலைப் புலிகளை வென்றதாக முழங்கிக் கொள்ளும் சரத் பொன்சேகா ஏன் வெளிநாடுகளுக்கு உதவி கோரிப் பறக்கின்றார் என்பது பெரும் கேள்வி.
தாம் வெல்வது என்றால் ஏன் இழப்புக்களை மூடிமறைக்க வேண்டும்.
அல்லது ஏன் படைத்தரப்பு போர் பற்றி பொய்யான முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட வேண்டும்.
இக்கேள்விகள் சிறிலங்காப் படைத்தரப்பின் பின்னடைவுகளை வெளிப்படுத்தும் உண்மைகளாகும்.
கடந்த வாரம் சிறிலங்காவின் பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாஸ், முகமாலைக் களத்தின் உண்மைகளை அம்பலப்படுத்தினார்.
அவரை மீண்டும் துரோகி என்று சிறிலங்காப் படைத்துறை தனது இணையத்தளத்தில் பிரகடனப்படுத்தியுள்ளது.
முகமாலையில் தீச்சுவாலை வெற்றியைப் பார்க்க வேண்டும் என்று கூறிய அத்தாஸ், 2001 ஆம் ஆண்டில் பலாலியில் கொண்டு சென்று நிறுத்தப்பட்டார்.
கடைசியில் படையினர் எப்படி மோசமாக தோற்றனர் என்பதனைத்தான் இக்பால் அத்தாஸ் எழுதினார்.
இப்போது முகமாலையில் படைத்தரப்புக்கு ஏற்பட்ட தோல்வியின் மோசத்தை இக்பால் அத்தாஸ் அம்பலப்படுத்தியுள்ள நிலையில் அதனை ஏற்க முடியாத படைத்துறை அதனைப் பொய் என்று முத்திரை குத்தி கண்டனம் செய்துள்ளது.
இது அவர்களின் தோல்வியின் வெளிப்பாடுதான் அன்றே வேறு ஒன்றுமில்லை என்பதுதான் உண்மை.
நெருடல் இணையம்
|