|
வவுனியாவில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவினால் பொதுமக்கள் இருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா செக்கடிப்பிலவு என்ற இடத்தில் இன்று வியாழக்கிழமை காலை சின்னத்தம்பி பாஸ்கரன் (வயது 63) என்ற வர்த்தகர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.
முச்சக்கர வாகனம் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத சிலர் இப்படுகொலையைச் செய்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் நீதிபதி எம்.இளஞ்செழியனிடம் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் விசாரணைகளை நடத்திய நீதிபதி, சடலத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும் துணைப்படைக் குழுவினால் சிறி என்பவரும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே வவுனியாவில் நேற்று முன்நாள் புளொட் உறுப்பினர் பவான் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது.
புளொட் பவான் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் துணைப்படைக் குழுவான ஈ.பி.டி.பி.யினரும் சிறிலங்காப் படையினரும் உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
பவானை சுட்டுக்கொலை செய்துவிட்டு அவர்கள் சென்ற முச்சக்கர வாகனம் விபத்துக்குள்ளான போது அதில் இருந்த ஈ.பி.டி.பி. துணைப்படைக்குழுவினரை பூந்தோட்டம் பகுதி மக்கள் அடையாளம் கண்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
நெருடல் இணையம்
|