|
திருகோணமலையில் எதிரிக்குப் பேரிடியாக கொடுக்கப்பட்ட அடியாகத்தான் கப்பல் தகர்ப்பு அமைந்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அக்கராயன் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற வீரமுரசு நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கொடுங்கோண்மை சிறிலங்கா அரசை எதிர்த்து நிற்பதற்கான வலிமையான மனங்களைக் கொண்டவர்களாக துன்பத்தின் பிடியில் இருக்கின்ற போதும், விடுதலைக்கு உயரிய பங்களிப்பைச் செய்யும் மக்களாக நீங்கள் காணப்படுகின்றீர்கள்.
தமிழன் தன் தலையை நிமிர்த்துகின்ற இன்னுமொரு வரலாற்று நாளாக இன்றைய நாளில் நாம் கூடி நிற்கின்றோம்.
ஆறு வருடங்களுக்கு முன்பு அக்கராயன் மண்ணில் எமது வீரத்தளபதிகளில் ஒருவரான கங்கை அமரன் தாய் மண்ணுக்காக உயிரைக் கொடுத்தார்.
அதே வீரப்புதல்வனின் பெயரில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் கட்டி எழுப்பப்பட்ட நீரடி நீச்சல் பிரிவு, எதிரியின் மிகப்பலமான கோட்டையான திருகோணமலைத் துறைமுகத்தில் பலமான தாக்குதலை நடத்தி படைக்கல விநியோகக் கப்பலை மூழ்கடித்துள்ளது.
அன்று தலைகுனிந்த தமிழினத்தை தலைநிமிர வைத்த தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் காலத்தில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
எதிரிப்படையினை ஒன்றாகக் குவித்து முப்படையையும் வைத்திருக்கின்ற திருகோணமலையில் எதிரிக்குப் பேரிடியாக கொடுக்கப்பட்ட அடியாகத்தான் கப்பல் தகர்ப்பு அமைந்துள்ளது என்றார் அவர்.
அக்கராயன் கோட்ட வீரமுரசு நிகழ்வு நேற்று இரவு வன்னேரிக்குளம் சிறப்பு வேலைத்திட்டப் பொறுப்பாளர் சு.ஜெகன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கத்தில் பொதுச்சுடரினை படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் ஏற்றினார்.
2 ஆம் லெப். கலையமுதனின் திருவுருவப் படத்திற்கு தாயார் சுடர் ஏற்றி மலர்மாலை சூட்டினார்.
2 ஆம் லெப். தேனலையின் திருவுருவப் படத்திற்கு உடன்பிறப்பு சுடர் ஏற்றி மலர்மாலை சூட்டினார்.
தமிழீழத் தேசியத் துணைப்படை வீரர் உதயகுமாரின் திருவுருவப் படத்திற்கு துணைவியார் சுடர் ஏற்றி மலர் மாலை சூட்டினார்.
சிறப்புரையினை இராசையா இளந்திரையன் நிகழ்த்தினார்.
தமிழீழ நிர்வாக சேவையின் "செந்தமிழ்" இசைக்கலைஞர்களின் இசை நிகழ்வு, பொன்னாலையூர் கண்ணதாசனின் "பொய்முகம்" நாடகம் ஆகியன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.
நெருடல் இணையம்
|