|
கிழக்கு மாகாணசபைத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் பிள்ளையானுக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் முதலமைச்சர் நிலைக்கான போட்டி ஏற்பட்டுள்ளது.
தகவல்களின்படி மாகாணசபைக்கு தெரிவாகவுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்களை மையமாக்கொண்டே முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்ததன்படி தேர்தலில் யார் அதிக வாக்குகளை பெறுகிறாரோ அவருக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் கிழக்கு மாகாணசபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பாக எட்டு முஸ்லிம்களும் 6 தமிழர்களும் 4 சிங்களவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பேச்சாளர் அசாத் மௌலானா இது தொடர்பில் தெரிவிக்கும் போது பிள்ளையானுக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக தமிழர்கள் மத்தியில் இருந்து 75 ஆயிரம் வாக்குகளை பெற்றுக்கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கிழக்கில் கடந்த பல காலங்களாக பாதிக்கப்பட்டு வந்துள்ளனர் இந்தநிலையில் பிள்ளையானுக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இன்று இந்த பதவிக்குறித்த தகவல் வெளியாகும் தாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் இனியபாரதி இது குறித்த தெரிவிக்கையில் முதலமைச்சர் பதவி தொடர்பாக முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமையை ஏற்றுக்கொண்டார்.
இதில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் போட்டியிட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் வேட்பாளர்கள் தமது விருப்பத்தெரிவு வாக்குகள் மீண்டும் எண்ணப்படவேண்டும் என கோரியுள்ளனர்.
இந்தநிலையில் மாகாணசபைத்தேர்தலில் அதிகப்படியான மற்றும் அதிகப்படியான உறுப்பினர்களை நம்பிக்கையை வென்றவரே முதலமைச்சராக பதவியில் அமர்த்தப்படுவார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நெருடல் இணையம்
|