|
ஈபிடிபி கட்சியின் மகேஸ்வரி வேலாயுதம் சுட்டுக்கொலை |
|
|
|
Tuesday, 13 May 2008 |
|
அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவின் ஆலோசகரான மகேஸ்வரி வேலாயுதம் இன்று இரவு 7 மணியளவில் யாழ்ப்பாணம் நெல்லியடியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கரவெட்டி கீரைப்பள்ளி பகுதியில் உள்ள தமது வீட்டுக்கு மகேஸ்வரி சென்றிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவருடைய வீடு படையினரின் நவிண்டில் இராணுவ முகாமின் எல்லையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
தனது சொந்த இடமான நவிண்டில் பகுதியில் தாயாரைப் பார்வையிடச் சென்றிருந்த போது உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் சுடப்பட்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவரது உயிர் பிரிந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் ஆசிரியையாகக் கடமையாற்றிய இவர், 1984 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினார். பின்னர் தமிழகம் சென்ற இவர், அங்கு மதுரையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தில் பணிபுரிந்தார்.
இக்காலப்பகுதியில் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஏற்பட்ட தொடர்புகளையடுத்து ஈபிடிபி கட்சியில் இணைந்து கொண்டார்.
ஈபிடிபி கட்சியின் முக்கிய பொறுப்புக்கள் பலவற்றையும் வகித்த இவர், 1998 ஆம் ஆண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் களுத்துறைச் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த வேளையில் கைதிகளால் டக்ளஸ் தேவானாந்தா தாக்கப்பட்ட போது இவரும் தாக்கப்பட்டார்.
இக்கொலை முயற்சியிலிருந்து அப்போது அவர் மயிரழையில் உயிர் தப்பியிருந்தார்.
இராணுவ உடையில் வந்த புலிகளே மகேஸ்வரியை சுட்டுக்கொன்றனர் - டக்ளஸ்
தமது ஆலோசகர் மகேஸ்வரி வேலாயுதத்தை நெல்லியடியில் இராணுவ சீருடையில் வந்த தமிழீழ விடுதலைப்புலிகளே கொலை செய்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா குற்றம் சுமத்தியுள்ளார்.
அதியுயர் பாதுகாப்பு வலயமான நவிண்டில் பிரதேசத்தில் அமைந்துள்ள மகேஸ்வரி வேலாயுதத்தின் வீட்டில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத்தெரிவித்த அவர் இந்தப்பகுதியில் வேறு எவரும் பிரவேசிக்க வாய்ப்பு இல்லை என குறிப்பிட்டார்.
மகேஸ்வரி வேலாயுதத்தின் பாதுகாப்பு குறித்து கேட்டபோது தமது வீட்டுக்கு செல்வதன் காரணமாக அவர் பாதுகாப்பை தவிர்த்திருக்கலாம் என அமைச்சர் தெரிவித்தார்
நெருடல் இணையம்
|