|
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் இனி போர் நிறுத்த ஒப்பந்தமே செய்து கொள்ளாது என்று சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அந்நாட்டு மக்களிடத்தில் தெரிவித்துள்ள நிலையில் அனைத்துலக அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசுவதில் சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று அதே நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒக்ஸ்போர்ட் யூனியனில் மகிந்த ராஜபக்ச நேற்று செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் ஏனைய நாடுகள் கைக்கொண்ட, கையாண்டு வருகின்ற அதே ஜனநாயக வழிமுறைகளையே நாமும் தேர்ந்தெடுத்திருக்கின்றோம்.
எவ்வாறாயினும் விடுதலைப் புலிகளைத் தோல்வியடையச் செய்வதற்கு உலகின் ஆதரவும் தேவைப்படுகின்றது.
புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் நாம் தோல்வியடைவோமானால் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் உலகம் தோல்வியடைந்து விடும்.
எமது நாட்டின் அபிவிருத்தியும் முன்னேற்றமும் பல்வேறு தடைகளைக் கொண்டிருக்கின்றது.
அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற வகையில் நாம் பெரும் இழப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றது.
எமது படையினர் அப்பாவி மக்களுக்கு தொல்லைகளைக் கொடுக்கவோ அல்லது சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கோ செல்லவில்லை.
புலிகளை வெற்றிகொள்ள முடியாது எனப் பலர் குறிப்பிட்டாலும் அவர்களின் பயங்கரவாதத்திலிருந்து நாம் கிழக்கு மாகாணத்தை விடுவித்துள்ளோம்.
கடந்த வாரம் கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தலை நாம் நீதியாகவும் நேர்மையாகவும் நடத்தியுள்ளோம்.
இதில் பல அரசியல் கட்சிகளும் போட்டியிட்டன.
புலிகளைத் தோல்வியடையச் செய்து நிராயுதபாணிகளாக ஆக்குவதற்கு எமது படையினர் முயற்சித்து வருகின்றனர்.
அதேநேரத்தில் இலங்கையில் உள்ள நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வை வழங்கவும் நாம் உறுதியாக உள்ளோம்.
இராணுவத் தீர்வில் நான் நம்பிக்கை கொண்டவன் அல்ல. உண்மையான அரசியல் தீர்வுக்கான அவர்களின் நோக்கம், ஆயுதங்களைக் கைவிடுவதற்கான தயார்நிலை என்பன குறித்து உறுதியளிக்கும் போது நாம் அவர்களுடன் பேசத் தயாராகவே உள்ளோம் என்றார் மகிந்த ராஜபக்ச.
நெருடல் இணையம்
|