|
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக துணை இராணுவக் குழுவின் தலைவரான பிள்ளையான் நியமிக்கப்பட்டதனை முறியடிக்கும் முயற்சியில் முஸ்லிம் அமைச்சர்கள் தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் இந்த முடிவை எதிர்ப்பதற்கு பல முஸ்லிம் அமைச்சர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்த பதவியேற்பு நிகழ்வினை புறக்கணித்த முஸ்லிம் அமைச்சர்களான ரிசாட் பதியுதீன், அமீர் அலி, அப்துல் மஜூட் பேன்றவர்கள் தமது அமைச்சுப் பதவிகளை துறந்து நாடாளுமன்றத்தில் தனித்து இயங்க முயற்சித்து வருகின்றனர்.
எம்மை அரச தலைவர் முற்றாக புறம் தள்ளி உள்ளார். எனவே அரசிற்கான எமது ஆதரவு தொடர்பாக மீள் பரிசீலனை செய்ய உள்ளோம் என்று ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
எமது முடிவை நாம் எதிர்வரும் நாட்களில் அறிவிப்போம். மகிந்த ராஜபக்ச எம்மை மட்டும் புறம் தள்ளவில்லை. முழு முஸ்லிம் சமூகத்தையும் புறம் தள்ளியுள்ளார். அவர் தனது செல்லை காப்பாற்றுவது கிடையாது. எமக்கு போலியான உறுதிமொழிகளை மகிந்த அளித்துள்ளார். எனவே தான் நாம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வினை புறக்கணித்தோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்சவின் முடிவால் ஆத்திரமடைந்த முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டத்தினை நேற்று சனிக்கிழமை கூட்டிய போதும் அமைச்சர் பேரியல் அஸ்ரப் வெளிநாட்டில் இருந்து வரும் வரையில் தமது எதிர்கால நடவடிக்கைக்காக காத்திருக்கின்றனர்.
இதனிடையே எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு தரும் மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை நேற்று நான்காக உயர்ந்தள்ளதாகவும், மற்றுமொரு உறுப்பினரை சேர்த்துக் கொள்வதற்கான பேச்சுக்கள் நடைபெற்று வருவதாகவும் என்று எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
நெருடல் இணையம்
|