|
மாகாணசபைத் தேர்தல் முடிவடைந்ததும் மீண்டும் மூதூரில் மீன்பிடித் தடை அமுல் |
|
|
|
Sunday, 18 May 2008 |
|
மாகாணசபைத் தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன்னர் மூதூர் கடற்பிராந்தியத்தில் மீன் பிடிப்பதற்கான தடை தளர்த்தப்பட்டிருந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடனேயே மீண்டும் அந்த கடற்பிரதேசத்தில் மீன்பிடித் தடை அமுலுக்குவந்துள்ளதாக மூதூர் பிரதேச மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இம்மாதம் 11ஆம் திகதி முதல் தாம் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். மேலிடத்திலிருந்து தமக்குக் கிடைத்த உத்தரவிற்கமைய மீன்பிடிக்கச் செல்வதற்கான அனுமதியினை வழங்கமுடியாதுள்ளது என கடற்படை அதிகாரிகள் தம்மிடம் தெரிவித்ததாக மூதூர் பிரதேச மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தடை மீண்டும் அமுலுக்கு வந்துள்ளதன் காரணமாக சுமார் 2,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, மூதூர் பிரதேசத்தில் மீன்பிடிப்பதற்கு எந்தவித தடைகளும் இல்லை எனவும், ஆனால் துறைமுகப் பகுதிகளுக்கே யாரும் அனுமதிக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நெருடல் இணையம்
|