|
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவில் அங்கத்துவம் பெறுவதற்கான வாக்கெடுப்பு நியூயோர்க்கில் இன்று புதன்கிழமை நடைபெற்றபோது, சில வாக்குகள் வித்தியாசத்தில், சிறீலங்கா தனது அங்கத்துவத்தை இழந்தது.
கொழும்பில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மகிந்த சமரசிங்க இது தொடர்பாக கருத்து வெளியிட்டபோது, சிறீலங்காவிற்கு அங்கத்துவம் கிடைக்குமென்று நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
தெற்காசிய நாடுகளுக்கான நான்கு அங்கத்துவ ஆசனங்களுக்கு, ஆறு நாடுகள் போட்டியிட்டன. சிறீலங்காவுக்கு 101 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும், அதைவிட சற்று அதிகம் வாக்குகளைப் பெற்ற ஏனைய நாடுகள் இதற்குத் தெரிவாகின. சிறீலங்காவும் கிழக்குத் தீமோரும் தோல்வியைத் தழுவின.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவில் அங்கத்துவம் வகிக்கக்கூடிய 47 அங்கத்துவ நாடுகளில், நான்கு தெற்காசிய ஆசனங்களுக்காக நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில், ஜப்பான் 155, பாஹ்ரெய்ன் 142, தென்கொரியா 139, பாக்கிஸ்தான் 114, சிறீலங்கா 101, கிழக்கு தீமோர் 92 என்ற வகையில் வாக்குகளைப் பெற்றன.
சிறிலங்கா, பாகிஸ்தான், ஜப்பான், தென்கொரியா, கிழக்குத் தீமோர், பஹ்ரெய்ன் ஆகியவற்றில் பஹ்ரெய்னும் கிழக்குத் திமோரும் முதல் தடவையாக மனித உரிமைகள் சபைக்கான தேர்தலில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
நெருடல் இணையம்
|