|
சோதியா படையணியின் துணைத்தளபதி லெப்.கேணல் செல்வியின் வீரவணக்க நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவரின் துணைவியார் மதிவதனி பங்கேற்று வித்துடலுக்கு மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.
சோதியா படையணியின் துணைத்தளபதியான லெப். கேணல் செல்வியின் வீரவணக்க நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் மகளிர் போர்ப் பயிற்சி ஆசிரியரும் துணைப் பொறுப்பாளருமான சஞ்சனா நிகழ்த்திய வீரவணக்க உரையில் தெரிவித்துள்ளதாவது:
1995 இல் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்ட லெப்.கேணல் செல்வி, ஆரம்ப காலத்தில் போர்ப் பயிற்சி ஆசிரியராக செயற்பட்டார்.

வீரச்சாவடைந்த லெப். கேணல் செல்வி
சோதியா படையணியின் தொடக்க காலத்தில் அதனுள் உள்நுழைந்த லெப்.கேணல் செல்வி, சோதியா படையணியின் நிர்வாகப் பொறூப்பாளராக நீண்டகாலம் செயற்பட்டு மக்களினதும் போராளிகளினதும் உள்ளங்களில் இடம் பிடித்தார்.
இதன் பின்னர் சோதியா படையணியின் தாக்குதல் அணி ஒன்றிற்கு பொறுப்பாக செயற்பட்ட இவர், 2000 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வரலாற்று முதன்மை வாய்ந்த குடாரப்பு தரையிறக்கம் மற்றும் இத்தாவில் ஊடறுப்பு பெட்டிச் சண்டையில் வீரதீரத்துடன் செயற்பட்டார்.
அங்கு 34 நாட்கள் எதிரியை எதிர்த்து நின்று போராடி டாங்கிகளை அழித்து அவர் வீரசாதனை படைத்தார். இதன் பின்னர் சோதியா படையணியின் துணைத்தளபதியாக செயற்பட்டார்.

களத்தில் தாக்குதல் தளபதியாக செயற்படும் அதே நேரங்களில் படையணிகளின் நிகழ்வுகளிலும் புலிகளின் குரல் வானொலியிலும், தமிழீழ தேசியத் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகள் மற்றும் படைப்புக்களை செய்து கலைஞராக செயற்பட்டார்.
சோதியா படையணியின் உருவாக்கத்தின் வெளியீடான "விழி நிமிர்த்திய வீரம்" குறுவெட்டில் நான்கு பாடல்களை எழுதி கலை ஆர்வம் மிக்க போராளியாக செயற்பட்டார்.
களத்தில் எதிரிக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தி சோதியா படையணியின் வீரத்தை லெப். கேணல் செல்வி புகட்டினார் என்றார் அவர்.

தமிழீழ அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் தமிழினி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பொதுச்சுடரினை சோதியா படையணி சிறப்பு தளபதி கேணல் துர்க்கா ஏற்ற, ஈகைச்சுடரேற்றி மலர்மாலையை உறவினர்கள் சூட்டினர்.
இதனைத் தொடர்ந்து புலிகளின் தளபதிகள் லெப். கேணல் செல்வியின் வித்துடலுக்கு மலர்மாலை சூட்டினர்.
இந்நிகழ்வில்
சோதியா படையணி சிறப்புத் தளபதி கேணல் துர்க்கா
மாலதி படையணி சிறப்புத் தளபதி யாழினி (விதுசா)
வடபோர் முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபன்
சோதியா படையணி நிர்வாகப் பொறுப்பாளர் ஜானகி
சோதியா படையணி துணைத் தளபதி வரதா
சோதியா படையணி பொறுப்பாளர்களில் ஒருவரான கெங்கா
சாள்ஸ் அன்ரனி துணைத்தளபதி அமுதாப்
தமிழீழ அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன்
ஆகியோர் கலந்து கொண்டு மலர்மாலை சூட்டினர்.

நெடுந்தீவு பொது அமைப்புக்களின் தலைவர் கணேசலிங்கமும் அவரைத் தொடர்ந்து உறவினர்களும் லெப். கேணல் செல்வியின் வித்துடலுக்கு மலர்மாலை சூட்டினர்.
இந்நிகழ்வில் வீரவணக்க உரைகளை போர்ப்பயிற்சி ஆசிரியர் மகளிர் துணைப்பொறுப்பாளர் சஞ்சனாவும், சமராய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் யோ.செ. யோகியும், வடபோர் முனைக்கட்டளை தளபதி கேணல் தீபனும் நிகழ்த்தினர்.
வித்துடல் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுப்படைய மதிப்புடன் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டது.
நெருடல் இணையம்
|