|
சிறிலங்காவின் தென்பகுதியிலும் மலையகத்திலும் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கடும் மழை மற்றும் மண் சரிவினால் இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர். 2 லட்சத்திற்கும் அதிகமானனோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
தென்பகுதியில் உள்ள களுத்துறை, காலி, இரத்தினபுரியிலும் மலையகத்தில் நுவரெலியா, கேகாலை, ஹற்றன் போன்ற இடங்களிலே கடும் மழையும் மண்சரிவும் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக களுத்துறை மாவட்டத்திலேயே மழையினாலும் மண்சரிவாலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இங்குள்ள பெரும்பாலான கிராமங்களை வெள்ள நீர் மூழ்கியுள்ளதுடன் பல இடங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மண் சரிவுகளால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
களுத்துறை புளத் சிங்கள என்ற இடத்தில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் தவிர ஏனையோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் மண்சரிவில் சிக்கியும் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறையில் களுகங்கை பெருக்கெடுத்தோடுவதாலும் இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளமும் களுத்துறை ஊடாகவே வழிந்தோடுவதால் களுத்துறைப் பகுதியில் பெரும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மேற்படி பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் வெள்ள மற்றும் மண்சரிவு அபாயம் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நெருடல் இணையம்
|