|
ஒரு தலைமையின் கீழ் அணிதிரளும் தமிழினம் அகலக்கால் வைக்கும் சிங்களத்தினை அழிக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி வானொலியான புலிகளின் குரலின் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையில் கடந்த வாரம் நடைபெற்ற புலிகளின் குரலின் முத்தமிழ் கலையரங்கில் புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன் ஆற்றிய சிறப்புரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்த மண்ணில் தொடர்ச்சியான போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்தப் போராட்டத்தின் வளர்ச்சிப் பாதையில் இந்த முல்லைத்தீவு மண் கணிசமான பங்காற்றியிருக்கின்றது.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை இந்த மண் காத்திருக்கின்றது. இந்த மண்ணில்தான் இந்தியப்படையின் ஆக்கிரமிப்பு காலத்தில் எமது விடுதலைப் போராட்டத்தின் உயிர் தக்கவைக்கப்பட்டது.
இந்த மண்ணில் இன்று மிகப்பெரிய போர் தொடங்கியிருக்கின்றது.
1983 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மக்கள் இந்த மண்ணில் ஏதிலிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களிடம் ஏன் இன்னும் எமது இடங்களைப் பிடிக்கவில்லை? என்ற கேள்வி உண்டு. அது நியாயமான கேள்வி. இந்தக் கேள்விகளுக்கான விடையாக இன்று களமுனையில் இருக்கின்ற நிலவரங்களை நீங்கள் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும்.
ஐந்து மாவட்டங்கள் உள்ளடங்கிய இந்த வன்னிப் பிராந்தியத்தில ஏறக்குறைய நான்கு லட்சம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நான்கு லட்சம் மக்களுக்குள் இருந்துதான் இந்த விடுதலைப் போராட்டம் தனது பலத்தைப் பெற்று, ஒட்டுமொத்தமான சிறிலங்காப் படையோடும் உலக ஆதரவோடு நின்று கொண்டிருக்கின்ற சிங்களப் பேரினவாத அரசுடனும் போரிட்டுக் கொண்டிருக்கின்றது.
சிறிலங்கா அரசாங்கத்திடம் 12 டிவிசன் படையினர் இருக்கின்றார்கள். 12 டிவிசன் படையில் மணலாற்றில் 59 ஆவது டிவிசன் படை சண்டையிடுகின்றது.
இந்த 59 ஆவது டிவிசனுக்கு ஆதரவாக 53 ஆவது படையணியில் இருந்து சிறப்பு அணி ஒன்று இங்கு வந்து நிற்கின்றது.
இவற்றிற்கும் மேலாக சிங்களக் கிராமத்தின் பாதுகாப்பிற்காக மட்டக்களப்பில் நிலை கொண்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினர் வந்து நிற்கின்றார்கள்.
வவுனியாவில் 58 ஆவது டிவிசன் படையினரும் மன்னாரில் 57 ஆவது டிவிசன் படையினரும் நிற்கின்றார்கள்.
தொடர்ச்சியாக ஓராண்டுக்கும் மேலாகப் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற மன்னார் பாலாவிப் பெருங்கடலில் இருந்து உங்கள் கொக்குத்தொடுவாய்ப் பெருங்கடல் வரைக்கும் 142 கி.மீ காப்பரண்கள் தொடராக அமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தொடரான காப்பரண்களில் எதிரி வந்து தொடராக முட்டிக் கொண்டிருக்கின்றான். எங்கு போராளிகள் இல்லையோ அதற்கு ஊடாக எதிரி நுழையப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மணலாற்றில் எமது முன்னணிக் காப்பரணை எதிரி வந்து தாக்கினான். எமது புதிய போராளிகள் காட்டுச் சண்டையில் தாக்குதலைத் தொடுத்தார்கள். எதிரிக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தினார்கள்.
மணலாறு குறித்தும் காட்டு வாழ்க்கை குறித்தும் காட்டிற்குள் உள்ள காப்பரண்கள் குறித்தும் உங்களுக்கு நன்கு தெரியும். இதற்குள் தான் எமது போராளிகள் நிற்கின்றார்கள் என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த இடத்திற்குள்தான் சண்டை நடைபெறுகின்றது. தொடர்ச்சியாக அதற்குள் சண்டை நடைபெற்று வருகின்றது.
எதிரி முன்னேறி நாயாற்றைப் பிடிக்கலாம், முல்லைத்தீவைப் பிடிக்கலாம் என்று சொல்லி மிகப் பெரிய போர் அறிவித்தலை விடுகின்றான். அவன் இந்த மண்ணை நோக்கி உங்களின் இருப்பையும் வாழ்விடங்களை நோக்கியும் நகர்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றான். நகர விடாமல் அங்கு போராளிகள் நின்று வீராவேசத் தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
வட போர்முனையைப் பார்த்தால் நாகர்கோவில் தொடக்கம் கிளாலி வரையும் ஏறக்குறைய 14 கி.மீ முன்னனிக் காப்பரண்கள் இருக்கின்றன. அதற்கு முன்பாக 36,000 சிங்களப்படையினர் நிற்கின்றார்கள். அதற்குள் தான் ஆறு லட்சம் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
எமது தலைவர் உங்களின் மனங்களில் வாழ்ந்து வழி காட்டிக்கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள், வலிந்த தாக்குதல்களை தமிழர் சேனைகளை வைத்து எவ்வெப்போது எங்கெங்கே மேற்கொண்டார் என்பதனை நாம் நினைவில் இருத்திப் பார்க்க வேண்டும்.
நாம் பின்னடைவுகளைச் சந்தித்திருக்கின்றோம். ஒரு பின்னடைவை சந்தித்தால் அதற்கு அடுத்த கட்டமாக ஒரு பாய்ச்சலைச் செய்திருக்கின்றோம். யாழ். குடாநாட்டை விட்டு வந்த பின்பு முல்லைத்தீவுப் பட்டணத்தை மீட்டோம். 1,200 படையினரை சாய்த்தோம். அதற்கு அடுத்த கட்டமாக பன்றிக்கெய்தகுளம் வவுனியாவில் இருந்து தொடங்கிய ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் சிங்களப்படை படிப்படியாக அகலக் கால் வைத்து வந்தது.
1996 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் "அகலக் கால் வைக்கின்ற சிங்களப்படை அழியப் போகின்றது" என்று சொன்னார்.
ஓயாத அலைகள் - 02 நடவடிக்கையில் கிளிநொச்சி நகரம் மீட்கப்பட்டது. ஆயிரக்கணக்கான படையினர் அங்கும் இல்லாது ஒழிக்கப்பட்டனர்.
எமது வலிந்த தாக்குதல் மூலம் கிளிநொச்சி நகரம் மீட்கப்பட்டது. அடுத்த கட்டமாக ஓயாத அலைகள் - 03 நடவடிக்கை நடைபெற்றது. அதற்கு முன்பாக இந்த மைதானத்தில் இருந்து எல்லைப்படையை எல்லைக்கு வழி அனுப்பினீர்கள். போராடக்கூடிய குடும்பத்தவர் பலர் எல்லைக்குப் போனார்கள். எல்லயில் நின்ற போராளிகள் கிளம்பினார்கள், ஒத்திகை பார்த்தார்கள்.
ஒத்திகைக்குப் பிற்பாடு ஒட்டுசுட்டானில் தொடங்கிய ஓயாத அலை - 03 நடவடிக்கையில் 300 ஆண்டுகால அடிமைச்சின்னமாக இருந்த ஆனையிறவுத் தளம் மீட்டு, யாழ்ப்பாணத்தின் வாசல் வரை சென்றது.
தலைவருக்கும் போராட்டத்திற்கும் நீங்கள் தந்த ஒத்துழைப்பே இந்த வெற்றிக்குக் காரணமாகும். தலைவர் மக்களின் ஒவ்வாரு விடயத்திலும் மிகவும் ஆழமாக அக்கறை செலுத்துகின்றார். ஒவ்வொருவரிலும் தனித்தனி பற்று வைத்துள்ளார்.
நாம், பெரும் படையணியை உருவாக்குவோம் எனச் சிங்களமும் உலகமும் எதிர்பார்க்கவில்லை. மேலும் எமது தற்கொடைப் போராளிகளைக் கண்டு சிங்களமும், உலகமும் அஞ்சுகின்றன.
விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என அழைத்த உலகின் பார்வை இன்று மாறி வருகின்றது.
எமது போராட்டத்தின் நியாயத்தை முழுமையாக இல்லாது போனாலும் ஓரளவு ஏற்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவின் தமிழகத்தில் எமக்கான ஆதரவு கூடி வருகின்றது. நாம், ஜெயசிக்குறு காலத்தில அல்லது அதற்கு முன்னைய காலத்தில் எமது கட்டுப்பாட்டுக்குள் இருந்த மக்களுக்கு மட்டும் தெரிந்த செய்திகள் வெளியே சொல்ல முறையான வழியில்லை.
ஆனால், சமாதான காலத்தில் தலைவர், எமது ஊடகத்தை உலகம் முழுதும் விரிவாக்கம் செய்தார். தலைவர் இந்த சமாதான காலத்துக்குள் அரசியல் போராளிகளை உலகம் முழுக்க அனுப்பி அங்கு புலம்பெயர்ந்த மக்களுக்கு அரசியல் விழிப்பூட்டினர்.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என இன்று தமிழர்கள் எல்லோரும் ஒரே தலைமையின் கீழ் அணிதிரண்டுள்ளனர்.
தலைவரின் வழிகாட்டலை ஏற்று எல்லோருமே அணிதிரண்டு விட்டார்கள். தமிழீழம் கிடைக்கின்ற ஒரு சாதகமான சூழல் உள்ள நேரம் இது. மக்கள் ஒன்றுதிரண்டு விட்டார்கள்.
எம்மைப் பயங்கரவாதிகள் என்ற உலகம் எம்மை ஏற்கும் நிலையை உருவாக்கியுள்ளார். எம்மை எதிர்த்துப் போரிட்ட சிங்களப் படை பலவீனமடைகின்றது. பொருளாதார ரீதியாக அந்த அரசு சாய்கின்ற நிலையில் உள்ளது.
சிங்களப்படைகள் திக்குமுக்காடுகின்றனர்.
23.04.08 இல் நடந்த சமரில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் சிங்களப்படை பெரும் இழப்பைச் சந்தித்தது.
மன்னாரிலும் மணலாற்றிலும் இழப்புக்களைத் தொடர்ச்சியாகச் சந்திக்கின்றனர்.
எல்லையில் நாம் பலமாய் உள்ளோம். கடலிலும் நாம் பலமாய் உள்ளோம்.
புதிய போராளிகள் தொடர்ச்சியான சண்டைகளால் விரைவாகப் பட்டறிவுமிக்க போராளிகளாக மாறி வருகின்றனர்.
இந்த வெளிப்பாடுகளில் ஒன்றே 23.04.08 இல் நடைபெற்ற சமரும் சிங்களத்தின் தோல்வியுமாகும். நடைபெறும் சண்டைகளால் எமக்கு இழப்புக்கள் ஏற்படுகின்றன. அதேவேளை எதிரியோ பெருமளவில் இழப்புக்களைச் சந்திக்கின்றான்.
எமது இயக்கத்தின் கண்ணிவெடி வயல்கள், பொறிவெடி வயல்கள், பதுங்கியிருந்து தாக்குகின்ற தந்திரம் போன்றவையும் பற்றாலியன், பற்றாலியனாக சிங்களப்படையினர் வெளியேற்றப்படுகின்றார்கள்.
அன்பான உறவுகளே!
களத்தில் நிற்கும் உங்கள் போராளிகள் தொடர்பாகவும் அவர்களின் அபாரமான சாதனைகள் பற்றியும் களச்சூழல் பற்றியும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் கொடுத்து அனுப்பும் உலருணவு அவர்களுக்கு முக்கிய உணவாக உள்ளது. அது சுவையாய் இருக்கின்றது. அதில் உங்களின் முகங்களை போராளிகள் காண்கிறார்கள்.
களத்தில நின்று போராடுகின்ற ஒவ்வொரு போராளிக்கும் மிகப்பொரிய வரலாறு இருக்கின்றது. சண்டை பிடிக்கும் போராளிகளையும் விழுப்புண் அடைந்த போராளிகளையும் சந்தித்தேன். அவர்களின் வீரமிகு செயற்பாடுகளை கேட்க உண்மையில் எமக்கு மெய்சிலிர்த்தது.
தொடக்க காலத்தில் நாம் சண்டை பிடிக்கும் போது நாம் பயந்திருக்கின்றோம். சில களத்தினை விட்டுட்டு ஓடி இருக்கின்றோம். பின்பு அச்சம் தெளிந்து போராடினோம். போராடாது விட்டால் நாம் அழிவோம். எதிர்ப்பவனை விட ஒடுபவன் விரைவில் அழிவான்.
இன்று அதில் போராளிகள் நன்கு நிலை எடுத்து எதிரியை சுட்டுக்கொல்கின்றார்கள். எதிரியின் சூட்டுக்கு இலக்காகாமல் தம்மை முடிந்த வரையில் காக்கின்றார்கள்.
போரில் சாவு வரும். அந்தச் சாவை போராளி வீரச்சாவாக ஏற்கின்றான். முடிந்த வரையில் போராடுகின்றான். சிலவேளைகளில் ஏதோ ஒரு களமுனையில் தவிர்க்க முடியாமல் அவன் மார்பில் குண்டு ஏந்தி வீரச்சாவு அடைகின்றான். "புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்" என்று சொல்லியபடி இந்த மண்ணை வீழ்ந்து முத்தமிடுகின்றான்.
அந்தப் புனித வித்துடலை மரியாதையுடன் விதைக்கின்றோம். சாதனை படைத்தவனை பத்திரமாகக் கொண்டுபோய் அவன் அம்மாவிடம் கொடுங்கள், அவனின் வரலாற்றை அவன் உறவுகளுக்குச் சொல்லி வித்துடல் விதைக்கும் வரை நின்றுவிட்டு வரவும் என்று சொல்லி தளபதி அனுப்பி விடுகின்றார்.
சண்டையில் பசியோடு நின்றவன், தனது சகதோழன் வீரச்சாவடைந்தான் எனும் தவிப்போடு, பட்டினியோடு ஒரு மிடறு தண்ணீர் கூட குடிக்காமல் களத்தில் இருந்து தவியாத் தவித்து ஓடிவருகின்றான். வித்துடலுடன் பக்கத்தில் நிற்கின்றான். இந்த மாவீரனின் வரலாறைச் சொல்லவேண்டும், சாதனை படைத்தவன் என்று விளக்கவேண்டும் என்று அவன் முயற்சிக்கின்றான். ஆனால் வீரச்சாவு வீட்டில் சொல்ல முடியவில்லை. ஏற்ற சூழலும் இல்லை. தோழனின் நினைவுகளோடு உடனடியாக செல்கின்றான், மீண்டும் களமாடுகின்றான்.
நாம் எல்லோரும் ஒன்று திரண்டு ஒரு முகமாக நிற்போனால் உறுதியாக விரைவில் சுதந்திர தமிழீழத்தை அடைய முடியும். எமது தேசியத் தலைவர் ஏறத்தாழ 36 ஆண்டுகள், நாளும் பொழுதும் இந்த மண்ணின் விடுதலைக்காய் உழைத்து வருகின்றார். அவர் மட்டுமல்ல அவரது குடும்பமுமே போராட்டத்திற்காக உழைக்கின்றது.
ஏற்கனவே நான் கூறியது போன்று, தமிழீழ மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து, ஒருமுகப்பட்டுப் போராடுவோம். உலக வரலாற்றில் ஒரு பெருந் தலைவராக, விடுதலை வீரராக மதிக்கப்படும் எமது தேசியத் தலைவரின் கீழ் ஒன்றிணைந்து போராடுவோம். உறுதியாகத் தமிழீழம் காண்போம் என்றார் அவர்.
நெருடல் இணையம்
|