|
படைத் தரப்பில் பெரும் உயிரிழப்பு |
|
|
|
Sunday, 08 June 2008 |
|
மன்னார் வவுனியா மாவட்டங்களில் சிறிலங்காப் படைத்தரப்பு மேற்கொண்ட பல பாரிய படை நகர்வுகளை விடுதலைப்புலிகள் உக்கிர எதிர்த்தாக்குதல் மூலம் முறியடித்தனர். களமுனைகளில் ஏற்பட்ட
பெரும் உயிரிழப்புக்களை அடுத்துப் படைத்தரப்பினர் தமது பழைய நிலைகளுக்குத் தப்பியோடினர்.
இதில் மன்னாரில் சிறிலங்காப்படையினர் மேற்கொண்ட இரண்டு பெருமெடுப்பிலான முன்நகர்வு முயற்சிகள் தமிழீழ விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு படையினருக்குப் பெரும் உயிரிழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மூர்க்கத்தனமாக முன்நர்ந்த படையினர் பலத்த எதிர்தாக்குதல்களால் தமது நிலைகளிற்குத் தப்பியோடினர்.
முதலாவது முன்நகர்வு நடவடிக்கையை நேற்றுக் காலை 10.30 மணிக்குச் சிறிலங்காப் படையினர் ஆரம்பித்தனர். பெரியமடுக்குளத்தின் வலதுகரையை நோக்கிய இந்தப் படைநடவடிக்கைக்கு படைப் பின்தளங்களில் இருந்து மிகப்பலமான ஆட்லெறி, மோட்டர்களின் செறிவான சூட்டாதரவுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஆதரவுடன் கனரகப் போர்த்தளபாடங்களின் பலப்பிரயோகத்துடனும் படையினர் முன்நகர்ந்தனர்.
இந்த நிலையில் முன்நகரும் படையினருக்கும் விடுதலைப்புலிகளின் முறியடிப்பு அணிகளுக்கும் இடையில் கடுமையான சண்டைகள் இடம்பெற்றன. இதன் போது படையினருக்குப் பெரும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. மாலை 3.00 மணியளவில் படையினர் தமது நிலைகளிற்குப் பின்வாங்கிச் சென்றுள்ளனர்.
இந்த முன்நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுக் கொண்டிருந்த சமநேரத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு பாலம்பிட்டியில் இருந்து பெரியமடு நோக்கி மற்றொரு முன்நகர்வைப் படையினர் மேற்கொண்டனர்.
ஆட்லெறி, மோட்டார்களின் செறிவான சூட்டாதரவுடன் முன்நகர்ந்த படையினர் விடுதலைப்பலிகளின் முறியடிப்பு அணிகளின் தாக்குதல்களில் பெரும் இழப்புக்களைச் சந்தித்தனர். விடுதலைப்புலிகளின் தாக்குதல்களிற்கு ஈடுகொடுக்க முடியாத படையினர் தமது நிலைகளிற்குப் பின்வாங்கிச் சென்றுள்ளனர்.
விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்ட இந்த இரு படை நடவடிக்கைகளிலும் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பெருமளவான படையினரை ஏற்றியிறக்கும் நடவடிக்கைகளில் சிறிலங்காப் படையினரின் உலங்கு வானூர்திகள் தொடர்ச்சியாக ஈடுப்பட்ட வண்ணம் இருந்ததாக களமுனைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, வவுனியா குஞ்சுக்குளத்தில் சிறிலங்காப்படையினர் மேற்கொண்ட மும்முனை முன்நகர்வு முயற்சிகளும் விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதுடன் ஏழுக்கும் அதிகப்படையினர் காயமடைந்துள்ளனர்.
நேற்றுப் பகல் 12.30 மணிக்கு ஆட்லெறி, மோட்டார்களின் செறிவான சூட்டாதரவுடன் குஞ்சுக்குளம் முன்னரணை இலக்குவைத்துப் படையினர் மூன்று முனைகளில் முன்நகர்வை மேற்கொண்டனர். இதற்கு எதிராக விடுதலைப்புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 5.25 மணிவரைக்கும் குறித்த பகுதிகளில் கடுமையான சண்டைகள் இடம்பெற்றன.
இச்சண்டைகளின் போது நான்கிற்கும் அதிக படையினர் கொல்லப்பட்டும் ஏழிற்கும் அதிக படையினர் காயமடைந்துமுள்ளனர். இதனை அடுத்து படையினர் தமது நிலைகளிற்குப் பின்வாங்கிச் சென்றுள்ளனர்.
நெருடல் இணையம்
|