|
வன்னிக்குச் சென்று சமாதான முயற்சிகள் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்துவதற்கு நோர்வே அனுசரணையாளர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு பேச்சு மேசைக்கு வரத்தயார் என்று அறிவித்தால் மட்டுமே அமைதி முயற்சிகளுக்கு சாத்தியம் உண்டு என்றும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் சிறிலங்கா அரசு சார்பாக கருத்து வெளியிட்டுள்ள அரசின் சமாதான செயலக ஓருங்கிணைப்பு தலைவர் றஜீவ விஜயசிங்க மேலும் கூறியுள்ளதாவது:
அமைதி முயற்சிகள் தொடர்பாக வன்னி சென்று விடுதலைப் புலிகளுடன் பேசி தனது பணிகளை மேற்கொள்ள சிறிலங்காவின் அமைதி முயற்சிகளுக்கான சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பெளயர் எம்மிடம் அனுமதி கோரியிருந்தார்.
ஆனால், அவர் வன்னிக்கு ஏன் போகிறார்? விடுதலைப் புலிகளுடன் போய் அவர் என்ன பேசப்போகிறார் போன்ற விடயங்கள் அடங்கிய தெளிவான விளக்கம் எமக்கு தரப்பட வேண்டும்.
ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு போர் நிறுத்தத்தை கடைப்பிடிப்பது என்ற உத்தரவாதத்தை விடுதலைப் புலிகள் எமக்கு தந்தால் மாத்திரமே தீர்வை நோக்கிய அமைதி முயற்சிகளை ஆரம்பிக்க முடியும். இதற்கே இணங்காதவர்களுடன் பேச்சு மேசையில் இணக்கப்பாடு பற்றி எப்படிப் பேசுவது?
வன்னிக்கு ஜோன் ஹன்சன் பெளயர் சென்றால், புலிகள் அவரை புகைப்படம் எடுத்துவிட்டு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை ஜோன் ஹன்சன் பெளயர் பார்வையிட்டார் என்று கூறுவர். இந்தப் பிரசார வேலைகளுக்கு எல்லாம் அரசு தயார் இல்லை என்றார் அவர்.
சமாதான முயற்சிகளுக்கு சிறிலங்கா அரசு தனது கதவுகளை திறந்து வைத்துள்ளதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ள வேளையில், அவரது அரசின் சமாதான செயலகப் பணிப்பாளர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
நெருடல் இணையம்
|