|
மன்னாரில் சிறிலங்காப் படையினரின் இருமுனைகளில் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுச் சிறிலங்காப் படையினருக்கு இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
மன்னாரின் பாலம்பிட்டி முதன்மை வீதி ஊடாக நேற்று வியாழக்கிழமை காலை 8:00 மணியளவில் கனரக சூட்டாதரவுடன் முன்னேறிய படையினர் மீது 30 நிமிட எதிர்த்தாக்குதல் நடத்திப் படையினரின் முன்னேற்றத்தை விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்திப் படையினரைப் பழைய நிலைகளுக்கு விரட்டியடித்தனர்.
இத்தாக்குதலில் 6 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 5- க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
அதேநேரம், மன்னார் பெரியமடுவில் இருந்து சிறாட்டிக்குளம் நோக்கி நேற்றுப் பிற்பகல் 3:00 மணியளவில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் வழிமறிப்புத் தாக்குதலை நடத்தினர்.
சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்ற எதிர்த்தாக்குதலில் படையினருக்குப் பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டது. அதனையடுத்து முன்நகர்வினைக் கைவிட்டுப் படையினர் பின்வாங்கிச் சென்றனர் என்றார் அவர்.
அத்துடன் மன்னார் மினுக்கன்குளப் பகுதியில் காவலரண்கள் அமைக்கும் பணிகளில் நேற்று முன்தினம் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை இராணுவத்தினரின் டோசர் வாகனமொன்றும் விடுதலைப் புலிகளின் தாக்குலுக்கிலக்காகிச் சேதமடைந்தது.
நெருடல் இணையம்
|