|
தமிழீழ தேசியத் தலைவரின் தலைமையில், தமிழினம் விடுதலை பெறும் காலம் நெருங்கி வருவதாக, பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை கற்சிலைமடுப் பகுதியில் இடம்பெற்ற, ஒட்டுசுட்டான் - நெடுங்கேணி பிரதேச தேசிய பணிக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், வன்னியின் யுத்த களமுனைகளில், படுதோல்வியை சிறீலங்கா படைகள் தழுவி வருவதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
விடுதலைப் போராட்டத்திற்கு, அவ்வப்பொழுது சோதனைகள் - சவால்கள் ஏற்படும் வேளைகளில், மக்கள் அணிதிரண்டு விடுதலைப் போராட்டத்தை வெற்றிப் பாதையூடாக திருப்பி விடுவது, விடுதலைப் போராட்டத்தின் பாரம்பரியம் மட்டுமன்றி, மக்களின் பாரம்பரிய பண்புகளின் ஒன்று என்றும், பா.நடேசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழீழ தாயகப் பகுதிகளை ஆக்கிரமித்து, தமிழினத்தை அழிக்கும் நோக்கத்துடன் படையெடுத்துள்ள சிறீலங்கா படைகளுக்கு எதிராக, பெரும் யுத்தத்தில் தமது விடுதலை இயக்கம் குதித்துள்ள நிலையில் இதற்குப் பலல் சேர்த்து, அமைப்பு ரீதியாக மக்கள் அணிதிரண்டு நிற்பதாகவும், பா.நடேசன் சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு எதிராக, முழுப் படை பலத்தையும் சிறீலங்கா அரசாங்கம் பிரயோகித்து வரும் நிலையில் சகல களமுனைகளின் பின்புலத்திலும் நிற்கும் மக்கள், போராளிகளுக்கு சமமாக செயற்பட்டு வருவதாகவும், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு, இரண்டாயிரம் படையினர் பலியானதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கில் காயமடைந்து, நாள்தோறும் கள முனைகளை விட்டு படையினர் வெளியேறி வருவதாகவும், பா.நடேசன் நினைவூட்டியுள்ளார். தற்பொழுது சிங்கள தேசத்தின் பொருண்மியம் வீழ்ச்சியடைந்து, உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள சூழலில், கடன் வாங்குவதற்காக வெளிநாடுகளுக்கு சிங்கள அமைச்சர்கள் ஓடிக்கொண்டிருப்பதாகவும், பா.நடேசன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், களமுனைகளில் சிறீலங்கா படைகள் படுதோல்வியைத் தழுவி வரும் நிலையில், மகிந்த அரசு ஆட்டம் கண்டிருப்பதாகவும், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த வகையில், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையில், தமிழினம் விடுதலை பெறும்
காலம் நெருங்கி வருவதாகவும், பா.நடேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நெருடல் இணையம்
|