|
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு வந்தால் தான் சமாதானப் பேச்சு என்று சிறிலங்கா அரசாங்கம் கடந்த வாரம் விடுத்திருந்த அறிவிப்பை அடியோடு நிராகரித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகள், சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான போரில் தாம் வெற்றி பெறுவோம் என்று சூளுரைத்துள்ளனர்.
அனைத்துலக ஊடகமான ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நிலவும் இராணுவச் சமநிலை மற்றும் சமதரப்பு அந்தஸ்து ஆகியவற்றை குழப்பும் விதத்தில் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையும் சமாதானப் முயற்சிகளுக்கு ஆரோக்கியமாக அமையாது.
இராணுவச் சமநிலையும் சமதரப்பு அந்தஸ்தும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு மிக, மிக அவசியமானவை.
விடுதலைப் புலிகள் தற்போது சமர்க்களங்களில் தற்காப்பு நடவடிக்கையிலேயே ஈடுபட்டு வருகின்றனர். எமது மக்களின் உதவியோடு சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான இப்போரில் நாம் நிச்சயம் வெற்றிபெறுவோம்.
சிறிலங்கா இராணுவத்தால் விடுதலைப் புலிகளை மரபுவழிப் போரில் வெற்றிகொள்ள முடியவில்லை.
'போர்க்களத்தில் மரபுவழி இராணுவம் வெற்றி பெறாவிட்டால் அது தோற்றதற்குச் சமன். ஆனால் விடுதலைப் போராட்ட அமைப்பு ஒன்று தோல்வியடையாது விட்டால் அது வென்றதற்குச் சமன். இந்தப் பிரபலமான வாக்கியத்தினை இந்த இடத்தில் நினைவுகூர விரும்புகின்றேன் என்றார் அவர்.
நெருடல் இணையம்
|