|
கால நீட்சியுடைய விடுதலைப் போராட்டத்தின் வெற்றி தவிர்க்க முடியாதது என்று நோர்வேயில் உள்ள எரித்திரிய அமைப்பின் பிரதிநிதியான சாம் யாறட் தெரிவித்துள்ளார்.
நோர்வேயில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் அவர் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்நிகழ்வுக்கு என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நாளில் உங்களோடு எனது நேரத்தைச் செலவிடுவதில் மகிழ்வடைகின்றேன்.
தமிழ் மக்களின் கோரிக்கைகள், தமிழ் மக்களின் தன்னாட்சியுரிமை, நீதியான சமாதானத்தின் மீதான அவர்களின் நாளாந்த தேடல் ஆகியவற்றுக்கு எரித்திரிய மக்களின் ஆதரவு என்றும் உண்டு என்பதை, நோர்வேயில் உள்ள எரித்திரிய சமூகத்தின் சார்பில் நான் இங்கு வலியுறுத்திக் கூறுகின்றேன்.
உங்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பது என்பது அடிப்படையில் நியாயமானது. ஏனெனில் உங்களை ஒத்த சூழ்சிலையில் நாமும் இருந்தோம்.
அந்நிலை மாறி நீண்ட காலங்கள் கழிந்து விடவில்லை. எரித்திரிய மக்கள் மீதான எதியோப்பியாவின் நீதியற்ற நடவடிக்கைகளுக்காக நாம் போராட வேண்டியிருந்தது.
எமது விடுதலைப் போராட்டம் 30 ஆண்டுகள் நீடித்தது. ஆனபோதும் எமது வெற்றி தவிர்க்கப்பட முடியாத ஒன்று என்பதை எப்போதும் நாம் அறிந்திருந்தோம்.
1977 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் எதியோப்பியாவுடன் கூட்டுச் சேர்ந்ததன் விளைவாக விடுவிக்கப்பட்ட எமது பிரதேசங்களை பறிகொடுக்க நேர்ந்தது. ஆனபோதும் எமது நம்பிக்கையை நாம் இழக்கவில்லை.
இப்புறநிலையில் எரித்திரிய மக்களாகிய நாம் "எமது விடுதலைக்கான போராட்டம் கால நீட்சியுடையது, ஆனால் எமது வெற்றி தவிர்க்கப்பட முடியாதது" என்ற வாசகத்தை எமது விடுதலைக்கான தாரக மந்திரமாக வரித்துக் கொண்டோம்.
ஆகையினால் எரித்திரிய மக்களாகிய நாம், உங்களின் சுதந்திரத்துக்கான போராட்டத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஏனெனில் உங்களின் போராட்டம் தன்னாட்சியுரிமையையும், சமூக நீதியையும் அடிப்படை இலட்சியமாகக் கொண்டுள்ளது.
ஈற்றில் நோர்வேயில் வாழும் உங்களின் கடும் உழைப்பிற்கும், சிறந்த ஒருங்கிணைப்பிற்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நோர்வேயில் உள்ள புலம்பெயர் சமூகங்களுக்கு நீங்கள் முன்மாதிரியாக திகழ்கிறீர்கள் என்றார் அவர்.
நெருடல் இணையம்
|