|
சுமார் இரண்டு வருடங்களுக்கு பின்னர் இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த விருப்பம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச இது தொடர்பாக கருத்தை ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார்.
பெரும்பாலான தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு என்ற ரீதியில் இந்தப் பேச்சுவார்த்தையை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கடந்த ஜனவரியில் முறிந்துபோன போர்நிறுத்த உடன்படிக்கையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான கருத்தை அவர் நிராகரித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தாம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசத்தயார் என குறிப்பிட்டிருந்தமையையும் பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆயுதங்களைக் கீழே வைத்தால் மாத்திரமே தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தப்படும் என ஜனாதிபதி கூறியிருந்தமை தொடர்பில் அவரிடம் கேட்டபோது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது நிபந்தனைகள் செயற்படுத்தப்படவேண்டும் எனப் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர். எனினும் பெரும்பாலான தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்ற அடிப்படையில் அவர்களுடன் பேசமுடியும். ஜனாதிபதியும் இதனையே முன்னர் வலியுறுத்தியிருந்தார்.
எனினும் துரதிஷ்டவசமாக அவர்கள் செய்கின்ற காரியங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நெருடல் இணையம்
|